Tuesday, October 16, 2007

சொக்கவைக்கும் அழகுணர்ச்சி மனித உணர்வுகள் The Classic.





இயற்கையுடன் ஒன்றிப் போதல் என்பது எல்லோராலும் முடியாத ஒன்று. இயற்கை அழகியலை புரிந்து கொண்டு படைப்பில் ஈடுபடுவது என்பது ஒரு கலையே. அழகியல் என்பது ஓர் உயிர் இயல்பு. அதனுள் புகுந்து அதனைச் சரிவரப் புரிந்து கொள்பவர்களினால் மட்டுமே ஆக்கபூர்வமான, யதார்த்தத்துடன் கூடிய ஒரு படைப்பை மற்றவர்கள் முன், வைக்க முடிகிறது.

சாதாரண ஒரு கல்லை சிற்பி ஒருவன் அழகுணர்வுடனும், புத்திசாதுரியத்துடனும் செதுக்கும்போதே அது உயிர்பெறுகிறது. தேவையில்லாத பாகங்களை அகற்றி தேவையானவற்றை சேர்த்துக் கொள்ளும் போது சிற்பம் அழகுற மிளிர்வதை நாம் காண முடிகிறது. காதல் என்பதும் அழகியலுடன் கூடிய உணர்வே.


இயற்கையையையும், அதனுடன் ஒன்றிய மனிதஉணர்வுகளையும் தங்களுடைய திரைப்படங்களில் கொண்டு வருவதில் கொரிய இயக்குனர்கள் முன் மாதிரியாக உள்ளார்கள். அனேகமான கொரியத் திரைப்படங்களில் இதனைக் காண முடிகிறது. அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் அழகியலை மையமாக வைத்து மனித உணர்வுகளைப் பின்னிச் செல்வதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அந்தவகையில் முக்கோண காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படமே The Classic . ஒரு படைப்பின் வடிவத்தில் மட்டுமல்லாது உள்ளடக்கத்திலும் அழகியலுக்கும, உயிரியலுக்கும், அரசியலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தான் சொல்ல வந்ததைத் தெளிவாகவும், காத்திரமாகவும் சொல்லிச் செல்கிறார் கொரிய இயக்குனர் க்வக் ஜே யங் (Kwak Jae-yong) தனது The Classic திரைப்படத்தினூடாக.

கிளாசிக் படம் காதல், நட்பு, விட்டுக் கொடுப்பு, அதனால் ஏற்படும் வலிகள், புரிந்துணர்வு என்னும் மனித இயல்புகளை ஒவ்வொரு கதாபாத்திரத்தினூடாகவும் தத்ரூபமாகக் கொண்டு செல்கிறது. விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு என்பவை மருகிக் கொண்டு போகும் இந்தக் காலகட்டத்தில் அவை மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஆதாரசுருதி போன்றது என்பதையும் இந்தப் படம் வலியுறுத்துகிறது என்றே சொல்ல வேண்டும். இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் பின்னி தாயினதும், மகளதும் காதலை மையமாக ஊடறுத்துச் செல்கிறது இத்திரைப்படம். கதை நேரடியாகச் சொல்லப்படாமல் சுற்றி வளைத்து, தாவிக் குதித்து ஒரு நதியைப் போல் ஓடுகிறது.


