Monday, October 19, 2009

வன்முறைகளால் எழுதப்படும் தீர்ப்புகளும் அப்பாவிப் பெரும்பான்மையினரின் மௌனக் குரல்களும் OCCUPATION 101 – Voices of the Silenced Majority




இயக்குநர்கள்: அப்துல்லா ஒமீஸ், சுபியான் ஒமீஸ் சகோதரர்கள்

உலகில் பல மடங்கு எண்ணிக்கையிலான மனிதர்கள் அகதி முகாம்களில் பயங்கரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே மக்களுக்கான வாழ்க்கை தொலைக்கப்பட்டிருக்கின்றது. அங்கு இன்று சிறுவர்களுக்கான ஒரு இடமில்லை, விளையாடத் தெருக்களில்லை, மரங்களில்லை. ஒன்றுமேயில்லை. அவர்களின் அறிவும் எதிர்காலமும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பட்டினியாலும், குண்டுகளாலும் சிதைக்கப்பட்ட மக்கள் சித்தம் கலங்கிய நிலையில் தற்கொலையை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வரலாறு எப்போதுமே ஏதோ ஒரு வன்முறை நிகழ்வுக்காகக் காத்துக் கொண்டுதானிருக்கிறது போல் படுகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலையும், அகதி முகாம்களுக்குள் முடக்கப்பட்ட எங்களின் மக்களின் வாழ்வும் இதனைத்தானே சொல்கின்றன. காலங்காலமாக அந்த மக்கள் வாழ்ந்த இடங்களைத் தகர்த்து, மக்களைக் கொன்றழித்து புல்டோசர்களால் செப்பமிடும் தந்திரத்தை இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல, பல நாடுகளிலுள்ள அரசாங்கங்கள், அண்டை நாடுகள் தமது களிப்புக்குரிய விடயங்களாகச் செய்து கொண்டுதானிருக்கின்றன.

ஏன் கடந்த பல வருடங்களாகப் பலஸ்தீனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேலியர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டு வரும் பலஸ்தீனிய மக்கள் தலைமுறை தலைமுறையாக அகதி முகாம்கள் எனப்படும் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு உண்ண உணவின்றி, ஆடைகள் இன்றி, சுகாதாரம் இல்லாத நிலையில் வாழ்ந்து வருவது எம் கண்முன்னே நடைபெறும் இன்னொரு நிகழ்வு.

பலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது? இவர்கள் செய்த தவறுதான் என்ன? நாசிகளின் வெறித்தனத்திற்கு பலியாக்கப்பட்டுக் கொண்டிருந்த யூதர்களை தமது சகோதரர்களாக எண்ணி அடைக்கலம் கொடுத்தமையா? அல்லது இன்று பலஸ்தீனம் அழிக்கப்பட்டு பெரும்பான்மை இடங்கள் இஸ்ரேல் எனப்படும் மாபெரும் யூத நாடாக வளர்ச்சிபெற அனுமதித்த அவர்களின் அப்பாவித்தனங்களா?

இந்தக் கேள்விகளை எம்மிடம் எழுப்பிச் செல்கிறது அப்துல்லா ஒமிஸ், சுபியான் ஒமிஸ் சகோதரர்களின் OCCUPATION 101 எனும் விவரணப்படம். அயர்லாந்து, அல்ஜீரியர்கள், இந்தியர்கள், ஆப்ரோ அமெரிக்கர்கள், தென் ஆபிரிக்கர்கள் மீது ஆட்சியாளர்களினால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளின் காட்சிப் படிமங்களுடனும், நெல்சன் மண்டேலாவின் உரையுடனும் ஆரம்பமாகும் இந்த விவரணப்படம் பலஸ்தீனத்தில் மக்களின் மீது ஏவிவிடப்படும் வன்முறையைக் காட்சிப்படுத்துவதுடன் தொடர்கிறது. மேலும் இஸ்ரேலிய – பலஸ்தீனப் பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்ட புலமையாளர்கள், வரலாற்றாளர்கள், சமாதானச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள், மாணவர்கள், பெண்கள், சிறுவர்களின் நேர்காணல்களின் மூலம் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் நகர்த்தப்படுகின்றது.

இந்த விவரணப்படத்தில் வெஸ்ற் பாங்கிலும், காஸாவிலும் இஸ்ரேல் செய்த திட்டமிட்ட குடியேற்றங்களை மட்டுமல்லாது இஸ்ரேலுக்கும் அதனுடைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் அமெரிக்காவின் பொருளாதார, இராணுவ இராஜதந்திர உதவிகள் எப்போதும் பாரியளவில் கிடைத்து வந்துள்ளதை புள்ளிவிபரங்கள் ஆதாரங்கள் மற்றும் வரைபடங்களின் உதவியுடன் விளக்கியுள்ளனர் ஓமிஸ் சகோதரர்கள்.

பலஸ்தீனியர்களின் இடங்கள், அவர்கள் வாழ்ந்த குடியிருப்புக்கள், அவர்களின் அன்புக்குரியவர்கள், அவர்களின் ஆன்மாக்கள் என்பன புல்டோசர்களால் தகர்க்கப்பட்டு கட்டாய இராணுவக் குடியிருப்புக்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருப்பதையும், மந்தைகளைப் போல் நடத்தப்படும் அந்த மக்களின் சொல்லொணாத் துயரங்களையும் இந்த விவரணத் திரைப்படம் விவரித்துச் செல்கிறது இது எங்களின் மக்களின் துயரங்களையும் நெருக்கமாக விவரித்துச் செல்வது போன்ற ஒரு உணர்வை என்னுள் ஏற்படுத்தியதென்பதை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.

யன்னல்களைச் செல் உடைத்தது. எல்லாமே எரிந்தும், உடைந்தும் போனது. அவர்கள் ஏன் என்னுடைய பொருட்களையும், விளையாட்டுச் சாமான்களையும் உடைத்தார்கள்? நான் என்னுடைய பொருட்கள் பலவற்றை இழந்து விட்டேன். எங்களுடைய ஆடைகளைக் கூட நாங்கள் இழக்க வேண்டி ஏற்பட்டது. நாங்கள் உடுப்பதற்கு உடைகளை எங்கள் அயலவர்களிடம் கெஞ்சிப் பெற்றுக் கொண்டோம். நாங்கள் சாப்பிடும் உணவில் காஸ் மணம் வீசுகிறது. உடுப்புகளில் கூட காஸ் மணம் வீசுகிறது, ஆனால் அவற்றை எறிய எம்மால் முடிவதில்லை. ஏனெனில் எம்மிடம் வேறு உடுப்புகள் இல்லை. நீங்கள் மணந்து பார்த்தால் எங்களுடைய உடுப்புகள் எவ்வளவு நாறுகிறதென்று தெரியும். இஸ்ரேலியர்கள் வந்து எங்கள் வீடுகளைப் பார்க்க வேண்டும் அது எப்படி இருக்கிறதென்று. எங்களுடைய உடுப்புகளை மணந்து பர்க்க வேண்டும் அது எப்படி நாறுகிறதென்று. அந்தக் காஸ் மணம் எங்களைச் சாகிற அளவிற்கு மூச்சுத் திணற வைக்கிறது. என்னுடைய உடைகளை மணந்து பாருங்கள் அதில் காஸ் மணக்கிறது. நான் என்ன செய்ய முடியும்? எனக்கு என்னுடைய அப்பா வேண்டிக் கொடுத்த சன்கிளாஸைக் கூட போடக் கொடுத்து வைக்கவில்லை. அம்மா வாங்கித் தந்த பிறேஸ்லெற், நெக்லஸ், மோதிரம் என்பவற்றைக் கூட போட்டு அனுபவிக்க முடியவில்லை. என்னுடைய உடைமைகளை நான் எப்படி அனுபவிக்க முடியும். நான் பாடசாலை செல்லும்போது துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்கிறேன். அவற்றைக் கேட்டு நான் மிகவும் பயப்பிடுகிறேன். எனது உடல் முழுக்க நடுங்க ஆரம்பிக்கிறது.'

இது இஸ்ரேலியர்களினால் துரத்தப்பட்டு அகதி முகாமில் வாழ்ந்து வரும் ஒரு பலஸ்தீன சிறுமியின் கூற்று. இப்படி எத்தனையெத்தனையோ சிறுவர்களிடம் கேட்டால் அவர்களின் வயதை மீறிய பல கதைகள் அவர்களிடம் இருக்கின்றன.

பலஸ்தீன அகதி முகாமில் வாழ்ந்து வரும் ஒரு பெண் இவ்வாறு கூறுகிறார்.

