Tuesday, August 3, 2010

கூடைக் குண்டுகளை வாங்கிக் கொண்டு, விமானக் குண்டுகளைத் தாருங்கள். The Battle of Algiers.





பயங்கரவாதம் என்ற சொல் முழு உலகின் அணி சேர்க்கையையும் இன்று மாற்றி வருகிறது. பனிப் போருக்கு முன்னர் இரண்டாகப் பிளவுபட்டிருந்த உலகங்கள் இன்று பயங்கரவாத்திற்கெதிராக என்ற அடிப்படையில் ஓரணியில் இணைந்து கொள்கின்றன. இதில் கொம்யூனிச நாடுகளாக அறியப்பட்ட நாடுகளும் விதிவிலக்கல்ல.

இந்த நிகழ்ச்சிகள், எது பயங்கரவாதம்? பயங்கரவாதத்தை உருவாக்கும் ஊக்குவிக்கும் காரணிகள் எவை? யார் பயங்கரவாதிகள்? என்ற கேள்வியை நம்முள் மீள எழுப்பி விடுகின்றது. இந்தக் கேள்வியை நல்ல படைப்பாளிகளும் கலைஞர்களும் எப்போதும் எழுப்பிக் கொண்டே இருப்பார்கள்.

பற்றில் ஒவ் அல்ஜீயர்ஸ் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் பிரெஞ் இராணுவத்திடம் பிடிபட்ட அல்ஜீரிய விடுதலைப் போராளியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்கிறார், ''பெண்கள் கூடையில் குண்டுகளைக் காவிச் சென்று வெடிக்க வைப்பது தவறானதும் வெட்கக்கேடானதும் இல்லையா?''

அதற்கு அந்த விடுதலைப் போராளி இப்படிப் பதிலளிக்கிறான்: ‘எந்தவித பாதுகாப்புமற்ற அப்பாவி மக்களின் மேல் நேபாம் குண்டுகளை வீசி அவர்களை அழித்தொழிப்பது மட்டும் சரியானதா? அது சரியானதென்றால் குண்டுவீச்சு விமானங்களையும் குண்டுகளையும் எங்களிடம் தந்துவிட்டு கூடைகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று.

தனிநபர்கள் ஏன் பயங்கரவாதத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்பதையும், எப்.எல்.என். எனும் அல்ஜீரிய தேசிய விடுதலை இயக்கம் (FLN - National Liberation Front) எவ்வாறு ஒரு மக்கள் இயக்கமாக உருமாறுகிறது என்பதையும் பற்றில் ஒவ் அல்ஜீயர்ஸ் என்ற திரைப்படம் வெளிப்படுத்துகிறது.

கொலனித்துவத்திற்கெதிரான போரை இத்திரைப்படத்தைப் போல வேறு ஒரு திரைப்படமும் வெளிப்படுத்தவில்லை என்று கூறலாம்.

1950 மற்றும் 1960கள் உலகம் முழுவதும் கொலனியத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான தேசிய விடுதலைப் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்தன. அத்தகைய போராட்டங்களுள் ஒன்று தான் அல்ஜீரிய விடுதலைப் போராட்டமும். எப்.எல்.என் எனும் தேசிய விடுதலை முன்னணி பிரெஞ்சு காலனியவாதிகளுக்கெதிரான ஆயுதப் போராட்டத்தை நடாத்தி வந்தது.

ஏறத்தாழ அன்று ஒன்பது மில்லியன் மக்களைக் கொண்டிருந்த அல்ஜீரியாவில் பிரெஞ்சு இராணுவத்தினரால் ஒரு மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டு நாடு முழுவதும் போராட்டம் வெடித்துக் கிளம்பிய 1954 தொடக்கம் 1957 வரையான காலப்பகுதியை மையமாகக் கொண்டே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிரான்ஸ் இராணுவத்திடம் பிடிபட்டு கடும் சித்திரவதைக்கு ஆளாகிய ஒரு அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராளி, கடும் சித்திரவதை காரணமாக தனது தோழர்கள் தங்கியுள்ள இடத்தைக் காட்டிக் கொடுப்பதற்கு ஒத்துக் கொள்வதுடன் இந்தத் திரைப்படம் ஆரம்பமாகிறது. உண்மையில் அவன் காட்டிக் கொடுக்கும் விருப்பற்றவனாக இருந்தபோதும் கடுமையான சித்திரவதைகள் அவனை காட்டிக் கொடுப்பிற்கு உந்துகின்றன. இதனைத் தொடர்ந்து கஸ்பா நகரத்தின் ஒரு வீட்டிலுள்ள சுவருக்குப் பின்னால் இரகசிய இடமொன்றினுள் ஒளிந்திருக்கும் அல்ஜீரிய தேசிய விடுதலை இயக்கத் தலைவர்களில் ஒருவனான அலி லா பொன்ரேயும் அவனுடைய தோழர்கள் இருவரும், தோழி ஒருத்தியும் ஒளிந்து கொண்டுள்ள இடம் இராணுவத்தினரால் முற்றுகையிடப்படுகிறது.

அலியையும் மற்றவர்களையும் அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை தம்மிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வருமாறும், எப்.எல்.என் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டும், சிறைப்பிடிக்கப்பட்டும் உள்ளார்கள். நீதான் கடைசி ஆள் எனவே இப்பொழுது நீ சரணடைந்தால் நீதியான விசாரணைக்கு உட்படுத்தப்படுவாய். உனது மனதை மாற்றிக்கொள் என கேணல் மத்யூ கூறுவதோடு அலியின் கண்களினூடாக கமெரா மிகத் தத்ரூபமாகப் பின்னோக்கிய காட்சிகளுக்கு நகர்கிறது, அதனூடாக அல்ஜீரிய மக்களின் காலனித்துவத்திற்கெதிரான போராட்டத்தை நம் பார்வைக்குக் கொண்டு வருகிறார் அதன் இயக்குனர் ஜிலோ பொன்ரர்கோவோ.

ஒரு சாதாரண திருடனாக இருக்கும் அலி லா பொன்ரே பொலிஸாரிடம் பிடிபட்டு எட்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கே ஏற்கெனவே சிறைப்பட்டிருக்கும் அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராளிகளினது நட்பு அவனுக்குக் கிடைக்கிறது. ஒரு அல்ஜீரியப் பிரஜையாக வெளியிலிருந்து தான் பட்ட அவமானங்களும், வேதனைகளும் அவனை இயக்கத்தின் பால் ஈர்க்கிறது. ஐந்து மாதங்களின் பின் அவன் அல்ஜீரிய விடுதலைப் போராளியாக சிறையிலிருந்து வெளிவருகிறான். அலி தமது நம்பிக்கைக்குரியவனா அல்லது இராணுவத்தினால் வேவு பார்க்க அனுப்பப்பட்டுள்ளவனா என பரிசோதித்துப் பார்க்கும் பொருட்டு ஒரு பிரெஞ்சுப் பொலிஸைச் சுடும்படி அவனுக்கு தோட்டக்கள் நிரப்பப்படாத வெற்றுத் துப்பாக்கி ஒன்று எப்.எல்.என் ஆல் கொடுக்கப்படுகிறது. அதனை அறிந்து கொள்ளாத அலி பொலிஸைச் சுடும் பொழுது தோட்டாக்கள் வெடிக்காததனையிட்டு ஒருகணம் அதிர்ந்து போகிறான். மறுகணம் பொலிஸைத் தாக்கிவிட்டு ஓடுகிறான். இதன் மூலம் அவன் எப்.எல்.என்னின் நம்பிக்கைக்குரியவனாகிறான். விரைவிலேயே விடுதலைப் போராட்டத்தின் முக்கிய போராளியாகி விடுகிறான்.