பல்கலைக்கழக மாணவியாகிய ஜி ஹே தனது வீட்டைச் சுத்தம் செய்யும் பொழுது தனது தாயினுடைய இளம்பருவ காதல் கடிதங்கள், நாட்குறிப்புகள் அடங்கிய பெட்டி ஒன்றைக் கண்டெடுக்கிறாள். அது முழுவதும் அவளுடைய தாயினால் அவளுடைய இளம் பருவத்துக் காதலனுக்கு எழுதப்பட்ட கடிதங்களாக இருக்கின்றன. ஆர்வமேலீட்டால் அந்தக் கடிதங்களையும், நாட்குறிப்பையும் அவள் படிக்கும், இந்தக் காட்சியுடன் கதை ஜி ஹேயின் தாயினுடைய இறந்த காலத்திற்குள் நுழைகிறது.
இதேவேளை ஜி ஹேயிற்கு சங் மின் என்னும் இளைஞன் மேல் காதல் ஏற்படுகிறது. ஆனால் அவளுக்கு அதனைத் தெரிவிக்க முடியவில்லை. அவளுடைய பலவீனத்தை சங் மின் மேல் காதல் வயப்பட்டுப் போயிருக்கும் அவளுடைய நண்பி பயன்படுத்திக் கொள்கிறாள். தாயினுடைய வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் போலவே அனேக சம்பவங்கள் தன்னுடைய வாழ்க்கையிலும் ஏற்படுவதை அசைபோடும் ஜி ஹேயிற்கு ஆச்சரியம் ஏற்படுகிறது.

இறந்தகாலம் ஜி ஹேயின் தாய் ஜோ ஹீ யினுடைய காதலன் ஜோன் ஹா அவனுடைய நண்பன் ரீ சூ ஆகியோருக்கிடையில் ஓடும் முக்கோணக் காதலைச் சொல்கிறது. ஜோ ஹீக்கும், ரீ சூவிற்கும் அவர்களின் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்படுகிறது. ஆனால் ஜோ ஹீக்கு ஜோன் காவின் மேல் காதல் ஏற்படுகிறது. ஜோ ஹீயின் மீது ரீ சூவும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறான். அது ஜோன் ஹாவுக்குத் தெரிய வரும் போது தனது நண்பனை ஏமாற்றக் கூடாதென எண்ணி தன்னுடைய காதலைச் சொல்லி விடுகிறான். ஆனால் அவர்களுடைய காதல் ரீ சூவுக்கு முன்னமேயே தெரிந்திருந்தது. தான் அன்பளிப்பாக ஜோ ஹீக்குக் கொடுத்த நெக்லஸ் தன்னுடைய நண்பனின் கழுத்தில் இருப்பதை அவதானிக்கும் அவன் அவர்களுக்கிடையிலான காதலையும் புரிந்து கொள்கிறான். நட்புடன் அவர்களின் காதலை ஏற்றுக் கொள்ளும் ரீ சூ தனது நண்பனின் காதலுக்கு உதவி செய்கிறான். தன்னுடைய பெயரில் தனது நண்பனின் காதல் கடிதங்களை ஜோ ஹீயிடம் சேர்ப்பிக்கிறான். இதனைக் கண்டு பிடிக்கும் ஜோ ஹீயினுடைய பெற்றோர் ரீ சூவின் தந்தையிடம் முறையிட தந்தையால் அவன் தண்டனைக்குள்ளாகிறான். அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் அவனை ஜோன் ஹா காப்பாற்றுகிறான். நண்பன் மேல் அளவு கடந்த பிரியம் வைத்திருக்கும் ஜோன் ஹா தன்னால்தானே தன்னுடைய நண்பன் தண்டனை பெற்றான் என்ற குற்றவுணர்வு மேலிட தன்னுடைய காதலியைப் பிரிந்து இராணுவத்தில் சேர்ந்து வியட்னாம் செல்கிறான்.