இஸ்ரேலிய இராணுவத்தினர்களுடன் புல்டோஸர்களும் வந்தது. அதிர்ச்சியடைந்த நான் என்னுடைய வீட்டை உடைக்க வேண்டாமென்று அவர்களுடன் வாக்குவாதப்பட்டேன். அவர்கள் எனது தலைமயிரைப் பிடித்திழுத்து எனக்கு அடிக்க ஆரம்பித்தார்கள். புல்டோஸர்கள் தகர்க்கும் வேலையை ஆரம்பித்திருந்தன. எனது மகன் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தது எனக்கு ஞாபகம் வந்தது. அவனைத் தூக்குவதற்காக நான் வீட்டுக்குள் ஓடினேன். நான் ஓடும் பொழுது இராணுவத்தினர் என்னைப் போகவிடாமல் இழுத்து என்னை அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து விடுவித்துக் கொண்டு நான் வீட்டுக்குள் ஓடி எனது மகனைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தேன்.

அதற்குப் பிறகு ஒரு நாள் நான் எனது பிள்ளைகளுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்த போது எனது மகள்களில் ஒருத்தி மரத்தில் கயிற்றைப் போட்டு தற்கொலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் கேட்டேன் என்ன செய்து கொண்டிருக்கிறாயென. அவள் கேட்டாள் ‘நாங்கள் எப்படி இந்த வெளியில் வாழ்வது? எனக்கு சாவதைத் தவிர வேறு வழியில்லை. எனக்கு வாழ விருப்பமில்லையென.’ அது எங்களுக்கு ஒரு துயரார்ந்த தருணமாகும். ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் தன்னுடைய மகள் தற்கொலைக்கு முயன்று கொண்டிருப்பதைப் பார்க்கும் தாயின் நிலை என்னவாக இருக்குமென்று. பிள்ளைகளுடைய மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இரவுகளில் தூங்குவதேயில்லை.

இந்த விவரணப்படம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கிறது. அந்தக் காலப்பகுதியில் பலஸ்தீனப் பிராந்தியத்தில் 3.2 வீதமான யூதர்களே இருந்தார்களெனவும் மீதி 96.8 வீதமானோர் அராபிய முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களுமாவர் எனவும் யூதர்களின் தொகை அங்கு எவ்வாறு காலத்துக்குக் காலம் அதிகரித்து வந்ததென்பதையும் விளக்கும் இப்படம் கடந்த 60 வருடங்களாக ஐ.நாவால் அங்கீகரிக்கப்பட்ட நிலங்களில் எவ்வாறு யூத சட்டவிரோதக் குடியேற்றங்கள் உருவானதென்றும், எவ்வாறு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதென்றும் இஸ்ரேல் - பலஸ்தீன மோதல்களின் வரலாற்றுப் பின்புலங்களையும், தற்போதைய நிலைமைகளையும் எடுத்துக் காட்டுகின்றது.

குறிப்பாக 1880இல் முதற்கட்டமாக யூதர்கள் ஐரோப்பாவிலிருந்து குடிபெயர்ந்ததையும், 1920இல் ஏற்பட்ட பதற்றத்தையும், 1948 மற்றும் 1970இல் ஏற்பட்ட போர்களையும், 1987 முதலாவது இன்ரிபாடாவையும், ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையையும், குடியேற்றங்கள் விஸ்தரிக்கப்பட்டமை பற்றியும், ஐக்கிய அமெரிக்காவின் வகிபாகத்தைப் பற்றியும், 2000ஆம் ஆண்டின் இரண்டாவது இன்ரிபாடாவையும், காஸாவிலிருந்து இஸ்ரேல் பின்வாங்கி தடுப்புச் சுவர்களை உருவாக்கியமையையும் பற்றி இது பேசிச் செல்கிறது.

யூதர்களைத் தமது சகோதரர்களாக நினைத்துப் பழகிய பலஸ்தீனிய மக்கள் 1920இல் தங்களுடைய நிலங்கள் அபகரிக்கப்பட்டபோதே முதற் தடவையாக வெகுண்டெழுந்தார்கள். அப்போதுதான் பலஸ்தீனர்களுக்கும் - யூதர்களுக்குமிடையே மோதல்கள் ஆரம்பித்தது. இதற்கு முன்பாக இவர்களுக்கிடையே மோதல்கள் எதும் இடம்பெறவில்லை. இதற்கு முன்னர் யூதர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பலஸ்தீனத்தில் அமைதியாக வாழ்ந்து வந்துள்ளனர் என்று இப்படம் கூறுகிறது.

மிகச் சிறப்பான முறையில் தொகுக்கப்பட்டுள்ள படிமங்களும், சொற்களும் ஆர்வமூட்டக்கூடிய ஒரு முடிவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன. சாதாரண பலஸ்தீனப் பிரஜை ஒருவரின் நாளாந்த வாழ்க்கை மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் சட்டபூர்வமற்ற முறையிலும், துரோகத்தனமான முறையிலும் அதிகாரம் செலுத்துகின்றனர். இஸ்ரேலிய யூதர்களின் கீழ் பலஸ்தீனிய முஸ்லிம்களும், பலஸ்தீனியக் கிறிஸ்தவர்களும் தாழ்த்தப்பட்டுள்ளார்கள். பின் காலனித்துவ வரலாற்றுக் காலகட்டத்தில் ஒடுக்குமுறையும் அசமத்துவமும் மாறிமாறியும், ஒருங்கிணைந்தும் வருகின்றன என்பதை இந்தச் செயல் எமக்கு உணர்த்துகிறது.

இதற்கு முழு ஆதரவு அளிக்கிறது அமெரிக்கா. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா நாளாந்தம் 8 மில்லியன் டொலர்களை இஸ்ரேலுக்கு உதவியாக வழங்கி வருவதாகவும், 1949 – 1996 வரை அமெரிக்கா 62.5 பில்லியன் டொலர்களை இஸ்ரேலுக்கு கொடுத்துள்ளது. எனவும் இந்த விவரணப்படம் கூறுகிறது.

1947இல் ஐ.நா பாலஸ்தீனத்தை இரு கூறாக்கி பலஸ்தீனியர்களின் நிலப்பரப்பில் 56 சதவீதத்தை ஜியோனிஸ்டுகளுக்கு கொடுத்தது. மூன்றில் இரண்டு பங்கினரான பலஸ்தீனிய மக்களுக்கு 43 வீதமான நிலத்தையும், மூன்றில் ஒரு பங்கினரான இஸ்ரேலியர்களுக்கு 56 வீதமான நிலத்தையும் ஐ.நா பங்கிட்டு வழங்கியது. அதன் பிறகு ஜியோனிஸ்டுகள் பலஸ்தீனர்களின் நிலப்பரப்பில் 78 சதவீதத்தை அபகரித்துக் கொண்டனர். 1948இல் இஸ்ரேல் ஒரு நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இப்பிரகடனம் வெளியாகியவுடன் அமெரிக்கா இஸ்ரேலை அங்கீகரித்தது. இலட்சக்கணக்கான பலஸ்தீனிய மக்கள் அகதிகளாக்கப்பட்டு கிட்டத்தட்ட பலஸ்தீனமென்ற நாடே இல்லாமற் போயுள்ளது. அடுத்தடுத்து வந்த இஸ்ரேலிய பிரதமர்களின் கண்களுக்கு இந்த மக்கள் நசுக்கியெறியப்பட வேண்டிய வெட்டுக்கிளிகளாகவும், இரண்டு கால்களைக் கொண்ட மிருகங்களாகவுமே தெரிந்தனர். மனித ஆத்மாக்களாகத் தெரியவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை அவமானப்படுத்தல்களும், மிருகத்தனமான தாக்குதல்களும் பலஸ்தீனிய மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

1993இல் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேல் - பலஸ்தீனிய சமாதான உடன்படிக்கை கொண்டு வரப்படுகிறது. அதற்கு பின்னர் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுடைய எண்ணிக்கை இரண்டு மடங்காக இரண்டு இலட்சத்திலிருந்து நான்கு இலட்சமாக அதிகரித்தது. நோர்வேயால் மேற்கொள்ளப்பட்ட ஒஸ்லோ சமாதான உடன்படிக்கை காலத்தில் மட்டும் 740 வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன என ஒமிஸ் சகோதரர்களால் புள்ளிவிபரமிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஐ.நாவால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் எல்லாவற்றையும் அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறைவேற்றாமல் இருந்து வருகின்றன. இஸ்ரேலியர்களால் பலஸ்தீனியர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து யுத்தத்திலும் ஏதோ ஒரு வகையில் அமெரிக்காவின் பங்கு இருந்து வந்துள்ளது. பலஸ்தீனிய மக்களின் குடியிருப்புக்களை தகர்த்து அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிப்பதில் அமெரிக்க ஏவுகணைகளின் பங்களிப்பே அதிகமாகவுள்ளதென்பது நாமறிந்த ஒன்று.