பிரெஞ்சுக் கொலனியவாதிகளினால் அடக்குமுறைகளுக்கும், அவகௌரவத்திற்கும், அவமானங்களுக்கும் ஆளாகும் அல்ஜீரிய மக்கள் பிரெஞ்சுக் கொலனியவாதிகளுக்கெதிராக தமது வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். பெருமளவான இளைஞர், யுவதிகள் அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தோடு தம்மை இணைத்துக் கொள்கிறார்கள். இயக்க உறுப்பினர்கள் ஒளிந்து கொள்வதற்காகவும், தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவுமான நம்பிக்கைக்குரிய இடங்களாக அல்ஜீரிய மக்களின் வீடுகள் திறந்து கொள்கின்றன.

அல்ஜீரிய மக்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக அந்த மக்களுடைய குடியிருப்புக்களில் பொலிசுடன் சேர்ந்து கொலனியவாதிகள் இரகசியமாகக் குண்டொன்றை வெடிக்க வைக்கிறார்கள். அதில் பெருமளவான மக்கள் பலியாகிப் போகிறார்கள். பதிலுக்கு பிரெஞ்ச் குடியிருப்பாளர்கள் வாழும் குடியிருப்புப் பகுதியிலுள்ள கபேயிலும், எயர் பிரான்ஸ் அலுவலகத்திலும் அல்ஜீரியப் பெண்போராளிகள் குண்டை வெடிக்க வைக்கிறார்கள்.

இந்நிலையில் கேர்ணல் மத்யூ பிலிப் தலைமையிலான பிரெஞ் இராணுவத்தினரை கிளர்ச்சிக்காரர்களை ஒழிக்க பிரான்ஸ் அரசாங்கம் அல்ஜீரியாவிற்கு அனுப்பி வைக்கிறதுது. கேர்ணல் மத்யூ பல போர்களில் வெற்றிகளைக் குவித்த மிகச் சிறந்த இராணுவத்தளபதி.

அல்ஜீரியாவில் இருந்த பிரான்ஸ் இராணுவ அதிகாரியான ஜெனரல் மாசுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கேர்ணல் மத்யூ பாத்திரத்தில் ஜீன் மார்ட்டின் என்ற நடிகர் நடித்துள்ளார். இவர் அடிப்படையில் ஒரு நாடக நடிகர். அல்ஜீரியா மீதான பிரான்ஸின் போரை எதிர்த்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கையொப்பமிட்டதன் காரணமாக பிரான்ஸ் அரசால் எச்சரிக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார்.

உண்மையில் இந்தப் படத்தில் அலி பாத்திரம் ஒரு நெருப்பென்றால், மத்யூ ஒரு உறைந்த பனி என்று சொல்லலாம்.

அல்ஜீரிய விடுதலைப் போராட்ட வீரர்களை எவ்வாறு அழித்தொழிப்பதென்று இராணுவக் குழுவினருக்கு கற்பிக்கும் போதும், அல்ஜீரிய விடுதலை இயக்க உறுப்பினர்களைக் கைது செய்த பின்னர் நடாத்தப்படும் பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் கேர்ணல் மத்யூவாக நடித்திருக்கும் ஜீன் மார்ட்டின் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு, காலனித்துவத்தின் வழிப்பறிக் கொள்ளை எவ்வாறிருக்குமென பொன்ரர்கோவோ வெளிப்படுத்த நினைத்தாரோ அதனை சிறிதும் பிசகின்றி தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளது. அதிகாரத்திலிருக்கும் பகட்டுத்தனமான மனிதர்களின் உள்ளே உறைந்திருக்கும் அருவருக்கத்தக்க உண்மைகளையும், அவர்களுடைய சித்திரவதைகள் போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளையும் இத்திரைப்படத்தில் இயக்குனர் வெளிக் கொணர்ந்துள்ளார்.


மத்யூவின் கெரில்லாக்களுக்கெதிரான நடவடிக்கைகள் புதியனவாக இருக்கின்றன. அவன் கூறுகிறான் ‘அல்ஜீரியாவில் 9 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரும் எமது எதிரிகளல்லவென்பது எமக்குத் தெரியும். ஆனால் ஒரு சிறு தொகையினர் அச்சம் தருபவர்களாகவும், வன்முறைகளைக் கையாள்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்று.’

அவர்களை எப்படிக் கண்டு பிடிப்பது என்பதைப் பற்றி இராணுவத்தினருக்கு கேர்ணல் மத்யூவினால் வகுப்பெடுக்கப்படுகிறது. கெரில்லாக்கள் எவ்வாறு செயற்படுவார்கள் அவர்களுக்கு யார் யாருடன் தொடர்பிருக்கும் என்பது பற்றிய முழுமையான அவர்களின் செயற்பாடு பற்றி இராணுவத்தினருக்குத் தெளிவுபடுத்தப்படும் அதேவேளை கெரில்லாக்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பமாகின்றன. இதற்கு Operation Champagne’ என்று பெயரும் இடப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராட்டத்தை இராணுவம் ஒடுக்கத் தொடங்குகிறது. தலைவர்களிற் சிலரும், உறுப்பினர்களும் இராணுவத்திடம் பிடிபடுகின்றனர். சிலர் கடும் சித்திரவதைகளின் பின் கொல்லப்பட்டனர், சிலர் சித்திரவதையின் கொடூரம் தாங்காமல் மற்றவர்களைக் காட்டிக் கொடுத்தனர். இவ்வாறு காட்டிக் கொடுப்பவர்களால் மற்றைய தலைவர்களின் மறைவிடங்கள் சுற்றிவளைக்கப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டனர். அல்லது கொல்லப்பட்டனர்.

கெரில்லா இயக்கத்தின் அமைப்பையும் தன்மையையும் பண்பையும் கண்டறிந்து பதில் நடவடிக்கைக்கு திட்டமிடுகிறான் கேர்ணல் மத்தியூ

இறுதியாக அலியின் மறைவிடம் காட்டிக் கொடுக்கப்படுகிறது. வீடொன்றின் சுவற்றின் பின்னால் உள்ள இரகசிய இடம் ஒன்றில் மறைந்திருக்கும் இவர்களை இராணுவம் சுற்றி வளைக்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சிக்கு மீள வருகிறது. வெளியில் வரும்படி அழைத்தும் அலியும் அவனுடனுள்ள போராளிகளும் வராததனால் மக்கள் குடியிருப்பிலுள்ள அவர்களின் மறைவிடம் மக்களின் கண்ணெதிரேயே குண்டு வைத்துத் தகர்க்கப்படுகிறது. அத்துடன் கெரில்லாப் போராட்டம் முடிவுக்கு வருகிறது. அழித்தொழிக்கப்பட்ட எப்.எல்.என் போராளிகளின் பிணங்களின் மேல் பிரான்ஸ் இராணுவம் வெற்றிவாகை சூடிக் கொள்கிறது.