அங்கு யுத்தத்தில் தவறவிட்ட தன் காதலியின் நெக்லஸை எடுக்கப் போகும் ஜோன் ஹா கண்ணிவெடியில் அகப்பட்டு பார்வையை இழக்கிறான். யுத்தம் முடிந்து கொரியா திருப்பிய அவன் தன்னுடைய காதலி ஜோ ஹீ யைச் சந்திக்க வருகிறான். அவள் ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை என வினவும் அவன் தனக்குத் திருமணமாகிவிட்டதாகவும் கூறுகிறான். அவர்களுடைய சந்திப்பு நட்புடன் முடிவடைகிறது.
இதன் பின் ஜோ ஹீ, ரீசூவைத் திருமணம் செய்கிறாள். தனது மூன்று வயது மகளுடன் கிராமத்திற்கு வரும் அவள் ஜோன் ஹா இறந்து விட்டதைக் கேள்விப்படுகிறாள். அவனின் விருப்பப்படி அவனுடைய அஸ்தி அவர்கள் சந்தித்த அந்த ஆற்றிலே கரைக்கப்படுகிறது. இதன் பின் அவளுடைய திருமணத்தின் பின்தான் ஜோன் ஹா திருமணம் செய்து கொண்டதையும் அவனுக்கு ஒரு மகன் இருப்பதையும் நட்புக்காக அவன் செய்த தியாகத்தினையும் அவன் விட்டுச் சென்ற நாட்குறிப்பின் மூலம் அவள் அறிந்து கொள்கிறாள்.
பின் நிகழ் காலத்துள் வரும் இயக்குனர், ஜி ஹேயின் காதலன் சங் மின் அவளுடைய தாயின் காதலன் ஜோன் ஹாவின் மகன் என்பதைத் தெரிவித்து, ஜி ஹேயையும் அவளின் காதலனையும் அவர்களுடைய பெற்றோர்களின் இளம் பருவ காதல் ஏற்பட்ட அதே கிராமத்தினுள் அழைத்து வந்து, அழகிய இருள் நிறைந்த ஆற்றங்கரையில் நட்சத்திரங்களாய் உலவும் மின்மினிப் பூச்சிகளின் மத்தியில் அவர்களைச் சேர்த்து வைக்கும் ரம்மியக் காட்சியுடன் நமது மனங்களை நிறைவு செய்கிறார்.
மனித உணர்வுகளை மட்டுமல்லாது ஒவ்வொரு காட்சிப் படிமங்களிலும் இயற்கையின் அழகையும் வெகு சிறப்பாக மிளிரச் செய்து எம்முள் சிலிர்ப்பை ஏற்படுத்தும் இயக்குனர், மலைகள், ஏரிகள், ஆறுகள் என்று எழில் கொஞ்சும் தென்கொரியாவின் எல்லாப் பாகத்தையும் எமக்கு அழகுணர்ச்சியுடன் கையளிப்பதிலும் கைதேர்ந்தவராக இருக்கின்றார்.
சாதாரண ஒரு காதல் உணர்வு விட்டுக் கொடுப்பு, பரிதவிப்புகளுடன் கூடிய நட்பின் ஆழத்தினையும் சேர்த்து அழகிய காவியமாகக்கப்பட்டிருப்பது இன்னும் மனிதர்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாக ஒட்டியிருக்கும் மனிதாபிமானத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.

இந்தக் காதல் உணர்வையே எங்களுடைய தமிழ்ச் சினிமா எங்களுக்கு எப்படிக் காட்டுகிறது. காதல் வன்முறையாக, வக்கிரம் நிறைந்ததாக, விட்டுக் கொடுப்பில்லாததாக, இன்னொருத்தனுடைய காதலியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியாவது அடைந்து விடும் துக்கிரித்தனமானதாக, விரும்பாத பெண்ணை கட்டாயப்படுத்தியாவது விரும்ப வைப்பதாக தமிழ்ச் சினிமாவில் காட்டப்படும்போது நமக்கு முகச் சுளிப்பை ஏற்படுத்தி விடுகிறது. காதல் மட்டுமே வாழ்க்கை என்று நினைக்க வைத்து, காதல் காதல் என்று சாகுமளவிற்கு நமது இளைஞர் யுவதிகளிடம் ஒரு போதையை ஊட்டுவதனூடாக தங்களது பணப்பையை நிரப்பிக் கொள்ளும் தமிழ்ச் சினிமா இயக்குனர்கள், மென்மையான, அழகுணர்வுடனான காதலை எமக்குத் தருவதற்குப் பதிலாக வன்முறைக் கலாசாரத்தையல்லவா எமது மூளைகளில் புகுத்துகிறார்கள். இளைஞர்களிடம் வக்கிரமான காதல், காம உணர்வுகளைத் தூண்டிவிடுவதில் தமிழ்ச் சினிமா ஆற்றும் பங்கு குறித்து நாங்கள் வெட்கப்பட வேண்டுமல்லவா?
ஆனால் அதே காதல் உணர்வுகளை வேற்று மொழியில் உள்ள பல படங்கள் மிக யதார்த்தபூர்வமாக மிக எளிமையாக எம் முன்னே வைக்கும் பொழுது அவை எம்மை சொக்கித்தான் போகச் செய்கிறது.