இந்த விவரணப்படத்தில் வரும், வீடுகளைத் தகர்த்து முன்னேறிவரும் இஸ்ரேலிய டாங்கிகளுக்குச் சிறுவனனொருவன் கல்லெறியும் காட்சிப் படிமமானது இளம் தலைமுறையினரிடம் தூண்டிவிடப்படும் வன்முறைகளைப் பறைசாற்றுகிறது. கோபம், விரக்தி என்பவற்றைக் கட்டுப்படுத்த முடியாத பலஸ்தீனியர்கள் இஸ்ரேலியத் தெருக்களிலும், பொது இடங்களிலும் மனித வெடிகுண்டுகளாக மாறி வெடிக்கின்றனர். இதன் காரணமாக பலஸ்தீனிய மக்களின் மேல் இஸ்ரேலியர்கள் இரக்கமற்ற தாக்குதல்களை நடத்தி அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

‘ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டபோது யூதர்கள் செழுமையுடன் வாழ்ந்த ஒரேயொரு பிரதேசம் பலஸ்தீனம்தான். மேற்குலகத்தவர்களிடமுள்ள பல தவறான ஐதீகங்களில் ஒன்று யூதர்களும் பலஸ்தீனர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மோதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்’ என்று கூறுகிறார் கத்தோலிக்க சமூகசேவையாளரான டக்ளஸ் டிக்ஸ்.

‘இராணுவ நிர்வாகத்தின் கீழ் பலஸ்தீனர்களுக்கு சிவில் உரிமைகள் எதுவும் இல்லை. ஏனெனில் அவர்கள் இந்நாட்டின் பிரஜைகள் அல்ல’ என இஸ்ரேலின் மனித உரிமைச் சட்டத்தரணி அலெக்றா பச்சேகோ தெரிவிக்கிறார்.

கொள்கைகள் பற்றிய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பில்லிஸ் பெனிஸ் திட்டமிட்ட இராணுவக் குடியேற்றத்தை இவ்வாறு வரையறுக்கிறார் ‘பௌதீக ரீதியாக உங்களுடைய நிலத்தில் ஒரு அந்நிய இராணுவம் குடியிருந்து உங்களுடைய வாழ்க்கையை அது கட்டுப்படுத்துமானால் இது ஒருவகையான குடியேற்றம்தான். அதாவது இராணுவத்தினரையும், குடியேற்றக்காரர்களையும் கொண்ட ஒரு திட்டமிட்ட குடியேற்றம் அது.’

வீடுகளைத் தகர்ப்பதற்கு எதிரான இஸ்ரேலியக் குழுவைச் சேர்ந்த ஜெப் கால்ப்பர் சொல்கிறார் ‘பலஸ்தீனர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுகின்ற நடவடிக்கையின் ஒரு அம்சமே இது. இது ஒருவகையான இனச் சுத்திகரிப்புத்தான். பலஸ்தீனியர்களுடைய நிலங்கள் தெரிவு செய்யப்பட்டு குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றது. அந்நிலங்களில் என்ன இருந்தாலும் அவை புல்டோஸர் போட்டு இடித்தழிக்கப்பட்டு புதிய இஸ்ரேலிய நகரம் உருவாக்கப்படுகிறது. 2000ஆம் ஆண்டிலிருந்து 4000க்கும் மேற்பட்ட வீடுகள் இவ்வாறு தகர்க்கப்பட்டுள்ளன.’

இஸ்ரேலிய சமாதானச் செயற்பாட்டாளர் ஆதம் கெல்லர் கூறுகிறார் இரண்டு விதமான குடியேற்ற வாசிகள் அங்கு குடியேறியுள்ளனர். முதலாவது வகையினர் கோட்பாட்டு ரீதியாகக் குடியேறியவர்கள். அவர்கள் நினைக்கிறார்கள் இந்தப் பிராந்தியம் யூதர்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட பூமியென்று. அதனால் இந்த பிரதேசத்திற்கு வந்து குடியேறுவது தங்களுடைய கடமையென அவர்கள் நினைக்கிறார்கள். இரண்டாவது வகையினர் சாதாரண இஸ்ரேலிய குடியேற்றவாசிகள். ஏனென்றால் அவர்களுக்கு வீட்டு வசதிகள் உட்பட பல்வேறு வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கிறது. உதாரணமாக அங்குள்ள ஒரு வீட்டில் அவர்கள் பத்து வருடங்கள் குடியிருந்தால் அதன் பிறகு அவர்கள் வீட்டுக்காக எந்தப் பணத்தையும் செலவிடத் தேவையில்லை.’

ஹைஃபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இஸ்ரேலிய வரலாற்றாசிரியரான இலான் பபே சொல்கிறார் ‘யூதக் குடியேற்ற வாசிகள் பலஸ்தீனத்திற்கு வந்தபோது அவர்களில் பெரும்பாலானவர்கள் பலஸ்தீனம் வெறுமையாக இருப்பதாக நம்பினார்கள். ஏனெனில் அவர்கள் அவ்வாறுதான் கல்வி ஊட்டப்பட்டுள்ளார்கள்.’

இவ்வாறு பலஸ்தீனியர்களுக்குச் சார்பாகவும், எதிரானதுமான பலரின் நேர்காணல்கள் இந்த விவரணப்படத்தினுள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. முடிவில்லாத போருள் மறைந்திருக்கும் உண்மைகளையும், தகவல்களையும் ஆய்வுக்குட்படுத்தும் இந்தப் படம் தவறான எண்ணக் கருக்களையும், ஐதீகங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இஸ்ரேலிய இராணுவ அதிகாரத்தின் கீழான வாழ்க்கையை இது விபரிக்கிறது.

பலஸ்தீனிய - இஸ்ரேலிய மோதல்களைப் பற்றி இவ்வாறான விவரணப்படம் இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனைவிட இந்த விவரணப்படம் மைக்கேல் மூரின் Fahrenheit 911, Bowling for Columbine மற்றும் நோம் சொம்ஸ்கியின் Manufacturing Consent போன்ற ஆவணப்படங்களைப் போல வலிமையான ஆதாரங்களையும், உணர்ச்சிகரமான படிமங்களையும் தனி ஆளுமைகளின் நேர்காணல்களையும் கலவையாகக் கொண்டதாக அமைந்துள்ளதென திரைப்பட விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்க ஊடகங்கள் பலஸ்தீனப் பிரச்சினையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளன எனத் தெரிவிக்கும் அப்துல்லா, சுபியான் சகோதரர்கள் இந்த விவரணப்படத்தை நாங்கள் தயாரித்த போது பலஸ்தீன மக்கள் தங்கள் ஆத்மாவின் ஒரு பகுதியை எங்களிடம் பங்கிட்டுக் கொண்டார்கள். நாங்கள் அவற்றை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றோம் என்கிறார்கள். இதன் மூலம் ஏந்த ஒரு நாட்டிலும் மோதலை அறிக்கையிடுவதில் ஊடகங்களிடமிருந்த பாரபட்சத்தை இப்படம் அம்பலப்படுத்துகிறது.

globaltamilnews.net
July 05 2009

Saturday, August 1, 2009

சிறுவர்களே எமது நிலத்தின் வண்ணத்துப் பூச்சிகள். Innocents Voices திரைப்படம் குறித்து ஒரு பார்வை.




‘எனக்கு மிகவும் தாகமாகவிருந்தது... கால்கள் வலித்தன.
என்னுடைய சப்பாத்துக்கள் பாறை போல் கனத்தன.
அவர்கள் எங்களைக் கொல்லப் போவது உறுதி.
நாங்கள் ஒன்றுமே செய்யாதபோது, அவர்கள் ஏன் எங்களைக் கொல்ல வேண்டும்?’

ஒரு சிறுவனின் ஆன்மா கேட்கிறது. கூறுங்களேன் ஏன் இப்படியென?

பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதற்குப் பின்னால் மாபெரும் இனவழிப்பு எனும் பயங்கரத்தை நடாத்தி முடித்திருக்கின்றது இலங்கை அரசாங்கம். இதில் ஏதொன்றும் அறியா அப்பாவிச் சிறுவர், சிறுமிகள் ஏராளமாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரக்கணக்கான சிறார்கள் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளனர். உளவியல் ரீதியாகவும் பெருமளவான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யுத்தம் கொடியது. அது முதலில் அழித்தொழிப்பது அப்பாவிகளையே. உலகம் முழுவதும் குரூரங்களைக் கொட்டிக் கொண்டிருக்க, வாழ்வியலோடு கூடிய குரூரங்களையும் சேர்த்து விழுங்கி இறந்து போன குழந்தைகளை நாம் எப்படி மறத்தல் இயலும். இவர்களை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை எப்படி மன்னிக்க முடியும்?

அப்படித் தொலைக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதே மெக்ஸிகோ இயக்குனரான லூயிஸ் மன்டோகியின் Innocents Voices (அப்பாவிகளின் குரல்கள்). இந்தத் திரைப்படத்தில் எல்சல்வடோரில் 1980ஆம் ஆண்டு தமது கொடிய யுத்தத்திற்காக இராணுவம் சிறுவர்களை கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உட்படுத்துவது பற்றியும், அந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் கொடூரங்களையும் பதின்ம வயதுச் சிறுவனான சாவாவினுடாக மிக அழகாக விவரித்துச் செல்கிறார் இயக்குனர் மன்டோகி. தொலைந்து போன குழந்தைகளின் உலகத்தையும், பால்யம் சிதைந்த தனது உண்மைக்கதையையும் எமக்குத் தெரிவிக்கின்றார் திரைக்கதை ஆசிரியர் ஒஸ்கார் ரொறெஸ்.