கெரில்லாக்கள் அழித்தொழிக்கப்பட்டாலும், அவர்கள் போட்ட விதைகள் விளையவாரம்பித்தன. அடுத்த மூன்று வருடங்களில் அது அல்ஜீரியாவில் மக்கள் புரட்சியாக வெடித்தது. யுத்தத்தில் மடிந்து போன வீர, வீராங்கனைகளின் கனவுகள் பலிக்கும் காலமாக அது உருக் கொண்டது. 1960களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற இந்த மக்கள் புரட்சியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அல்ஜீரிய மக்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான கொடிகளுடனும், கோசங்களை எழுப்பியவாறும் தமது சுதந்திரத்திற்காக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினார்கள். இந்த மக்களது போராட்டத்தைத் தடுக்கவியலாத இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதன் போது ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டபோதும் இராணுவத்தினரினது அடக்குமுறைகளையும், தடைகளையும் மீறி இவர்கள் போராட்டம் வலுப் பெற்றது.

மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நடத்திய இந்தப் போராட்டத்தினால் கொலனியவாதிகள் அதிர்ச்சியடைந்தனர். கெரில்லா இயக்கத்தைத் துடைத்தழித்த அவர்களால் மக்களுடைய விடுதலை வேட்கையை அழித்து விட முடியவில்லை. தொடர்ச்சியாக மூன்று வருட காலமாக நடைபெற்ற இந்த மக்கள் போராட்டம் 1962ஆம் ஆண்டு ஜுலை மாதம் கிடைக்கப் பெற்ற சுதந்திரத்துடனும், அல்ஜீரிய தேசியத்தின் பிறப்புடனும் முடிவுக்கு வந்தது.

பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கை, ஆயுதக்கலகத்திற்கெதிரான நடவடிக்கை, சித்திரவதையினூடாக உண்மைகளை வெளியிலெடுத்தல் போன்றவற்றினுள் உறைந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொணரும் இத்திரைப்படம் செப்ரம்பர் 11க்குப் பின்னரான ஜோர்ஜ் டபிள்யூ புஸ்ஸின் பயங்கரவாதத்திற்கெதிரான போர்ப் பிரகடனத்தின் போது, இந்தப் போரில் பணிபுரியும் அமெரிக்கப் படையினருக்காகவென, யுத்த கள வழிகாட்டியாக 2003ஆம் ஆண்டு பென்ரகனில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. அதுவே ஈராக், ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் உலகெங்கும் இப்போது என்ன நடைபெறுகின்றது என்பதைப் புரிந்து கொள்ள வைக்கிறது.

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து கொண்டன. இலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க அதே மேற்குடன் தென்னாசிய நாடுகள் இணைந்து கொண்டமை ஒரு புறம் என்றால் மறுபுறம் எதிரெதிர் நிலையில் இருந்த ஜனநாயக நாடாகத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் இந்தியாவும் கம்யூனிஸ நாடாகத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் சீனாவும், ரஸ்யாவும் கூட அதே அணிசேர்க்கைக்குள் வந்திருந்தன. ஆச்சரியம் அதுவல்ல, அந்தப் பயங்கரவாத ஒழிப்புக்கு அமெரிக்காவால் இன்றுவரை பாதிக்கப்படும் கியூபாவும், அமெரிக்காவின் நேரடி மற்றும் மறைமுக ஆதிக்கத்திலிருந்து ஜனநாயக வழிமுறையூடாக விடுவித்துக் கொண்டு இடதுசாரி நிலைப்பாட்டை நோக்கி நகரும் பொலிவியாவும், ஆஜென்ரீனாவும்கூட ஆதரவளித்திருந்தன என்பது தான்.
அல்ஜீரிய தேசிய விடுதலை இயக்கத்தின் (FLN) கிளர்ச்சித் தலைவர்களில் ஒருவரான சாதி யசீப் பிரான்ஸ் சிறையில் இருந்தவாறே பற்றில் ஒப் அல்ஜீர்ஸ் திரைக்கதைக்கான குறிப்புக்களை எழுதியுள்ளார். சிறையிலிருந்து விடுதலையான யசீப் இதனைப் படமாக்க இத்தாலியின் மிகச் சிறந்த நெறியாளர்களான லுச்சினோ விஸ்கொன்ரி (Luchino Visconti) , ப்ரான்செஸ்கோ ரோசி (Francesco Rosi), ஜிலோ பொன்ரர்கோவோ ஆகிய மூன்று மிகச் சிறந்த திரைப்பட நெறியாளர்களையும் அணுகியிருந்தார். இறுதியில் பொன்ரர்கோவோவே இத்திரைப்படத்தை இயக்குவதென்று முடிவாகியது. இதன் பின் இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை ஃபிரான்கோ சொலினஸடன் இணைந்து பொன்ரர்கோவோ எழுதியுள்ளார். யசீப் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தின் முக்கிய பாத்திரமான எப்.எல்.எம். இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரான அல் ஹாதி ஜபாராக நடித்துமுள்ளார்.

1919ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த ஜிலோ பொன்ரர்கோவோ ஒரு யூதராவார். பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் மாணவராகப் பயின்று கொண்டிருந்த போது இடதுசாரி கொள்கை கொண்ட பேராசிரியர்களுடனும், மாணவர்களுடனும் இவருக்கு நட்பு ஏற்படுகிறது. பட்டதாரியாகிய பின் இத்தாலியில் யூதர்களுக்கெதிராக வளர்ந்து கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக இத்தாலியை விட்டு பிரான்ஸ் சென்ற பொன்ரர்கோவோ இத்தாலி பத்திரிகையொன்றின் நிருபராகப் பணியாற்றினார். 1933ஆம் ஆண்டு பிரான்ஸின் திரைப்பட உலகத்தினுள் பிரவேசிக்கும் இவர் ஆரம்பத்தில் சில விவரணப் படங்களைத் தயாரித்தார். இதன் பின்னர் மார்க்ஸியவாதியும், டச்சு விவரணப்பட இயக்குனருமாகிய ஜோரிஸ் ஐவென்ஸிடம் உதவியாளராகச் சேர்ந்து கொண்டார். பொன்ரகோர்வோ தன்னுடைய கொள்கைகளுடன் நெருக்கமானவர்களான பாப்லோ பிக்காஸோ, ஐகர் ஸ்றாவின்ஸ்கி, ஜீன் போல் சார்த்தர் ஆகியோரைச் சந்திக்கும் காலத்தில்தான் அவருடைய அரசியல் எண்ணங்கள் வளர்ச்சி பெற்றன. 1941 இல் இத்தாலிய கொம்யூனிசக் கட்சியில் இணைந்து கொண்டார். இத்தாலிய பாசிஸ எதிர்ப்பியக்கத்திலும் இவர் பணியாற்றினார். 1956 இல் ஹங்கேரி மீதான சோவியத்தின் படையெடுப்பை அடுத்து அவர் கொம்யூனிசக் கட்சியிலிருந்து விலகிய போதும் தான் புரட்சிகரப் பாதையிலிருந்தும், மார்க்ஸிய அர்ப்பணிப்பிலிருந்தும் விலகவில்லையென அறிவித்தார். இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இத்தாலி செல்லும் இவர் பத்திரிகை நிருபர் பதவியிலிருந்து விலகி முழுநேரமாக திரைப்படத்துறையில் நுழைந்து 20ற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பெருமளவில் அரசியல் நிகழ்வுகள் சார்ந்த மிக முக்கியமான திரைப்படங்களை இயக்கியுள்ள பொன்ரர்கோவோவின் படங்களில் ஒன்றாக 1966 இல் வெளிவந்த பற்றில் ஒப் அர்ஜீயர்ஸ் விளங்குகின்றது. இத்திரைப்படத்தில் பொன்ரர்கோவோ மிகையதார்த்த வாதத்தையும், நவயதார்த்தவாதத்தையும் இணைக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை எடுக்கு முன் பிரான்ஸ் ஃபனானை இவர் முழுமையாக வாசித்திருந்தபடியால், இந்தத் திரைப்படத்தில் பிரென்சுச் சிந்தனையாளரான ஃபனானின் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்துபவையாக உள்ளதாகவும், பற்றில் ஒப் அர்ஜியர்ஸ் திரைப்படம் விவரணத்தன்மை வாய்ந்த அரசியற்படமென்ற வகையில் ஐசன்டினின் பற்றில்ஸிப் பொட்டம்கின் திரைப்படத்தோடு ஒப்பிடத்தக்கது எனவும் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