தாயகம் - இலங்கை

















PROVOKED ஐ முன்னிறுத்தி பெண்கள் மீதான வன்முறை குறித்துச் சில குறிப்புகள்!



* கனடாவைச் சேர்ந்த பல்தேவ் முத்தா சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சொல்கிறார், நான்கு தெற்காசியப் பெண்களில் ஒருவர் உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக, பொருளாதார ரீதியாக, உள ரீதியாக. துஸ்பிரயோகம் செய்யப்படுகிறார்களென.

* கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் பெண்களில் பத்து வீதமானவர்கள் கணவரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் என இலங்கையின் பத்திரிகைக் குறிப்பு ஒன்று கூறுகிறது. மகஸின் சிறைச்சாலையில் 550 பெண் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் எட்டுப்பேர் 18வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் என்றும் அந்தக் குறிப்புக் கூறுகிறது.

ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை. பெண்ணாக உருவாக்கப்படுகின்றார் என்கிறார் சிமோன்தி பூவா. உண்மைதான் பெண் பிறக்கும் போதே மூடக்கருத்துக்களை மூட்டையாகத் தொப்புள் கொடியில் கட்டிக் கொண்டு பிறப்பதில்லையே. அவர்களைத் தங்களுக்கு ஏற்றவளாக இந்த சமூகம் உருவாக்கி விடுகின்றது. தாங்கள் விரும்பிய மகளாக, தங்களுக்கு ஏற்ற சகோதரியாக, தங்களுக்கு ஏற்ற காதலியாக, தங்களுக்கு ஏற்ற மனைவியாக, தங்களுக்கு ஏற்ற தாயாக என்று தங்களுக்கேற்றாற் போல அவளை உருவாக்கிக் கொள்கின்றனர். அவளை அவளாக வாழ அனுமதிப்பதில்லையல்லவா?

ஏற்கெனவே நாம் உருவாக்கி வைத்திருக்கும் சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், கலாசாரப் போலிமைகள் எல்லாவற்றினதும் காவியாக அவளை உருவாக்கி விடுகிறோம். பெண் குழந்தையாக இருக்கும் போதே இந்த ‘புடம் போடும்’ பணி ஆரம்பித்து விடுகிறது. பெண்குழந்தையை சுய கௌரவமிக்கவளாக, தனது பிரச்சினைகளைத் தானாகவே எதிர்கொள்பவளாக, தைரியமிக்கவளாக எமது ஆண் குழந்தைகளை வளர்ப்பதைப் போல வளர்ப்பதற்கு எமது பெற்றோர்களால் முடிவதில்லை. அப்படி யாராவது ஒரு பெண் சுயமான ஆளுமையுடன் வளர ஆரம்பித்து விட்டால் அவள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சங்கடங்களும் ஏராளம்.