ஒஸ்கார் ரொறஸ் தனது பன்னிரண்டாவது வயதில் கட்டாய இராணுவச் சேர்ப்புக்கு ஆளாகிறார். 14 வயதில் அவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று தனது தாயுடனும் சகோதரன் சகோதரியுடனும் இணைந்து கொள்கிறார். பின்னர் நாடக நடிகராகவும் திரைப்பட நடிகராகவும் ஆன ரொறஸ் தனது பாத்திரங்களை தனது கதையைச் சொல்லப் பயன்படுத்தினார்.

எனினும் தனது கதையை முழுமையாகச் சொல்ல ரொறஸ்க்கு இரண்டு தசாப்தங்கள் பிடித்தது. அது அவருடையதும் அவரைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுவர்களுடையதுமான கதையாக இருந்தது. அதுவே Innocents Voices ஆக உருவெடுத்தது. ‘நான் எழுத உட்கார்ந்ததும் எனக்கு ஞாபகத்திற்கு வருவதெல்லாம் தெருவில் நடந்து போகும் படையினரின் சப்பாத்து ஒலி தான். ஒவ்வொரு முறையும் நடந்து செல்லும் போது ஆற்றங்கரையை அண்மிக்கையில் எனக்கு கடந்தகாலம் தான் ஞாபகத்திற்கு வரும். அன்றைய சம்பவத்திற்குப் பிறகு எனது நண்பர்களுக்கு என்ன நடந்தது என்பதை நானறியேன்’ என்கிறார் ரொறஸ் தனது நேர்காணல் ஒன்றின் போது. இதனையே படத்தின் ஆரம்பக் காட்சியில் இயக்குனர் முக்கியப்படுத்தியிருப்பது ரொறஸின் வலியை எம்மை உணர வைக்கிறது.

சிறுவன் சாவாவினூடாக அந்தக் கிராமத்தில் நடந்துள்ள கொடுமைகளை எமக்குச் சொல்லி அவனதும், அவனைப் போன்ற சிறுவர்கள், சிறுமிகளின் துயரத்தில் எம்மைப் பங்கு கொள்ள வைத்ததில் இயக்குனர் மன்டோகியும், திரைக்கதை ஆசிரியர் ரொறெஸும் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். எல்சல்வடோர் கிராமங்களின் வாழ்வியலை அழகியலோடும், துயரத்தோடும் கலந்து சொல்லும் திரைக்கதை அமைப்பு தத்ரூபமாகக் கையாளப்பட்டிருக்கிறது. சாவாவின் சிறுபராயம் பாதாளத்துள் தள்ளப்படுவதும், அவனுக்கும் அவனுடைய குடும்பத்திற்குமான உறவும் பிணைப்பும், பயங்கரமான வன்முறைக்குள்ளும் முதன் முதலாக அவன் காதலில் விழுவதும் என அவனுடைய இரத்தம் தோய்ந்த சிறுபராயம் அழகாக இயக்குனரால் வெளிக்கொணரப்படுகிறது. லூயிஸ் மன்டோகி ஒரு நேர்காணலின்போது கூறுகிறார் ‘எந்தவொரு குழந்தையும் ஆயுதம் தாங்கப் பிறக்கவில்லை. அவர்கள் விளையாடப் பிறந்தவர்கள்’ என்று.

யுத்தம் எல்லாவற்றையும் தொலைத்து விடுகிறது. யுத்தம் ஆரம்பமாகியதும் யுத்தத்தின் நடுவில் தனது மனைவி பிள்ளைகளை தனியாக விட்டு விட்டு சாவாவின் தந்தை அமெரிக்கா சென்று விடுகின்றான். அதன் பின்னர் 11 வயதேயான சாவா அந்த வீட்டுப் பொறுப்பை தனது சிறிய தலையில் தாங்குகிறான். அந்த வீட்டின் தலைவன் ஆக்கப்படுகிறான். அவனது தாயும் அவ்வாறே அவனுக்கு கூறுகிறாள்.

இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த அழகிய சிறிய கிராமத்தில் ‘காட்போட்’டாலான வீடுகளில் அவர்களின் வீடும் ஒன்று. ஓவ்வொரு இரவும் பகலும் போராளிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே நடைபெறும் சண்டையில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என்பதனையும் சாவா கற்று வைத்திருக்கிறான். திரும்பும் இடமெங்கும் இராணுவத்தினரைக் கண்டு வாழப் பழகிக் கொண்டுள்ள இந்தச் சிறார்களின் மனநிலை எப்போதுமே பயத்துடன் வாழ்தலாகிப் போகிறது.

அங்கு வாழும் சிறுவர்களுக்கு இராணுவத்தினரின் கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்தும், வலிய தாக்குதல்களிலிலிருந்தும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதாகின்றது. 12 வயது நிரம்பிய சிறுவர்களை இராணுவம் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடுத்துகிறது. அதற்கான அட்டவணையைத் தயார் செய்து இராணுவத்தில் சேர மறுத்துச் சிதறி ஓடும் சிறுவர்களைப் பலவந்தமாக பாடசாலையில் வைத்து இழுத்துச் செல்கிறது. போக மறுத்து அழும் சிறுவர்களைக் காண்கையில் மனம் கனத்துப் போகிறது.

அங்கிருக்கும் 11 வயது நிரம்பிய சிறுவர்கள் அனைவரும் வரப் போகும் தமது 12 ஆவது வயதை நினைத்து எப்போதுமே பயந்த வண்ணமே இருக்கின்றனர். 12வயது நிரம்பியவர்களைக் கட்டாயமாக இழுத்துச் செல்வதற்காக பெயர்களும், பிறந்த திகதியும் கொண்ட அட்டவணையுடன் காத்திருக்கின்றது இராணுவம். காலையில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் வீடு வந்து சேர்வார்களா என்று பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை.

வீதிகள், பாடசாலைகள், தேவாலயங்களின் அருகில் இராணுவத்தின் பாதுகாப்பு அரண்களும் இருப்பதனால் மோதல்களில் அப்பாவிப் பொதுமக்களும், சிறுவர், சிறுமிகளும் பலியாகிப் போகின்றனர்.

ஒரு இரவில் நடைபெற்ற மோதலினால் தமது பக்கத்து வீட்டுத் தோழி அஞ்சலீற்றாவின் மரணத்தை நேரில் கண்டு உறைந்து போகிறான் சாவா. இந்த மரணத்தினால் கலங்கிப் போயிருக்கும் சாவாவின் தாயிடம் அரச படைகளுக்கெதிரான போராட்டத்தில் பங்கு கொண்டுள்ள அவளுடைய தம்பி பெற்றோ கேட்கிறான் சாவாவைத் தன்னுடன் அனுப்பும்படி. அவனுக்குப் 12 வயது வந்ததும் இராணுவம் இழுத்துச் சென்றுவிடும் ஆகையால் தான் கூட்டிச் செல்கிறேன் எனக் கூறுகிறான். முதலில் ‘நீங்களும் சிறுவர்களை ஆட்சேர்ப்பதற்குத் தொடங்கி வீட்டீர்களா?’ என்று கோபப்படும் சாவாவின் தாயால் ‘இராணுவம் கூட்டிச் செல்வதற்குப் பதில் அவன் என்னுடன் வரட்டுமே. அவன் பாதுகாப்பாகவும் இருப்பான். நான் அவனைக் கூட்டிச் செல்கிறேன்’ என்ற பெற்றோவின் வேண்டுகோளை ஒரு அவலத் தாயாக இருந்து ஏற்க வேண்டி வருகிறது. அதன் பின்னர் நான் இன்னொரு நாள் வந்து உன்னை அழைத்துப் போகிறேன் எனச் சாவாவிடம் கூறிச் செல்கிறான் பெற்றோ.

சிறுமிகள் இராணுவத்தினரின் பாலியல் தேவைகளுக்காக கடத்திச் செல்லப்படுவதும், சிறுவர்கள் இழுத்துச் செல்லப்படுவதும், மோதல்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கும் ஒரு பொழுதில் பாடசாலைக்கு அண்மையில் இராணுவத்தினருக்கும் போராளிகளுக்குமிடையில் இடம்பெற்ற ஒரு மோதல் சம்பவத்தை அடுத்து பாடசாலை மூடப்படுகிறது. இதனையடுத்து சிறார்களுடைய கல்வி இடைநிறுத்தப்பட்டு அவர்கள் வீடுகளுக்குள் முடக்கப்படுகிறார்கள்.