வியட்னாமின் வியட்மின், அயர்லாந்தின் ஐ.ஆர்.ஏ, நிக்கரகுவாவின் சன்டினிஸ்டா போன்ற பல தேசிய விடுதலை இயக்கங்களுக்கு இத்திரைப்படம் ஆதர்சமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. விடுதலை இயக்கங்களுக்கு மட்டுமல்லாமல் திரைப்பட இயக்கத்திலும் அரசியல் திரைப்படங்களுக்கு இத்திரைப்படம் ஒரு முன்மாதிரியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குளோபல் தமிழ் செய்திகள்
16.08.2009

நரகத்தை நோக்கிய ஒரு பாதை... The Road to Guantanamo



‘நீ அல்ஹைய்தாவா?’ கேட்பது ஒரு அமெரிக்க அதிகாரி. ஆணவமும் அகங்காரமும் அவன் முகத்தில். அவனுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் ஆசிப் சொல்கிறான் “இல்லை”. அந்த அமெரிக்க அதிகாரியுடன் இருக்கும் அமெரிக்கப் படையினன் இவனைத் தாக்குகிறான். மீளவும் அந்த அதிகாரி கேட்கிறான். நீ அல்ஹைய்தா தானே? இவன் மீளவும் “இல்லை” என்கிறான். திரும்பவும் தாக்குகிறான் அந்தப் படையினன். இவன் அல்ஹைய்தாவா இல்லையா என்ற உண்மை அல்ல முக்கியம். அவர்கள் சொல்வதற்கு இவன் தலையாட்ட வேண்டும் என்று மட்டுமே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதனை மேலும் நிறுவுகிறது இன்னொரு விசாரணை:

கைது செய்யப்பட்டுள்ள ஸாபிக்கிடம் விசாரணையை மேற்கொள்ளும் வோஸிங்டனிலிருந்து வந்த பெண் அதிகாரி தொலைக்காட்சியில் 2000ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடன் உரையாற்றும் போது, அல்ஹைய்தா உறுப்பினர்கள் உட்கார்ந்திருந்து அவருடைய உரையைக் கேட்பது போன்ற ஒரு காட்சியைக் காட்டி ‘இதிலிருப்பவர்களை உன்னால் இனம் காண முடிகிறதா? எனவும், அதில் தெளிவில்லாத ஒரு காட்சியைக் காட்டி இது ஆசிப், இது றுஹேல், இது நீ’ எனவும் கூறுகிறாள்.

‘2000 ஆம் ஆண்டு நாங்கள் ஆப்கானிஸ்தானுக்கு வரவில்லை. அப்போது நாங்கள் இலண்டனில் இருந்தோம்’ என்று ஸாபிக் கூறுகிறான்.

‘நான் இந்த ஒளிப்பதிவு நாடாவில் உன்னைப் பார்த்தேன். அந்த நேரம் நீ ஆப்கானிஸ்தானில் தான் இருந்துள்ளாய்’ என அந்த அதிகாரி விடாப்பிடியாகக் கூறுகிறாள்.

இல்லையென மறுக்கும் ஸாபிக்கிடம் இது நீதான் என மீண்டும் மீண்டும் கூறி அவனை ஒத்துக் கொள்ளும்படி வற்புறுத்துகிறாள். கடைசிவரை அவனும் மறுக்கிறான்.

பெற்றதாயினால் கூட பிள்ளையினை அடையாளம் கண்டு பிடிக்க முடியாதபடி தெளிவில்லாத அந்த ஒளிப்பதிவு நாடாவில் உள்ள காட்சியில் நீதான் உள்ளாய் என ஒப்புவிக்க வைக்கும் தந்திரோபாயத்தை கையாள்கிறாள் அந்த முட்டாள் அதிகாரி.

அவளுக்குத் தேவையானதெல்லாம் உண்மை அல்ல. அதிலிருப்பது அவர்கள் தான் என்றும் அவர்கள் அல்ஹைய்தா உறுப்பினர்கள் என்று ஒத்துக் கொள்வதும் தான்.

உலகம் முழுவதும் அதிகாரத்திலிருப்பவர்கள் தேடுவது உண்மையை அல்ல. அவர்கள் விரும்புவதை மற்றவர்கள் சொல்ல வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள்.

இதனை அற்புதமாக வெளிக்கொண்டு வந்திருக்கும் திரைப்படம் தான் த றோட் ரு குவான்டனமோ.

ஆப்கானிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டு பின் குவான்டனாமோ வதைமுகாமிற்கு அனுப்பி வைக்கப்படும் ஆசிப் இக்பால், றுஹேல் அஹமட், ஸாபிக் றசூல் எனும் மூன்று இளைஞர்களின் உண்மைக்கதையை மையமாக வைத்தும், குவான்டனாமோ வதைமுகாம் பற்றிய பயங்கரமான அதிர்வினை எமக்குள் ஏற்படுத்திச் செல்லும் வகையிலும் The Road to Guantanamo (குவான்டனாமோவிற்கான வழி) என்கிற திரைப்படத்தை எமக்குத் தந்திருக்கிறார் மைக்கேல் வின்ரர்பொட்டம் எனும் பிரிட்டன் நெறியாளர்.

ஒரு ‘டொக்யூ ட்ராமா’ (Docudrama) வாக உருவாக்கப்படடிருக்கும் இப்படைப்பு, திரைப்படத்திற்கான அனுபவத்தைத் தரும் அதேவேளை ஒரு செய்திக்குப் பின்னாலுள்ள பல்வேறு உண்மைச் செய்திகளையும், தகவல்களையும் கொண்டுள்ள ஒரு ஆழமான செய்தி அறிக்கை தரும் அனுபவத்தையும் எமக்குத் தருகிறது

இத்திரைப்படத்தின் முதல் காட்சியே கீழைத்தேச நாடுகள் தொடர்பாக அமெரிக்காவும், பிரிட்டனும் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி விடுகின்றது.