இந்த நிலையில் ஈழத்தமிழ்ச் சமூகத்தில் பெண் என்பதால் அவள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை விட, போரும் அவள் மீது மேலதிகச் சுமைகளைத் திணித்து விடுகின்றது. கடந்த பத்தாண்டுகளில் போரின் காரணமாக புலம் பெய்ர்ந்த ஈழத் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் இன்னொரு பரிமாணத்தையன. அவர்கள் அடையாளப் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். தங்களது தனித்துவத்தை நிலைநாட்ட அவர்கள் பாரம்பரியங்களுக்குள் சென்று விடுகிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் முன்னேறிய சமூகத்துள் வாழ்ந்தாலும் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்த கலாசாரக்காவியான பெண் தேவைப்படுகிறாள். தாலியும் குங்குமமும் வந்து சேர்ந்து விடுகின்றன. சாதியும் மதமும் இதற்குத் துணைக்கழைக்கப்பட்டு விடுகின்றன.

அங்கு பிறந்து வளர்ந்த பெண்கள் இந்தப் பாத்திரத்திற்குப் பொருந்துவது சற்றுக் கடினம் என்று தெரிந்து கொண்டதால் இங்கிருந்து பெண்களைத் தருவித்து மணம் முடித்துக் கொள்கின்றனர் பெரும்பாலான இளைஞர்கள்.

அந்த வகையில் இங்கிருந்து கூட்டிச் செல்லும் பெண்கள் அங்கு எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஏராளம். அவர்கள் மேற்கு கிழக்கு என்ற இரண்டு வேறுபட்ட கலாசாரங்களுக்கிடையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவ்வாறு சிக்கித் தவித்த ஒரு பெண் சிறையிலேயே தனது சுதந்திரத்தைக் காண்கிறாள். ஜக் மோகன் முந்ராவின் Provoked திரைப்படம் அந்த உண்மைக் கதையை எங்கள் முன் கொண்டு வந்திருக்கிறது.

2001 லண்டன் திரைப்பட விழாவில் பவாந்தர் என்ற என்னுடைய திரைப்படத்தைப் பார்த்துவிட்டு மூன்று சமூக செயற்பாட்டாளர்கள் Circle of Light என்ற புத்தகத்தை வாசிக்கும்படி என்னிடம் தந்தார்கள். அவர்கள் தாங்கள் பெண்களுக்கெதிரான வீட்டு வன்முறைகள் குறித்து செயற்படுவதாக என்னிடம் தெரிவித்தார்கள். லொஸ் ஏஞ்சலுக்குப் போகும் வழியிலேயே நான் அதனை வாசித்து முடித்தேன். சிறையிலிருந்த கிரண்ஜித்திடம் “நீ எப்படி உணருகிறாய்” என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அவள் சொல்கிறாள் “நான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன்” என. சிறையில் அவள் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறாள். இது திரைப்படத்திற்கு ஒரு முக்கியமான அம்சமென நான் உணர்ந்தேன். அப்போதே நான் தீர்மானித்தேன் இதனை நான் படமாக்குவதென என்று கூறுகிறார் இத் திரைப்படத்தின் நெறியாளரான ஜக் மோகன் முந்ரா.

ஏப்ரல் 2007இல் லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் 1989ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை கூறுகிறது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவள் கிரண்ஜித். பல்கலைக்கழகம் செல்ல வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், வழக்கறிஞராக வேண்டும், உலகைச் சுற்றிப் பார்க்க வேண்மென்று பல கனவுகளைச் சுமந்து கொண்டு வாழும் தாய் தந்தையரை இழந்த 19 வயது கிரண்ஜித்திற்கு அவளுடைய கனவுகள் ஒரு நாள் முடிவுக்கு வருகின்றன. லண்டனிலிருந்து அவளுடைய உறவினனான தீபக் என்பவன் வந்ததே அதற்குக் காரணமாகி விடுகிறது. அவளது சகோதரி தீபக்கிற்கு கிரண்ஜித்தைக் கல்யாணம் செய்து வைக்கிறாள். கல்யாணத்தின் போது கிரண்ஜித் தனது சகோதரியிடம் கேட்கிறாள் எனக்கு அவனைத் தெரியாது, என்னுடைய படிப்பு என்னாவது என்று. அவன் நல்லவன் உன்னைத் தொடர்ந்து படிப்பதற்கு அனுமதிப்பான் என அவளுடைய சகோதரி கூறுகிறாள். தனது சகோதரியின் கூற்றை நம்பி கிரண்ஜித் தீபக்கை திருமணம் செய்து லண்டன் செல்கிறாள்.