அடுத்த தடவை ‘இராணுவம் கட்டாய ஆட்சேர்ப்புக்கு வருகிறது ஒழிந்து கொள்ளுங்கள்’ எனும் தகவல் சாவாவினுடைய மாமாவின் நண்பனும், போராளியுமான றரொன் மூலம் சாவாவிற்குக் கிடைக்கிறது. இதனை பல தாள்களில் எழுதி தமது நண்பர்களின் வீட்டுக்குள் போட்டு விடுகிறார்கள் சாவாவும் அவனுடைய நண்பர்களும். அடுத்த நாள் ஆட்சேர்ப்பிற்கு வரும் இராணுவம் சிறுவர்கள் எவரையும் காணாமல் ஏமாந்து போகிறது. அவர்கள் எங்கே அங்கிருக்கப் போகிறார்கள். அவர்கள் தமது வீட்டுக் கூரைகளின் மேல் ஒளிந்திருந்தார்கள். எனினும் அதற்கடுத்து வரும் இராணுவத்திடம் எதிர்பாராமல் பல சிறுவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். சாவாவும் அவனுடைய நண்பர்களும் கூரைமேல் ஏறி ஒளிந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். இந்தப் பயத்தின் காரணமாக அவர்களின் இரவு கூரையின் மேலேயே கழிகிறது.

அவர்கள் கெரில்லாக்களோடு சேர்வதென முடிவெடுக்கிறார்கள். இதனைத் தனது பள்ளித் தோழியும், காதலியுமான கிறிஸ்ரினா மரியாவிடம் சொல்லி விடைபெறச் செல்லும் சாவாவிற்கு முதல் நாள் இரவு நடைபெற்ற மோதலில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகிப் போன கிறிஸ்ரினா மரியாவின் வீட்டையும் கருகிப்போன அவளின் சட்டைத் துண்டையுமே பார்க்க முடிகிறது. கிறிஸ்ரினா மரியாவின் இழப்பு சிறுவன் சாவாவினால் தாங்கிக் கொள்ள முடியாததாகிறது.

தனது 12 ஆவது வயதின் தொடக்கமும், தனது காதலியின் இறப்பும் சேர்ந்து சாவாவை போராட்டத்தின் பால் இழுத்துச் செல்கிறது. ஓரிரவு சாவாவும் அவனது நண்பர்களும் கெரில்லாக்களுடன் இணைந்து கொள்வதற்காகச் செல்கின்றனர். அவர்கள் செல்வதை அறிந்து அவர்களின் பின்னால் இராணுவமும் செல்கின்றது.

கெரில்லாக்களிடம் வந்து சேரும் அந்த அப்பாவிச் சிறுவர்கள் மூலம் கெரில்லாக்களின் மறைவிடத்தைக் கண்டுபிடித்து இராணுவம் தாக்குதலை நடாத்துகிறது. சாவாவும் அவனது நண்பர்களும் இராணுவத்திடம் சிக்கிக் கொள்கின்றனர். இராணுவம் அவர்களைக் கொல்வதற்காகக் கொண்டு செல்கிறது. இந்தக் காட்சியிலிருந்தே திரைப்படம் ஆரம்பமாகிறது. இதன் போதுதான் சாவா கேட்கிறான் ‘நாங்கள் ஒன்றுமே செய்யாதபோது, அவர்கள் ஏன் எங்களைக் கொல்ல வேண்டும்?’

ஆற்றங்கரையெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தின் வடுக்களாக பிணங்கள் சிதறியிருக்கின்றன. ஆற்றங்கரையில் இராணுவத்தினரால் முட்டுக்காலில் விடப்பட்டு ஒவ்வொரு நண்பர்களாகக் கொல்லப்பட சாவாவின் முறை வரும்போது இராணுவத்தின் மீது கெரில்லாக்களின் தாக்குதல் ஆரம்பமாகிறது. சாவா தப்பியோடுகிறான். தனது வீட்டையடையும் சாவா அப்பாவி மக்களுடைய காட்போட்டினாலான அந்த வாழ்விடங்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருப்தனைக் காண்கிறான். தனது குடும்பம் இடம்பெயர்ந்தனை அறியாத அவன் தனது குடும்பம் அழிந்து விட்டதாக எண்ணிக் கதறுகிறான். ஆனால் சாவாவின் தாய் அவனைத் தேடி வருகிறாள். தாயுடன் செல்லும் அவன் பின்னர் வேறு சிலருடன் சேர்த்து அமெரிக்காவிற்கு அனுப்பி
வைக்கப்படுகிறான்.

இந்தப் படத்தில் நடித்துள்ள சிறுவர் சிறுமிகளின் நடிப்பை என்னவென்று சொல்வது. பயபீதியில் அவர்களின் முகத்தில் தோன்றும் அந்த உணர்வுகளும், துடிப்புடன் செயற்படும் திறனும் வியக்க வைக்கின்றன. சாதாரண சிறுவர்களது இளமைப்பருவம் போருக்குள் எவ்வாறு நெருக்கடிக்குள்ளாகிறது என்பதையும், போருக்குள் ஊடாடும் மனித உணர்வுகளையும திரைப்படம் இயல்பாக வெளிக்கொணர்கிறது.

இந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஈழத்துக் கவிஞையான சிவரமணியின் ‘யுத்தகால இரவொன்றின் நெருக்குதல் நமது குழந்தைகளை வளர்ந்தவர்களாக்கி விடுகிறது’ எனும் கவிதைவரிகள் ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. எல்சல்வடோரின் உள்நாட்டு யுத்தத்துள் சிறுவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி என்பதற்கப்பால் இத்திரைப்படம் ஏறத்தாழ 40 நாடுகளில் பல இலட்சக்கணக்கான சிறுவர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதையும் அவர்களுடைய சிறுவர் பராயம் இந்தப் போர்களால் அழிக்கப்படுவதையும் நம் கண்முன் நிறுத்துகிறது.

globaltamilnews.net
24.05.2009

Saturday, July 4, 2009

Shooting Dogs: இனப்படுகொலை மற்றும் ஐ.நா பற்றிய அவலக் கவிதை



மென்மையான இசை உணர்வுகளை மீட்டிச் செல்லும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களின் அழகியலை, ஆன்மாக்களைச் சிதைத்தவர்கள் யார்?

எல்லாம் எப்பொழுது ஆரம்பமாகிறது?

சொர்க்கம் எப்பொழுது நரகமாகிறது?

கீழ்மைப்படுத்தப்படுதல் பற்றிய பச்சாதாபத்திற்குரிய புரிந்துணர்வின்மையிலிருந்தே இவை எல்லாம் ஆரம்பமாகிறது. அது நாகரிகமடையாத பழங்குடி இனமோ அல்லது நாகரிகமடைந்த இனம் சார்ந்தோ ஒருபோதும் இருக்கவில்லை. எப்போதும் பேராசையும், அகந்தையும் கொண்ட வல்லரசின் கீழ் இருந்தது. இந்தப் பயங்கரமான கீழ்மைப்படுத்தலை நாங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும்போது, மிகவும் காலங் கடந்திருப்பதை எம்முன்னேயுள்ள யுத்த சூழல் எமக்குப் புலப்படுத்திய வண்ணம் உள்ளது.

ஜாதிக ஹெல உருமய வாளையும் கோடரியையும் கையில் எடுக்க அறைகூவல் விடுத்துள்ளது. அது என்னவோ வெளிநாட்டவருக்கு எதிரானது போலத் தோன்றினாலும் உண்மையில் சிறுபான்மையினருக்கு ஆதரவாகத் தற்போது குரல் எழுப்பும் வெளிநாட்டினருக்கு எதிராகத் தான் அந்த அறைகூவல் என்பது தற்போதிருக்கும் இலங்கை அரசியல் சூழலில் புரிய வைக்க வேண்டிய ஒன்றல்ல. இதுவே சிறுபான்மையினருக்கு எதிரான அறைகூவலாக மாறாது என்பதற்கும் எந்த உத்தரவாதமுமில்லை.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் மிகப் பெரும் படுகொலைக்களமான ருவண்டாவில் 1994 இல் மூன்றே மூன்று மாதங்களில் 8 இலட்சம் ருட்சி சிறுபான்மையோர் பெரும்பான்மையினராகிய ஹுட்டுவினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். அது நடந்ததும் ஒரு ஏப்ரலில்தான். இந்த அறைகூவல் விடுக்கப்பட்டிருப்பதும் அந்தப் படுகொலை நடந்து 15ஆவது ஆண்டு ஏப்ரலில் தான்.

இந்தப் படுகொலையில் பெருமளவான ருட்சி சிறுபான்மையோர் வாளால் வெட்டியும் கோடரியால் கொத்தியுமே படுகொலை செய்யப்பட்டனர். இதற்காக சீனாவிலிருந்து அன்றிருந்த ருவண்டா அரசாங்கம் மூன்று இலட்சம் வாட்களை இறக்குமதி செய்திருந்தது என்று சொல்கிற போது ஐந்தாவது தடவையாகவும் ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சிலில் இலங்கை விவகாரத்தை எடுப்பதற்கு சீனா தடை விதித்திருப்பதையும், இலங்கை அரசுக்குப் போதுமான ஆயுத விநியோகம் செய்வதும் ஞாபகத்திற்கு வருகிறது.