‘இவர்களில் சிலர் மிக மோசமான மனிதர்களென்பது எனக்கு நன்றாகத் தெரியும்’ எனும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஸ் உரையாற்றும் போது, அருகில் அன்றைய பிரிட்டிஸ் பிரதமர் ரொனி பிளேயரும் நிற்பதான ஒரு இணைப்புக் காட்சியுடனேயே படம் ஆரம்பமாகிறது.


இங்கிலாந்தின் ரிப்ரன் நகரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிப் 2001 ஆம் ஆண்டு செப்ரம்பர் 28ஆம் திகதி தனது திருமணத்திற்காக இலண்டனிலிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்குப் பயணமாகிறான். அவனுடன் கூடவே அவனுடைய நண்பர்களான றுஹேல் அஹமட், ஸாபிக் றசூல், மொனீர் அலி ஆகிய மூவரும் செல்கிறார்கள்.

பாகிஸ்தான் சென்றடையும் அவர்கள் அங்கிருக்கும் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்குச் செல்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் பணியாற்றுவதற்குத் தொண்டர்களைக் கோரும் அங்குள்ள இமாமின் பேச்சால் கவரப்பட்டு முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்கு உதவ காபூல் நகரை நோக்கிப் பயணமாகிறார்கள்.

முதலில் தலிபான்களின் இதயபூமி என அழைக்கப்படும் கந்தகாரை வந்தடையும் அவர்கள் பின்னர் அமெரிக்காவால் குண்டுத் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இருண்ட உலகமான
காபூலை நோக்கிப் பயணமாகிக் கொண்டிருக்கும் போது ஆசிப் கடும் நோய்வாய்ப்படுகிறான்.

கடும் போரும், சிதிலமடைந்த நகருமான காபூலில் இருந்த நாட்களில் அவர்களினால் அங்குள்ள மக்களுக்கு எதுவுமே செய்ய முடியாமல் இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் திரும்பவும் பாகிஸ்தானுக்குத் திரும்பி வர முயற்சிக்கிறார்கள். பாகிஸ்தான் செல்வதற்காக வாகனமொன்றில் ஏறி இறுதியாகத் தலிபான்களின் கட்டுப்பாட்டினுள் இருந்த குண்டுஸ் நகரத்திற்கு வரும் போது குண்டுஸ் நகரமும் அமரிக்கப் படையினால் கைப்பற்றப்படுகிறது. இந்தவேளையில் அமெரிக்க இராணுவத்தினால் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கிருந்து தப்பும் முயற்சியில் நண்பர்களில் ஒருவனான மொனீர் காணாமற் போய்விடுகிறான். இறுதிவரை அவனுக்கு என்ன நடந்தது என்று கண்டறியப்படவேயில்லை. கடுமையான எறிகணைத் தாக்குதல்களில் இவர்களுடன் வந்த பலர் இறந்து போகிறார்கள். வழியெங்கும் இறந்தவர்களின் உடலங்கள் சிதறிக் கிடக்கின்றன.

நம்பிக்கையை இழந்து போனவர்களாக காபூலை நோக்கிப் பயணமாகும் போது ஆப்கானின் நோர்தேன் அலையன்ஸ் (Northern alliance- ஆப்கான் இராணுவத்தினராலும், தலிபான்களுக்கெதிரான ஒட்டுக் குழுக்களினாலும் உருவாக்கப்பட்ட அமைப்பு. மேற்கத்தைய ஊடகங்களினாலேயே இது Northern alliance என அழைக்கப்பட்டது.) படையிரால் கைது செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்படும் இளைஞர்களிடமுள்ள பெறுமதிமிக்க பொருட்கள் அவர்களால் அபகரிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் கைக்கூலிகளாகச் செயற்பட்ட இந்த நோதேர்ன் அலையன்ஸ் இராணுவத்தினர் அல்கெய்தா அமைப்பின் உறுப்பினர்களென தம்மிடம் அகப்பட்ட அப்பாவி இளைஞர்கள் பலரை அமெரிக்க இராணுவத்திற்கு தலைக்கு 5 ஆயிரம் டொலர்படி விற்றுள்ளனர் எனத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த மூவருடன் பல நூற்றுக்கணக்கானவர்கள் கென்டைனர் ஒன்றினுள் நோர்தேன் அலையன்ஸ் படையினரால் பலவந்தமாகத் திணிக்கப்படுகிறார்கள். மூச்சு விடக் கூட முடியாமல் ஒவ்வொருவரும் அச்சமுற்றிருக்கும் வேளை மூடப்பட்ட கென்டைனருக்கு வெளியிலுள்ள படையினர் இவர்களை நோக்கிச் சுடுகிறார்கள். இருண்ட உட்பகுதிக்குள் என்ன நடக்கிறதென்று தெரியாத பலர் இறந்து போகிறார்கள்.

அதிர்ஸ்டவசமாகத் தப்பிய ஆசிப், றுஹேல், ஸாபிக் மூவரும் உயிர் பிழைத்த மற்றவர்களுடன் சேர்த்து ஆப்கானிஸ்தானின் வடபகுதியிலுள்ள செபஹர்ன் சிறையில் தள்ளப்படுகிறார்கள். பின்னர் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் விமானம் மூலம் கியூபாவிலுள்ள குவான்டனாமோ சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்படும் அவர்கள் முதலில் அங்குள்ள எக்ஸ்ரே முகாமிலும், பின்னர் டெல்ரா முகாமிலும் தடுத்து வைக்கப்படுகிறார்கள். இம்முகாம்களில் முடிவற்ற சித்திரவதைகளுக்கும், விசாரணைகளுக்கும் இவர்கள் ஆளாகிறார்கள்.

40 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் குவான்டனாமோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என இன்னொரு குறிப்புக் கூறுகிறது.

பெருமளவு கல்வியறிவுள்ளவர்களையும், புத்திசாலிகளையும், ஒழுக்கமுள்ளவர்களையும் தமக்கேற்றவாறு மூளைச்சலவை செய்வதற்குப் பயன்படுத்த முடியாதென்பதனால் உலகம் பூராவுமுள்ள அரசாங்கங்கள் தமது படையில் இணைத்துக் கொள்ளப்படும் நபர்கள் திருப்பிக் கேள்வி கேட்காதவர்களாகவும், இனவாதிகளாகவும் இருப்பதனையே விரும்புகின்றனரென்பதையும் இத்திரைப்படம் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

ஏனெனில் குவான்டனாமோ வதைமுகாமில் விசாரணை செய்த சிஐஏ மற்றும் எம் 15 இன் அமெரிக்க, பிரித்தானிய அதிகாரிகள் இந்தவிதமான ஆட்களாகத்தான் இருந்தார்கள். அதாவது தாம் நினைப்பதைக் கைதிகள் ஏற்றுக் கொண்டு, அவர்கள் குற்றம் செய்யாதவர்களாக இருந்தாலும் குற்றம் செய்தவர்களென ஒப்புக்கொள்ள வேண்டுமென்பது இந்த அதிகாரிகளுடைய அவாவாக இருக்கிறது. அவர்களுக்கு உண்மையை அறிந்து கொள்வதில் எந்தவிதமான அக்கறையுமிருக்கவில்லை. தங்களது செயல்களை நியாயப்படுத்துவதற்கு மட்டுமே அவர்கள் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள் என்பதை பல காட்சிப் படிமங்களினூடு இயக்குநர் எங்களுக்கு புரியவைக்கிறார்.