ஆனால் லண்டன் வாழ்க்கை அவள் நினைத்ததற்கு மாறாக இருக்கிறது. அவள் ‘நல்ல மனைவியாக’ இருக்கவே வேண்டப்படுகிறாள். அவனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் செய்து வைப்பது. அவனுடைய ஆடைகளைத் தோய்த்து உலர்த்தி வைப்பது. அவனுடைய இச்சைக்கு இணங்கிப் போவது. அவனுடைய நண்பர்களுடைய கேளிக்கை விருந்துகளில் ‘நல்ல மனைவி’யைப் போல கலந்து கொள்வது. அவனுக்காகக் குழந்தையைச் சுமப்பது என்று, அவள் அவனுக்காகச் செய்பவைகள் ஏராளம். இப்படி அவனுக்காகவே தனது வாழ்க்கையை வாழ்ந்தவள் ஒரு நாள் தூங்கிக் கொண்டிருக்கும் கணவன் மீது எண்ணெய் ஊற்றி எரித்து விடுகிறாள்.

அவனுக்காகவே வாழ்ந்தவள் ஏன் அவனைக் கொலை செய்தாள்? ஏன் அவ்வாறு அவள் தூண்டப்பட்டாள்?

Provoked திரைப்படம் அதனை விரித்துச் சொல்கிறது.

வெளிப்படையாகப் பார்த்தால் அவள் ஒரு கொலைக் குற்றவாளி. அதுவும் வேறுயாரையுமல்ல, தன்னை லண்டனுக்கு அழைத்து வந்த, தனக்கென ஒரு அழகான வீட்டை வாங்கித் தந்த, தனக்கு உணவளிக்கின்ற, தனக்கு உடுபுடவைகள் வாங்கித் தருகின்ற, சினிமாவுக்கு அழைத்துச் செல்கின்ற என்று தன்னுடைய தேவைகள் எல்லாவற்றையும் கவனிக்கின்ற கணவனைக் கொன்றவள்.

இவற்றையெல்லாம் தாண்டி அவளைத் தூண்டியது எது?

அவனுடனான பத்து வருட வாழ்வில் அவள்பட்ட உடல் உள வதைகளும் வலிகளும் தான் என்று சுருக்கமாகக் கூறிவிட முடியும். ஆனால், அந்தப் பத்து வருடத்தில் என்ன நடந்தது? அவள் எவ்வாறு இம்சைப்படுத்தப்பட்டாள்? அவளுடைய உடலெங்கும் யாருக்கும் காட்டிட முடியாதபடி காயங்கள் ஏற்படக் காரணமென்ன? அவள் எப்படி கணவனாலேயே பலாத்காரப்படுத்தப்பட்டாள்? ஆணாதிக்கமும் அதனூடாகக் கிடைக்கிற அதிகாரமும் அவனுடைய சுயநலமும், பொறாமையும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படி நரகமாக்கி விடுகிறது.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களாக திரைக்கதை விரியும் முறை எங்களை அதிர வைக்கிறது. ஆனால், சட்டத்தின் கண்களுக்கு இவை எதுவுமே அகப்படுவதில்லை. அது மட்டுமல்ல தனது நிலையை எடுத்துச் சொல்லுமளவிற்கு அவளுக்கு துணிவையோ, ஆங்கில அறிவையோ இந்தச் சமூகம் கொடுக்கவும் இல்லை. கணவனைக் கொன்றதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை. ‘இந்த வழக்கில் தற்காப்பு என்பதைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அவள் உடல் ரீதியாகத் தாக்கப்பட்டது அவன் கொல்லப்படுவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர். ஆகவே அந்தக் கொலை தற்பாதுகாப்புக்கானதல்ல, முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்று நீதிமன்றம் கூறி விடுகின்றது. எனவே அவள் சிறை செல்ல நேர்கிறது. இந்த இடத்தில் தான் குறுக்கிடுகிறார்கள் Southall Black Sisters என்ற அமைப்பினர்.