ஹெல உருமயவின் வாளைக் கையிலெடுக்க விடுக்கும் இந்த அறைகூவலும், சோசலிச(?) சீனா ஒரு நாட்டில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக மறுக்கபட்டிருக்கும் நமது சமத்துவமான உரிமைகள் பற்றிப் பேசத் தடையாக இருப்பதும் திரும்பவும் திரும்பவும் ருவண்டாவையே ஞாபகத்திற்குக் கொண்டு வருகிறது.

இனத்துவேசத்துக்கு ஆட்பட்ட சிறிய இனக்குழுமங்கள் பற்றிய, மனித உரிமைகள் பற்றி வாய் கிழியப் பேசும் ஐக்கிய நாடுகள் சபையினால் கைவிடப்பட்ட ஒரு இருண்ட கண்டத்தின் கறையுண்ட வரலாற்று ஆவணங்களில் ஒன்றாக அமைந்தருக்கிறது மைக்கல் கற்றன் ஜோன்ஸின் Shooting Dogs திரைப்படம்.
1994 ஏப்ரலில் ருவண்டாவில் ஹுட்டு பெரும்பான்மை இனத்தவர்களால் ருட்சி சிறுபான்மை இன மக்கள் மீது நடத்தப்பட்ட பாரிய மனிதப்படுகொலை பற்றிய பதிவாக இத்திரைப்படம் உள்ளது.

இத் திரைப்படம் ஐ.நாவின் பாராமுகம் பற்றியே அதிகமாகப் பேசுகிறது. இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்தப் படத்தின் தயாரிப்புக் குழுவில் இருப்பவர்கள் ருவண்டாவின் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதும், அவர்கள் தங்களது கதைகளைத் தாங்களே சொல்வதும் தான். அதுமட்டுமல்லாது இனப்படுகொலையின் வரலாற்றைச் சொல்லும் அதேவேளை இனப்படுகொலையைச் சூழ நடப்பவற்றையும் இத் திரைப்படத்தில் வெளிப்படுத்துகிறார் இயக்குனர் மைக்கேல் கற்றன் ஜோன்ஸ்.

மரியா ஓடிக் கொண்டிருக்கிறாள். ஐ.நா இராணுவம் ருவண்டாவின் கிகாலியிலுள்ள ஈகொல் தொழில்நுட்பக்; கல்லூரியில் தன்னை நம்பியிருந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான ருட்சி மக்களை ஹுட்டு இனத்தவர்களின் கொலை வெறிக்கு விருந்தாகக் கொடுத்து நாட்டை விட்டு வெளியேறுவதுடன் மைக்கேலின் கமெரா இயங்கு தளத்திற்கு வருகின்றது.

ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் இயங்கிக் கொண்டிருக்கிறது அழகிய மலைப்பாங்குடன் கூடிய கிஹாலி பிரதேசம். வெள்ளையின கிறிஸ்தவ பாதிரியாரான கிறிஸ்தோபரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது ஈகொல் தொழில்நுட்பக் கல்லூரி. அதில் ஆசிரியனாக இருக்கிறான் உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட வெள்ளையின இளைஞனான ஜோ. இந்த தொழில்நுட்பக் கல்லூரியின் வளாகத்திற்குள்ளேயே ருவண்டாவின் சமாதானத்தைக் கண்காணிக்கும் பொருட்டு ஐ.நாவால் அனுப்பப்பட்ட ஐ.நா இராணுவமும் தங்கியுள்ளது.

இந்த மகிழ்ச்சிகளை, உற்சாகங்களை, ஆரவாரங்களை குலைத்துப் போடும்படியாக அமைகிறது ஜனாதிபதி ஜுவெனல் ஹபிஅரிமானாவின் படுகொலை.

நூற்றாண்டுகளாக ருவாண்டாவில் ஹுட்டு, ருட்சி மற்றும் த்வா மக்கள் கூட்டத்தினர் ஒரே விதமான கலாசாரம், மொழி, மதம் என்பவற்றைப் பிற்பற்றுபவர்களாக இருந்தனர். 19ஆம் நூற்றாண்டில் மேற்குலகம் ஆபிரிக்காவைத் தம் மத்தியில் கொலனிகளாகப் பங்கு போட்டுக் கொண்ட போது கொங்கோவை பெல்ஜியமும், உகண்டாவை பிரிட்டனும், ருவண்டாவை ஜேர்மனியும் தமக்குள் பங்கு போட்டுக் கொண்டன. முதலாம் உலகப் போரில் ஜேர்மனியைத் தோற்கடித்த பெல்ஜியம் ஜேர்மனியிடமிருந்த ருவண்டாவைத் தனது கொலனியாக்கியது.

பெல்ஜியம் ருவண்டாவை விட்டு 1959இல் வெளியேறிய போது ஹுட்டு பெரும்பான்மையினரிடம் ஆட்சியைக் கையளித்துவிட்டு வெளியேறியது. இதன் பின்னர் நடைபெற்ற முதலாளித்துவ ஜனநாயகத் தேர்தலில் பெரும்பான்மை ஹுட்டுக்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

தசாப்த கால சுதந்திரத்திற்குப் பின் தனிமைப்படுத்தப்பட்ட ருட்சி இனத்தவருக்கு எதிராக நிறுவனமயப்படுத்தப்பட்ட படுகொலைகளை ஹுட்டு பெரும்பான்மையினர்; நடத்தத் தொடங்கினர். நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் ருட்சிகள் ஹுட்டுக்களால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாயமாக நாடுகடத்தப்பட்டனர்.

இதன்போதெல்லாம் ருட்சி சிறுபான்மையினர் தமது சமத்துவ உரிமைகள் வேண்டி பலமுறை பேச்சுவார்த்தைகள் நடாத்தினர். அவை யாவும் ஹுட்டுக்களால் உதாசீனம் செய்யப்பட்டதால் தோல்வியைத் தழுவின. இதனால் அதிருப்தியடைந்த ருட்சிகள் 1988இல் அடக்குமுறையை எதிர்த்து தமது உரிமைகளை வென்வென்றெடுப்பதற்காக ருவாண்டன் தேசபக்த முன்னணியை (RPF) ஆரம்பித்தனர். உகண்டாவை தளமாகக் கொண்டியங்கிய இந்த இயக்கம் 1990ஆம் ஆண்டு ஹுட்டுக்களின் ஆட்சிக்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்தது. எனினும் 1993 வரை படுகொலை தொடர்ந்ததோடு போரும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

இதேவேளை இரண்டு தரப்பாரிடையேயும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதிகாரப்பரவலாக்கல்; முறையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட வைப்பதற்கான முயற்சியில் ஐ.நா. ஈடுபட்டது. அப்போது ருவண்டாவின் ஜனாதிபதியாக இருந்த ஹபியரிமானா இதனை ஏற்றுக்கொண்டு இதற்கான பேசசுவார்த்தைக்காகத் தன்ஸானியாவுக்குச் சென்று வரும் போது 1994 ஏப்ரல் 6ஆம் திகதி விமான விபத்தில் கொல்லப்படுகிறார்.

இது விபத்தா அல்லது படுகொலையா என்ற சந்தேகம் இதுவரை தீர்க்கப்படவில்லை. ஜனாதிபதி ஹபியரிமானா சிறுபான்மையினருடன் அதிகாரங்களைப் பகிரிந்து கொள்ளத் தயாராக இருந்ததும் அதற்காகப் பேச்சுவார்த்கைளில் ஈடுபட்டதும் பெரும்பான்மையின ஹுட்டுக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்திருந்தது. அந்தப் பெரும்பான்மை அதிருப்தியாளர்கள் தான் ஜனாதிபதியைக் கொன்றனர் என்ற அபிப்பிராயமும் நிலவுகிறது. மறுபுறத்தில் ருட்சி கெரில்லாக்களின் விமானத் தாக்குதலில் தான் இவர் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் ருட்சி இனப் போராளிகளான ஆர்.பி.எப்தான் தமது ஜனாதிபதியைக் கொலை செய்தார்கள் என்பதன் அடிப்படையில் ஹுட்டு பெரும்பான்மை இனத்தவர்கள் இராணுவத்தினதும், அரசியல்வாதிகளினதும் உதவியுடன் ருட்சிக்களின்மேல் இனப்படுகொலைகளை மேற்கொள்கிறார்கள். ருட்சிகளினுடைய இருப்பிடங்கள் பற்றி ஏற்கெனவே தயாரிக்கப்பட்டிருந்த அட்டவணைக்கேற்பவும், அடையாள அட்டையின் இனப் பாகுபாட்டிற்கேற்பவும் ருட்சி மக்களின் இருப்பிடங்கள் கண்டு பிடிக்கப்பட்டு குடும்பங் குடும்பமாக வாள்களால் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்கிறார்கள். றுவாண்டாவின் தெருவெங்கும் பிணங்கள் குவிந்திருந்தது. இது ஆர்.பி.எப்பை அழிப்பதற்கான நடவடிக்கையாகக் கூறிக் கொள்ளப்பட்டபோதும் ஆர்.பி.எப்பை அழிப்பதன் பேரில் அப்பாவிப் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.