செப்ரம்பர் 11க்குப் பின் ஈராக் மீதானதும், ஆப்கானிஸ்தான் மீதும் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தை அமெரிக்கா கட்டவிழ்த்து விட்டது.

அன்றைய நாட்களில் ஈராக்கில் தான் ஊட்டி வளர்த்த சதாம் குசேனை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சதாமின் ஆதரவாளர்களெனச் சந்தேகிக்கப்பட்டவர்களெல்லாம் கைது செய்யப்பட்டு அபுகிராப் சிறைச்சாலையில் அமெரிக்க இராணுவத்தினால் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். காணாமற் போனார்கள்.
அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஸ்ஸின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறைகள் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என்ற போர்வையினால் மூடிமறைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 11 சம்பவத்துக்குக் காரணமான பயங்கரவாதி ஒசாமா பின்லேடனையும் அவரது பயங்கரவாத அமைப்பான அல்ஹைய்தா அமைப்பையும் துவம்சம் செய்வோமெனும் பெயரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட யுத்தத்தின் போது அல்ஹைய்தா உறுப்பினர்களெனும் சந்தேகத்தின் பேரில் அங்குள்ள அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கியூபாவில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் மிகப் பெரிய சித்திரவதை கூடாமான குவான்டனாமோ வதை முகாமில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கைதிகள் சட்ட ரீதியான எந்தவித உதவிகளும் கிடைக்கப் பெறாத வகையில் தடுக்கப்படுவதோடு, தொடர்ச்சியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

எவ்வாறு அப்பாவிகள் பொய்யான விசாரணை, சித்திரவதைகளின் மூலம் குற்றவாளிகளாக்கப்பட்டு தண்டனை அனுபவிக்கிறார்கள். அவர்களின் வாழ்நாள் எவ்வாறு இந்த மாதிரியான முட்டாள் அதிகாரிகளின் கைகளில் சிக்கிச் சின்னாபின்னப்பட்டுப் போகிறதென்பதை இத்திரைப்படம் மிகவும் காத்திரமாக எடுத்துக் காட்டுகிறது.

இறுதியில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் இந்த மூவரும் பிரிட்டனிற்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அவர்களுடைய வாழ்நாளில் இரண்டு வருடம் பொய்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், பலத்த சித்திரவதைகளுடன் வீணாகக் கழிய வைக்கப்பட்டுள்ளது.

குவான்டனாமோவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானோரில் ஒரு சிலர் மீது மட்டுமே ஏதாவதொரு குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டிருக்கிறதென செய்திகள் கூறுகின்றன. இலங்கையிலும் இதேபோன்ற பிரச்சினைகளே நிலவுகின்றது. எந்தவிதக் குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் பல வருடங்களாகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர், யுவதிகள் வெலிக்கடையிலும், பூஸாவிலும், இதர முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கோ அல்லது இவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கோ முடியாதபடி பயங்கரவாதத் தடைச்சட்டம் வலுவாக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என்ற பெயரில் உலகெங்குமுள்ள அப்பாவிப் பொதுமக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அண்மையில் இலங்கையிலும் வன்னிப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என்ற போர்வையிலேயே மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்தியாவின் மேற்கு வங்த்திலும் பழங்குடி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய அரசாங்கத்தின் அட்டூழியங்களும் பயங்கரவாத்திற்கெதிரான யுத்தம் என்ற போர்வையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் போரின் போது ‘சந்தேகத்தின் பேரில்’ எனும் பதத்துடன் கைது செய்யப்படும் யுவதிகளும் இளைஞர்களும் சித்திரவதைக் கூடங்களிலும், வதைமுகாம்களிலும் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பற்றிய எந்தவித தகவல்களும் வெளியில் தெரியவருவதில்லை.

அண்மையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனும் பெயரிலும், விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்ற பெயரிலும் ஆண்களும், பெண்களுமாக 9 ஆயித்துக்கும் மேற்பட்டவர்கள் அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் உண்மையில் விடுதலைப் புலி உறுப்பினர்களா? அவர்களில் எவ்வளவு பேர் சாதாரண அப்பாவிப் பொதுமக்கள்? என்பது யாருக்கும் தெரியாது. கைது செய்யப்பட்டவர்களைப் பார்வையிடவோ அல்லது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சட்டரீதியான உதவி பெறுவதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு என்ன நடைபெறுகிறதென்பது எவருக்கும் தெரியாததொன்றாகவேயுள்ளது. அவர்களின் உறவினர்களுக்குக் கூட அவர்கள் உயிருடன் உள்ளார்களா? அப்படி இருந்தால் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியாமலுள்ளது.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற கோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள போரில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களும் யுவதிகளும் அரச பயங்கரவாதத்தின் கீழ் அனுபவிக்கும் தொடர் கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்குமான முடிவு எங்கிருந்து ஆரம்பிக்கப்படப் போகிறது?

அதனை எங்கிருந்து தொடங்குவது?

இந்தத் திரைப்படம் எம்முள் அத்தகையதொரு கேள்வியை ஏற்படுத்துகிறதல்லவா?

குளோபல் தமிழ் செய்திகள்
03.08.2009

“உயிர்வாழ்வதற்காகப் போராடு… தப்புவதற்காக ஓடு…” City of God




இயக்குனர்: பெர்னாண்டோ மெரெல்லெஸ்


சிறுவர்களை பற்றிய பல படங்களை பல இயக்குனர்கள் பல வகையிலும் இயக்கியுள்ளார்கள். ஆனால் முற்றுமுழுதான வன்முறைகளுடன் வாழும் ஒரு சிறுவர் உலகத்தை, இயல்புகளைத் தொலைத்த அவர்களுடைய வாழ்க்கையை, தொலைந்து போன அவர்களின் இருப்புகளை, மறந்து விட்ட புன்னகைகளை சற்றும் சிதைவுறாமல் எமக்குத் தந்திருக்கிறார் பிரேசிலின் திரைப்பட இயக்குனர் பெர்னாண்டோ மெரெல்லெஸ் தனது City of God திரைப்படத்தினூடாக.

போதைவஸ்து விற்பனையும், ஆயுதக் கடத்தல்களும், கொலை, கொள்ளை என்பவையும் மலிந்த இடமாகக் காணப்படும் பிரேசிலின் தலைநகரான றியோ டி ஜெனிரோவின் சேரிப்புற விளிம்புநிலைச் சிறுவர்களின் வன்முறைகளினால் கட்டப்பட்டிருக்கும் உலகை எம்மை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் படைத்திருக்கிறார் நெறியாளர்.

இங்கே வன்முறை என்பது சர்வசாதாரணம். மனிதம் என்பதே முற்றாக அழிக்கப்பட்டு, பிஞ்சுச் சிறார்கள் முதல் இளைஞர்கள் வரை கொலை என்பது ஒரு விளையாட்டுப் போல நிகழ்த்தப்படுகிறது. “உயிர்வாழ்வதற்காகப் போராடு… தப்புவதற்காக ஓடு…” என்பதே அன்றைய றியோ டி ஜெனிரோவின் இளைஞர்களின் தாரக மந்திரமாயிருந்தது.