Southall Black Sisters
அமைப்பு 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் Southall இல் நடந்த இனக்கலவரத்தின் போது கட்டியெழுப்பப்பட்டது. இவ்வமைப்பு கறுப்பின மற்றும் ஆசியப் பெண்களுக்கான மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சட்டத்தினால் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் முகமாகவும் உருவாக்கப்பட்டது. அவர்கள் கிரண்ஜித்துக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தார்கள். அந்த வழக்கை மீள எடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார்கள். சிறையிலே இருந்த கிரண்ஜித்தைச் சந்தித்து அவளுக்கு நம்பிக்கையூட்டினார்கள். அவர்கள் கொடுத்த நம்பிக்கை கிரண்ஜித்தை தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றிப் பேச வைக்கிறது. ஆங்கிலத்தை சிறையிலேயே கற்பதனூடாக தன்னை தனக்கு நேர்தவைகளை அவளாகவே வெளிப்படுத்த முடிகிறது.

Southall Black Sisters உடனடியாக கிரண்ஜித்தின் விடுதலைக்காக களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள். ஊடகங்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் இந்த வழக்கில் நேர்ந்த அநீதியை மக்களுக்குக் கொண்டு செல்கின்றனர். கிரண்ஜித்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென்று வேண்டுகின்றனர். சிறையில் இருக்கும் சக பெண் கைதியின் சகோதரரின் உதவியுடன் கிரண்ஜித்தின் வழக்கை திரும்பவும் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்கின்றனர். கொலையை விட அவளை அதற்குத் தூண்டிய காரணங்கள் வலிமையானவை என்பது நிரூபிக்கப்படுகிறது. இவர்களின் அயராத முயற்சியின் காரணமாக இறுதியாக கிரண்ஜித் விடுதலையாகுகிறாள்.

கிரண்ஜித் வழக்கின் தீர்ப்பு பிரிட்டனின் நீதித்துறையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய விவகாரமானது. அவளுடைய மனுவும் வழக்கு விசாரணையும் சட்டங்கள் தொடர்பான முன்னுதாரணமானது. இவ்வழக்கு லண்டனில் வீட்டு வன்முறை தொடர்பான ஒரு முக்கியமான வழக்காக கருதப்பட்டது. அது பிரிட்டிஸ் சட்டத்திலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. ‘Provoked’ எனும் சொல்லின் அர்த்தமே மறுவார்ப்புச் செய்யப்பட்டது.

பிரிட்டன் நீதிமன்றம் முதன்முறையாக ‘பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொண்டதையும், தூண்டப்படுவதற்கு காரணமாக இருந்ததையும் ஏற்றுக் கொண்டது. எப்போதும் பாதிப்புக்காளாகும் பெண் தனது எதிர்ப்பு நடவடிக்கையை உடனடியாக எடுப்பதில்லை என்பதையும் அங்கீகரித்து, காலம் தாழ்த்தியேனும் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கலாம் ஏனெனில் அவளுக்கு எப்போதும் ஒரு பயமிருக்கும், மீண்டும் தான் அவ்வாறு தாக்கப்படலாமென என்பதையும் ஏற்றுக் கொண்டது. அந்த வகையில் இத்திரைப்படம் மிக முக்கியமாகிறது.

சரிநிகர்

செப் - ஒக் 2007