ஏற்கெனவே சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகங்கள் இனவாதத்தை வளர்த்து விட்டிருந்தன. ருட்சிகள் எதியோப்பியாவிலிருந்து வந்தவர்கள் என்கிற கருத்து நிலவுவதனால் அவர்களை ‘எதியோப்பியாவுக்கே திருப்பி அனுப்புவோம்’, ‘கரப்பான்களைப் போல் நசுக்கிக் கொல்லுவோம்’ என்ற கோசம் பிரபலப்படுத்தப்பட்டது. (சிறுபான்மையினரான ருட்சிகள் கரப்பான் பூச்சிகள் என்றே ஹுட்டுக்களால் அழைக்கப்பட்டு வந்தனர்.)

ஜனாதிபதியின் படுகொலையை அடுத்து ருட்சி கரப்பான் ப10ச்சிகளைகளை ஒழிக்கும் காலம் வந்து விட்டது என பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டிலிருந்த மில்கொலின்ஸ் சுதந்திர வானொலியே பிரச்சாரத்தை ஆரம்பித்து படுகொலையை ஆரம்பித்து வைத்தது.

தமது உயிரைக் காப்பாற்றும் பொருட்டு மக்கள் தேவாலயங்கள், பாடசாலைகள் என பலவற்றில் தஞ்சம் புகுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஈகொல் தொழில்நுட்பக் கல்லூரியில் தஞ்சம் கோருகிறார்கள். ஐநா படைகள் அங்கிருப்பதால் தாம் பாதுகாக்கப்படலாம் என நம்புகிறார்கள். ஆனால் ஐ.நா அமைதிப் படையின் இராணுவ கப்டன் இது ஒரு இராணுவ முகாம் என்றும் அவர்களை அங்கு தங்க வைக்க முடியாதெனவும் மறுக்கிறான். எனினும் பாதிரியார் கிறிஸ்தோபர் அந்த மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு தமக்கிருப்பதாகக் கூறி அந்த மக்களை உள்வாங்கிக் கொள்கிறார்.

இந்த மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக, மனிதாபிமானம் கொண்ட மனித ஆத்மாக்களாக பாதிரியார் கிறிஸ்தோபரும், ஆசிரியன் ஜோவும் இருக்கிறார்கள். கிஹாலியில் நடந்து கொண்டிருப்பவற்றை உலகிற்குக் காட்டுவதற்கு விரும்புகிறான் ஜோ. அதற்காக பி.பி.சியின் உதவியை நாடலாமென பாதிரியாரிடம் கூறுகிறான். தனது பிபிசி நண்பியான ரேச்சலை அழைத்து வர ஜோ செல்கிறான். முதலில் தனக்கு வேலை இருக்கிறதெனக் கூறி மறுக்கும் ரேச்சல் பின் ஐரோப்பியர்களும் அங்கு சிக்கியுள்ளார்களென்றதும் வரச் சம்மதிக்கிறாள்.

வரும் வழியில் ஹுட்டுக்களால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டு முட்டுக்காலில் விடப்படுகிறார்கள். அப்போது ருட்சிக்களை வாள்களால் வெட்டிக் கொல்லும் காட்சியைக் காண்கிறான் ஜோ. அந்தச் சூழல் அவனை உறைந்து போகச் செய்கிறது. அதைவிட அதைச் செய்பவர்களில் ஒருவன் தனது நண்பனும், கல்லூரியின் வாகன சாரதியுமான பிரான்கொஸ் என காணும் போது அதிர்ச்சியில் உறைந்து போகிறான்.

பிரான்கொஸ் அவர்களைப் போகும்படி கூறும்போது தன்னிலையிலில்லாதவனாக வானகத்தை ஓட்டிச் செல்கிறான். வரும் வழியெங்கும் பிணங்கள் வெட்டிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. இனப்படுகொலைகளின் கொடுரங்களை பி.பிசி பதிவு செய்கிறது. தொழில்நுட்பக் கல்லூரி சுற்றிவர கொலை வெறிகொண்ட ஹுட்டு காடையர்களால் சு10ழப்பட்டு ருட்சிக்கள் தப்பிக்க வழியில்லாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்பக் கல்லூரிக்குள் இருக்கும் ருட்சிக்களை வெளியில் அனுப்புமாறு கையில் கோடரியுடனும் வாளுடனும் ஆரவாரத்துடன் கோசமிட்டபடி இருக்கின்றனர்.

ஜோவினால் அழைத்துவரப்பட்ட பிபிஸி செய்தியாளர் ஐ.நாவின் இராணுவக் கப்டனை நேர்காணும் போது ருட்சிகளையும் அவர்களை ஆதரிப்போரையும் ஹுட்டுவினர் கொலை செய்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளும் கப்டன், சிலர் இதனை இனப்படுகொலை என்கிறார்களே நீங்கள் அவ்வாறு அழைப்பீர்களா என்று கேட்டவுடன் பதிலளிக்க முடியாமல் தடுமாறுகிறான். இது இனப்படுகொலை என்றால் அதில் தலையிட்டு அதனைத் தடுக்க வேண்டிய கடப்பாடு ஐநாவுக்கு இருக்கிறதல்லவா என்று கேட்டதும் கோபமடைந்த கப்டன் கமெராவை நிறுத்துமாறு கத்துகிறான். தான் ஐநாவின் பாதுகாப்புக் கவுன்ஸில் அல்ல என்றும் அதன் ஆணையின்படி செயற்படும் ஒருவன் மட்டுமே என்றும் வேண்டுமானால் நியூயோர்க்குடன் தொடர்பு கொண்டு அதன் ஆணையை மாற்றுங்கள் என்றும் கோபத்துடன் கூறுகிறான்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தைக்கு மருந்து வாங்கும் பொருட்டு வெளியில் செல்லும் பாதிரியார் கிறிஸ்தோபர் மருந்து விற்பனை செய்பவனின் வீட்டில் கொலை செய்யப்பட்ட ருட்சிகளின் பிணங்களைக் காண்கிறார். மருந்து ஹுட்டுவிற்கா ருட்சிக்கா என மருந்து விற்பவன்; கேட்கிறான். ஹுட்டுவிற்கு எனசொல்லியதாலும் அதிக பணம் கொடுத்ததாலும் அவருக்கு மருந்து கிடைக்கிறது. வரும் வழியில் கிறிஸ்தவ சகோதரிகள் தங்கியுள்ள கொன்வென்ட்டிற்குச் செல்லும் அவர் அங்கே ருட்சிகளான அந்த சகோதரிகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொடுரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போகிறார். திரும்பி வரும் தெருவெங்கும் இரத்தத்தில் உறைந்து போயிருந்த ருட்சி மக்களின் பிணங்களை நாய்கள் தின்று கொண்டிருக்கின்றன.

இந்தப் படுகொலைகளின் தீவிரத்தைத் தாங்க முடியாமல் மனங் கொதித்துப் போய் தள்ளாடியபடி திரும்பும் கிறிஸ்தோபரிடம், இந்த வன்செயல்களால் கிஞ்சித்தும் சலனப்படாத ஐ.நா இராணுவக் கப்டன் தெருவில் கிடக்கும் பிணங்களை நாய்கள் தின்னுவதனால் சுகாதாரக்கேடு எனவும் அவைகளைத் தாம் கொல்லப் போவதாகவும் அதனால் மக்களை பயப்படாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளும்படி கேட்கிறான்.

வெகுண்டெழுந்த பாதிரியார் கிறிஸ்தோபர் அவனைத் திருப்பிக் கேட்கிறார் இந்த நாய்களைக் கொல்வதால் பிரச்சினை தீராது. புதுப்புதுப் பிரச்சினைதான் உருவாகும். பதிலாக (தொழில்நுட்பக் கல்லூரியின் வாசலுக்கு வெளியே வாட்களுடனும், கோடரிகளுடனும் ருட்சிகளைக் கொல்வதற்காக ஆரவாரத்துடன் காத்திருக்கும் ஹுட்டு கொலை வெறிக் கும்பலை நோக்கியபடி) அந்த நாய்களை உன்னால் கொல்ல முடியாதா? தெருநாய்களைக் கொல்லத்தான் உன்னால் முடியும். இந்த வெறிநாய்களை அல்ல. உனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் அப்படி. அவரிடமிருந்து காட்டமாக வரும் பதிலால் கப்டன் அதிர்ந்து போகிறான்.
இந்தக் கேள்வியின் மூலம் வெட்டப்பட்டுக் கிடக்கும் பிணங்களை தின்னும் தெருநாய்களை சுகாதாரக்கேடென்று சுட முனையும் ஐ.நா படையினர் இவ்வளவு மக்களும் படுகொலை செய்யக் காரணமாக இருந்த வாளோடு திரியும் நாய்களை நோக்கி ஒருபோதும் துப்பாக்கியைத் திருப்பியதில்லை என்பதை மட்டுமல்ல, அப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக் கூட அவர்களால்; முடியவில்லை என்பதைத் துல்லியமாக விளக்குகிறார் இயக்குனர் மைக்கல் ஹற்றன் ஜோன்ஸ். இதனையே படத்தின் தலைப்பாகவும் அவர் கொண்டு வருகிறார்.