அவர்களுடைய கையில் புத்தகப் பையில்லை. கிறிக்கெட் மட்டை இல்லை. ஆனால் ஒவ்வொரு சிறுவனின் இடுப்பிலும் துப்பாக்கி இருக்கிறது. அவர்கள் தமது எதிரி என்று கருதுபவரை அவர்களுக்குப் பிடிக்காதவர்களை எந்நேரமும் சுட்டுத் தள்ளலாம். வன்முறை அவர்களுக்குக் கிளர்ச்சி தருகிறது. தண்டனை குறித்து அவர்கள் அஞ்சுவதே இல்லை.

கத்திகள் தீட்டப்படும் ஒலி, கேட்டவுடன் ஆடவைக்கும் துள்ளல் இசை, இறைச்சிக்கு அறுக்கப்படுவதற்காக கோழிகள். அறுக்கப்பட்ட கோழிகள், அதன் பாகங்கள், கழுத்து மயிர் சிரைக்கப்பட்டு சதக்கென அறுக்கப்படும் கோழி, உயிருக்குப் பயந்து ஓடுவது போல கட்டப்பட்டிருந்த கட்டையவிழ்த்து ஓட்டமெடுக்கும் ஒரு கோழி, அதனைத் துரத்தும் சிறுவர்கள். அவர்களுடைய கையில் கல்லோ பொல்லோ இல்லை, இருப்பது துப்பாக்கி. துப்பாக்கிகள் கொண்ட சிறுவர்கள், அந்தச் சேரியின் சந்து பொந்துகளிலெல்லாம் கோழியைத் துரத்தும் சிறுவர் மற்றும் இளைஞர் குழாம் என வெட்டி ஒட்டப்பட்ட அண்மைக் காட்சிகளுடனும், படுவேகத்துடனும் படம் ஆரம்பமாகிறது. அந்த வேகம் படம் முடியும் வரை குறையவேயில்லை. படம் வன்முறைகளின் களம்.

1960களின் பிற்பகுதியிலிருந்து 1980வரையிலான காலப்பகுதியைப் பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படம் பிரேசிலின் தலைநகரான றியோ டி ஜெனிரோவின் சேரியைச் சேர்ந்த றொக்கற் (அலெக்ஸான்டர் றொட்றிக்) என்றழைக்கப்படும் புகைப்பட ஊடகவியலாளனின் மூலம் விறுவிறுப்பான கதைசொல்லலுடன் நகர்த்திச் செல்லப்படுகிறது.

இத்திரைப்படத்தில் நாயகர்கள் என்று யாரையும் சொல்லமுடியாது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் போல. எல்லோருடைய கைகளிலும் துப்பாக்கி. கதாநாயகத் தன்மை எதுவுமில்லாமல் வன்முறைக்குள் தம்மை ஆட்படுத்திக் கொள்ளும் சிறுவர்கள், போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு 20 வயதிற்குள் இறந்து போகும் இளைஞர்கள் பற்றிய கதையாக இது இருக்கிறது. பெற்றோர்களினால் கவனிக்கப்படாமல், அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட இந்தச் சிறுவர்கள் கல்வி என்ற ஒன்றையே மறந்து போகிறார்கள். அவர்களின் மூளையில் எப்போதுமே இருப்பது குரூர மனப்பான்மை. இப்படியான மனப்பான்மையுடன் அலையும் அவர்களுக்கு போதை மருந்து விற்பனை செய்பவர்களிடமிருந்து போதை மருந்தும், ஆயுதங்களும் கிடைக்கப் பெறுகின்றன. அவை அவர்களை குற்றங்களைச் செய்யத் தூண்டுகின்றன. போதை மருந்துப் பாவனை, அவற்றினால் ஏற்படும் குழுக்களுக்கிடையிலான வன்முறைகளைக் கூட பொலிஸார் லஞ்சம் வாங்குவதுடன் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

ஒவ்வொரு வன்முறைக் குழுவினரையும் அழித்து இன்னொருவன் தலைவனாகிறான். கொலை செய்கிறான், கொள்ளையடிக்கிறான். அவனையும் அவன் சார்ந்தவர்களையும் கொலை செய்து மற்றவன் பெரியவனாகிறான். இப்படியே கதை முடிவுவரை பழிவாங்கல்கள் கயமைத்தனங்களுடன் நகர்ந்து செல்கிறது.
ஒருமுறை இந்த வன்முறைக் குழுவினரால் விபச்சார விடுதி ஒன்று கொள்ளையிடப்படுகிறது. சிறுவனொருவனைக் காவலாக வைத்து விட்டு இளைஞர்கள் கொள்ளையடிக்கப் புறப்படுகின்றனர். பொலிஸார் வந்தால் ஜன்னலில் சுட்டுச் சைகை தரும்படி அவனிடம் சொல்லி விட்டுச் செல்கின்றனர். அங்கு வேலை செய்பவர்கள், கலவியில் ஈடுபட்டுள்ளவர்களைத் துப்பாக்கி முனையில் இருத்தி விட்டு கொள்ளையடித்துச் செல்லும் இவர்களைப் பொலிஸ் துரத்துகிறது. அப்போது அங்கு காவலுக்கு விடப்பட்ட அந்தச் சிறுவன் விபச்சார விடுதியினுள் நுழைகிறான். அங்கு உள்ள பத்துப் பதினைந்து பேரை காரணம் எதுவுமில்லாமலே சுட்டுத் தள்ளுகிறான். சுட்டு விட்டு அவன் சிரிக்கும் சிரிப்பு இருக்கிறதே அந்தக் குரூரச் சிரிப்பு. நமது முகத்திலெல்லாம் அறைகிற ஒரு சிரிப்பு.

பின்னர் அவன் தனது கூட்டாளிகளையும் கொலை செய்துவிட்டு ஒரு குழுவின் தலைவனும் ஆகிறான். படத்தின் முடிவில் இவனைக் கொலை செய்யும் ஒரு சிறுவர் குழாம் அதிகாரத்தைத் தமது கையில் எடுத்துச் செல்கிறது.

இன்னொரு காட்சியில் ஒரு சிறுவனைப் பார்த்து உனக்கு கையில் சுடவா அல்லது காலில் சுடவா என்று கேட்கிறான் மற்றவன். இவ்வாறு கேட்டுவிட்டு காலில் சுட்டுவிட்டுச் செல்கிறான். அதேபோல் ஒருவனின் கையில் துப்பாக்கியைக் கொடுத்து மற்றைய இருவரில் எவராவது ஒருவரைச் சுடும்படி நிர்ப்பந்திக்கின்றனர்.

இப்படி பிரேசிலின் சேரிப்புறச் சிறுவர்களின் வன்முறை நிறைந்த வாழ்க்கையை நம்பகத் தன்மையுடன் அதன் இயல்புகளோடு வித்தியாசமான முறையில் பதிவித்ததில் இயக்குனர் பெர்னாண்டோ மெரெல்லெஸ் முக்கியமானவராக் கொள்ளப்படுகிறார்.