இந்த சம்பவத்தின் பின் முகாமிலுள்ளவர்களின் உணவுத் தயாரிப்பிற்காக எரிப்பதற்கு விறகு கேட்கும் மரியாவிடம் கல்லுரி வளாகத்தினுள் அவளை அழைத்துச் சென்று பைபிள்களை எடுத்துக் கொடுத்து விறகாகப் பயன்படுத்தும்படி கூறுகிறார் பாதிரியார் கிறிஸ்தோபர்.

இந்தவேளையில் கல்லூரிக்குள் சிக்குண்டிருக்கும் ஐரோப்பியர்களை அவர்களுடைய நாடுகளுக்கு அனுப்ப பிரான்ஸ் இராணுவம் வருகிறது. அவர்களிடம் தங்களையும் காப்பாற்றும்படி இறைஞ்சிக் கேட்கும் கறுப்பின மக்களை ஏறெடுத்தும் பார்க்காத பிரான்ஸ் இராணுவம் ஐரோப்பிய ஆண், பெண்களைத் திருமணம் செய்த ருட்சியினரையும் இந்த மக்களுடன் விட்டு விட்டு தாம் வந்த கடமையை நிறைவேற்றும் பொருட்டு வெள்ளையின மக்களை மட்டும் ஏற்றிக் கொண்டு புறப்படுகிறது. அவர்களுடன் பி.பி.சி செய்தியாளர்களும் செல்கின்றனர். பி.பி.சியின் கடமையும் இத்துடன் முடிந்து போகிறது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் பாதிரியார் கிறிஸ்தோபர் ஐநா இராணுவக் கப்டனிடம் கேட்கிறார். ஹுட்டுக்கள் ஏன் ஐநா இராணுவத்தைக் கொன்றார்கள். அவர்கள் ஒன்றும் முட்டாள்களில்லையே. அவர்கள் அதன் விளைவுகளை அறிவார்கள் தானே?

கப்டன் சொல்கிறார். அவர்கள் விளைவுகளை அறிவார்கள். அந்த விளைவுகளை எதிர்பார்த்தே அவர்கள் செய்தார்கள். சோமாலியாவில் 30 ஐநா இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஐநா அங்கிருந்து வெளியேறியது. இங்கு 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அப்படியானால் இங்கிருந்தும் ஐநா வெளியேறுமா! எனக் கேட்கிறார் பாதிரியார் கிறிஸ்தோபர்.

நான் ஒரு சிப்பாய் மட்டுமே! என்கிறான் கப்டன்.

கப்டன் கூறியதற்கு ஏற்ப நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆயத்தமாகிறது ஐநா இராணுவம். ஆனால் மக்கள் தங்களைக் காப்பாற்றும்படி அல்லது அழைத்துச் செல்லும்படி கதறுகிறார்கள். ஐ.நா இராணுவத்தின் வாகனங்களின் முன் விழுந்து அவர்களைப் போகவிடாமல் தடுக்கிறார்கள். தாங்கள் கைவிடப்பட்டால் ஹுட்டுக்களால் கொல்லப்படுவோம் எனக் கதறுகிறார்கள்.

மரியாவின் தந்தை கப்டன் சார்ள்ஸிடம் கேட்கிறான். ‘‘நீங்கள் போவதானால் எங்கள் எல்லோரையும் சாகடித்து விட்டுப் போங்கள். நாங்கள் வாள்களால் வெட்டுப்பட்டுச் சாக விரும்பவில்லை. எங்களை உங்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள். அதற்கு நாங்களே பொறுப்பென எழுதிக் கையொப்பமிட்டுள்ளோம். பெரியவர்களைக் கொல்லாவிட்டாலும் சிறுவர்களையாவது கொன்று விட்டுச் செல்லுங்கள். எங்களின் கண்களின் முன் எங்கள் பிள்ளைகள் வெட்டுப்பட்டுச் சாவதை நாங்கள் விரும்பவில்லை’’ என்று இறைஞ்சுகிறான். ஐ.நா. இராணுவமா இந்த இறைஞ்சல்களுக்கெல்லாம் உருகப் போகிறது. அந்த அதிகாரம் தனக்கு வழங்கப்படவில்லையெனக் கூறி இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ருட்சி மக்களை அனாதரவாக விட்டு விட்டு தொழில்நுட்பக் கல்லூரியை விட்டு வெளியேறுகிறது.

வன்னியிலும் ஐ.நா. மனிதாபிமானப் பணியாளர்களை வெளியேற்றுவதற்கும் சிறிலங்கா அரசால் இவ்வாறான ஒரு வழிமுறையே பின்பற்றப்பட்டது. மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டதும் தமது பணியாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு ஐ.நா. பணித்தது. ஐ.நா. வெளியேறியதும் தம் மீது படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்படும் என்று மக்கள் கதறி ஐ.நாவைத் தடுத்தும் கூட அது அங்கிருந்து வெளியேறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. வெளியேறியதும் அவ்வளாகத்தைச் சுற்றி கையில் வாளுடனும் கோடரியுடனும் நிற்கும் ஹுட்டுக்கள் வளாகத்தினுள் நுழைந்து படுகொலையில் இறங்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்த பாதிரியார் தனது கையாலாகா நிலைமையை உணர்கிறார். சிறுவர்களையாவது காப்பாற்றும் பொருட்டு தனது வாகனத்தின் பின்புறத்தில் மரியா உட்பட பல சிறுவர்களை ஏற்றி படங்கினால் அவர்களை மூடி வெளியே கொண்டு செல்கிறார்.

வழியில் அவரை மறிக்கும் ஹுட்டு இனத்தவனால் அவர் படுகொலை செய்யப்பட, மரியா மற்ற சிறுவர்களையும் தப்ப வைத்து தானும் தப்பி ஓடுகிறாள். பிணங்களைக் கடந்து கடந்து ஓடிக் கொண்டேயிருக்கிறாள். அந்தக் காட்சியை ஒட்டியவாறே ருவண்டாவில் இனப் படுகொலை நடக்கவில்லையென ஐ.நாவால் கூறப்படும் கருத்தினையும் இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பது, ஐ.நாவின் கீழ்த்தரமான செயலை ஆணித்தரமாக, ஆதாரத்துடன் நிரூபிப்பது போல் உள்ளது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளை, கர்ப்பிணிப் பெண்களை கருவுடன் சிதைத்து இறைச்சிக்கு மிருகங்களை அறுப்பதுபோல் அறுத்துத் தள்ளியபோது ஐ.நா பாராமுகமாக, அதிர்ச்சியற்ற நிலையில் பார்த்துக் கொண்டிருக்கிறது. பின் அங்கு ஒரு இனப்படுகொலையே நடக்கவில்லை என்கிறது.

பல சமயங்களில் ஐ.நா இராணுவத்திடம் ருட்சிகளால் உதவிகள் கோரப்படும் போதெல்லாம் இந்தப் பிரச்சினையில் தலையிட தமக்கு அதிகாரம் இல்லை, தாம் சமாதானத்தைக் கண்காணிப்பதற்காக மட்டுமே அங்கு வந்திருப்பதாகக் கூறித் தட்டிக் கழித்து விடுகின்றது. ருட்சிக்கள் கொல்லப்படுவதைத் தட்டிக் கேட்க தமக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்று கூறிய சமாதானத்தை மட்டும் கண்காணிப்பவர்களான ஐ.நா. பிரச்சினைகளுக்குள் ஆட்படாத வெள்ளையர்களைக் காப்பாற்றி அவர்களை அவர்களுடைய நாடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்புவதில் மும்முரமாக ஈடுபட்டு அவரவர் நாடுகளுக்குப் பாதுகாப்பாக அனுப்பியும் வைத்தது. இதனை என்னவென்பது. இங்கே ஹுட்டுக்களின் இனவெறி மட்டுமல்ல, ஐ.நாவின் நிறவெறியும், பாராமுகமும் கூட கைகோர்த்துள்ளமையை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டியிருக்கிறதல்லவா?

படத்தின் இறுதிக் காட்சியில் மரியா ஓடிக் கொண்டிருப்பது போல வன்னியில் நமது மக்களும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். கொல்லப்பட்டுக் கிடக்கும் சடலங்களைக் கடந்து காயப்பட்டுக் கிடக்கும்
மனிதர்களில் முட்டி மோதி ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள் திசையறியாது அநாதரவாக நிர்க்கதியாக!

globaltamilnews.com
05.05.2009