இயக்குனர் பெர்னாண்டோ மெரெல்லெஸ்க்கு முதுகெலும்பு போலக் கைகொடுத்தது இப்படத்தின் மூலக்கதைக்கு காரணமான இதேபெயரிலான நாவல். அது எழுதப்பட்டது 1997இல். போலோ லின்ஸ் என்பவர் அதனை எழுதியிருந்தார். 30 வருடங்களாக அங்கேயே வாழ்ந்து அந்த விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் அதனை எழுதினார். 600 பக்கங்களைக் கொண்டது அது. அதில் 250 பாத்திரங்கள். நாவல் ஒரு அஞ்சல் ஓட்டம் போன்ற வடிவில் எழுதப்பட்டிருந்தது. இருபது பக்கங்களுக்கு வளர்ந்து செல்லும் ஒரு பாத்திரம். பின்னர் அதிலிருந்து தாவி அடுத்த இருபது பக்கங்களுக்கு இன்னொரு பாத்திரம் எனத் தொடரும்.

இந்நாவலைப் படமாக்க விரும்பிய இயக்குனர் எட்டு மாதத்திற்கு மேலாக கள ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருக்கிறார். அந்தச் சேரிப் புறத்தில் வாழ்ந்த இரண்டாயிரம் சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே இருந்து படத்திற்காக 200 பேரைத் தெரிவு செய்து பயிற்சிப் பட்டறையூடாகவே படத்தை உருவாக்க ஆரம்பித்தார்.

ஓப்பனைகளற்ற இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள். றியோ டி ஜெனிரோவின் சேரிப்புறச் சந்துகள். சேரிப்புறத்திற்கே உரித்தான அழுக்கடைந்த சிறு கடைகள், விபச்சாரவிடுதிகள் என திரைப்படம் நிஜமானவற்றையே காட்சிகளாக்கி நம்முன் வைக்கிறது.

உண்மையில் இந்த வன்முறையின் பின்னால் திரைப்படம் உருவாக்கும் அரசியல் மிக முக்கியமானது. ஒரு காட்சியில் தந்தை மீன்பிடிக்கச் செல்ல மகன் பிடித்த மீன்களை விற்பனை செய்து வருகிறான். மேலும் மேலும் வறுமை அவர்களைத் துரத்துகிறது. அதிலிருந்து தப்ப அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் தான் போதை மருந்து வியாபாரமும் அதற்கேயுரித்தான வன்முறை உலகும்.

அமெரிக்க ஜனாதிபதி கென்னடி நிர்வாகத்தில் இந்த லத்தின் அமெரிக்க நாடுகளின் பொருளாதாரத்தை மீள் கட்டமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நாடுகளின் பொருளாதாரத்தை தங்கி வாழும் பொருளாதாரமாக்க அமெரிக்க கோப்பிரேட் நிறுவனங்களுடாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவே இந்த வன்முறை உலகம். அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட பிரேசிலிய அரசியல்வாதிகளின் போதைப் பொருள் விற்பனைக்கும், ஆயுதக்கடத்தல் விற்பனைக்கும் பலியாகிப் போனவர்கள் இந்த அப்பாவிச் சிறுவர்கள்தான். அரசியல்வாதிகளின் இவ்விதமான பிழைப்புவாதச் செயல்கள் இந்தச் சிறுவர்களை மீள முடியாத அதல பாதாளத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

சிற்றி ஒப் கோட் நாவலை எழுதிய போலோ லின்ஸ் ஒரு மானிடவியலாளர். இந்த நாவலை எழுத அவருக்கு எட்டு வருடங்கள் தேவைப்பட்டிருந்தது.

''இதனைத் திரைப்படமாக்குமாறு கூறி என்னுடைய நண்பரொவர் இந்த நாவலை எனக்குக் கொண்டு வந்து தந்தார். நான் அதில் முதலில் ஆர்வம் காட்டவில்லை. எனினும் பின்னர் அதனை வாசிக்க ஆரம்பித்ததும் ஆச்சரியமாக இருந்தது. நானும் பிரேசிலில்தான் வாழ்கிறேன். ஆனாலும் நாவலில் சொல்லப்பட்டவற்றை நான் அறிந்திருக்கவில்லை. ஆங்காங்கே பத்திரிகைச் செய்திகளாக ஒரு நடுத்தர வர்க்கப் பார்வையில் சில விடயங்கள் வெளிவந்திருந்தன. ஆனால் இந்தப் புத்தகமோ அதன் மறுபக்கத்தில் இருந்து எழுதப்பட்டிருந்தது. ஏழ்மையும், வறுமையும் குடிகொண்டிருந்த பிரேசில் மக்களின் பக்கத்திலிருந்து இந்த நாவல் எழுதப்பட்டிருந்தது. அக்கணமே நான் இதனைப் படமாக்க வேண்டுமென நினைத்தேன்''.

''நான் இந்தத் திரைப்படத்தைக் கொண்டு வெவ்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்குச் சென்ற போதெல்லாம் அங்குள்ள ஊடகவியலாளர்கள் என்னை ஒரு கேள்வி கேட்கத் தவறுவதில்லை. எப்படி உங்கள் சமூகம் இவ்வாறு நடைபெற அனுமதித்துள்ளது? ஏன் இந்தப் பிரச்சினை பற்றி உங்கள் சமூகம் அக்கறை கொள்ளவில்லை? இந்தக் கேள்விக்கு என்னுடைய பதில் எப்போதுமே ஒரே விதமானதாகவே இருக்கும். நான் பிரேசிலின் நடுத்தரவர்க்கச் சமூகத்தில் வாழ்ந்து வருகிறேன். ஒடுக்கப்பட்ட வர்க்கத்தில் அல்ல. அந்தப் பகுதியில் என்ன நடைபெறுகிறது என்பதைப் பற்றி அது எங்களைப் பாதிக்காதவரை எங்களுக்கு எந்தக் கவலையும் இருந்ததில்லை. இந்த நிலைமைகள் அதன் எல்லைவரை செல்ல நாங்கள் அனுமதித்திருக்கிறோம். ஏனெனில் நாங்கள் இவற்றை எமது பிரச்சினைகளாகப் பார்ப்பதில்லை. அது அமெரிக்காவாக இருந்தாலென்ன, இலத்தீன் அமெரிக்காவாக இருந்தாலென்ன, ஆபிரிக்காவாக இருந்தாலென்ன இதே நிலைமைதான் எல்லா இடங்களிலும் நிலவுகிறது. ஏராளமான மக்கள் உணவின்றி வறுமையில் வாழ்கிறார்கள். ஆனால் நாங்கள் ஒவ்வொருவரும் நினைக்கிறோம் இது எங்களுடைய பிரச்சினையில்லையென்று’’ என தனது நேர்காணல் ஒன்றின் போது கூறுகிறார் இயக்குனர் பெர்னாண்டோ மெரெல்லெஸ்.

ஆக, பிரேசிலின் சேரிப்புறச் சிறுவர்களின் வன்முறை நிறைந்த வாழ்க்கையை மட்டுமல்லாமல் நான், எனது எனும் மேல்தர வர்க்க, நடுத்தர வர்க்கத்தினரின் சுயநலத்தன்மைகளைக் கேள்வியெழுப்பும் வகையிலும், இவர்களினால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் உலகத்தின் மூலை முடுக்குளிலுள்ள அனைத்து சிறார்களின் எதிர்காலம் பற்றிய கேள்வியையும், அதிர்வினையும் சிற்றி ஒப் கோட் திரைப்படம் ஏற்படுத்திச் செல்கிறது.

குளோபல் தமிழ் செய்திகள்
13.07.2009