Saturday, January 8, 2011

Offside - பெண்கள் பற்றிய உரையாடற் களமாக மாறிய உதைபந்தாட்டக் களம்



அண்மையில் ஜீன்ஸ் அணிந்தார் என்ற குற்றச்சாட்டுக்காக லுப்னா அஹ்மட் ஹீஸைன் என்ற சுடானிய பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறைத்தண்டனைக்கு காரணமான குற்றம் அவர் ஒழுங்கீனமான ஆடையணிந்தார் என்பதே. இந்தத் தண்டனைக்கெதிரான ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டபோது அதிற் பல பெண்கள் லுப்னாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் காற்சட்டை அணிந்திருந்தார்களெனக் கூறப்படுகிறது. இதனைவிட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மீது பொலிஸார் கிட்டத்தட்ட 9 தடவைகள் குண்டாந்தடிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜீன்ஸ் அணிந்தமை ஒரு குற்றமாகுமா?

ஆணாதிக்க மனோநிலைப்பட்ட இந்த சமூகத்தில் பெண்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் அனைத்துமே தவறானவையாகவும், குற்றமாகவும் கருதப்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. ஒரு பெண் ஆணுக்குச் சமத்துவமானவளாக இந்தப் பரந்த உலகினுள் பிரவேசிப்பதை ஆண் மனம் ஏனோ விரும்புவதில்லை. அவர்களை மூலையில் முடக்கி தன்னுடைய கைப்பிடிக்குள் எப்போதுமே வைத்திருப்பது அவனுக்கு விருப்பமானதொன்றாக இருக்கிறது. இதற்கு சுலபமான வழியாக பெண்கள் மீதான கலாசாரக் கட்டுப்பாடுகள் ஆண்களுக்குக் கை கொடுக்கின்றன.

இவ்வாறான பெண்கள் மீதான கலாசாரத் தளைகளுக்கு எதிராக கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களினால் பல்வேறு காலங்களில் தொடர்ச்சியாகக் குரல்கள் எழுப்பப்பட்டு வந்தாலும் மிக மோசமான சம்பவங்களும் நடைபெற்ற வண்ணமே உள்ளன

இந்தவகையில் சமூகத்தினால் பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் விதத்தில் யதார்த்த பூர்வமான சிறந்த பல படங்களைப் பார்வையாளர்களைச் சிந்திக்கத் தூண்டும் விதத்தில் தரும் சிறந்த நெறியாளராக ஈரானிய திரைப்பட இயக்குனர் ஜாபர் பனஹியைக் கூறலாம். அவருடைய அற்புதமான படைப்புகளில் ஒன்றுதான் ஓப்சைட் (Offside) எனும் திரைப்படம்.

2005ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டப் போட்டியைப் பின்னணியாகக் கொண்டு ஈரானிய சமூகத்தில் பெண்களுடைய நிலையை, எத்தகைய பிரச்சார நெடியுமில்லாமல் ஈரானிய சமூகம் பெண்கள் விடயத்தில் “ஓவ் சைட்”டில் நிற்கிறது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜாபர் பனஹி.

வழமை போலவே இந்தத் திரைப் படம் வெளியான போது ஈரானில் தடை விதிக்கப்பட்டது. யாரையும் நோகடிக்காமல் ஒருவித நகைச்சுவை உணர்வுடன் பெண்களின் உணர்வுகளையும், அவர்களுடைய ஆற்றல்களையும், ஆர்வங்களையும் சுமந்தபடி ஒரு காற்பந்தாட்ட நிகழ்வினைப் பார்ப்பதனைப் போன்ற தன்மையுடன் படத்தை நகர்த்திச் செல்கிறார் ஜாபர் பனஹி.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில், ஈரானுக்கும் பஹ்ரெய்ன்க்குமான உதைபந்தாட்டப் போட்டி நடைபெறுகிறது. அதனைப் பார்க்க தன்னுடைய அனுமதியில்லாமல் புறப்பட்டு விட்ட மகளைத் தேடி ஒரு நடுத்தர வயதுத் தந்தை வாடகைக்காரில் புறப்படுவதுடன் படம் ஆரம்பிக்கிறது.

அடுத்த காட்சியில் ஆணுக்கு அருகில் பெண்கள் அமரக் கூடாது என்ற காரணத்தால் ஆணைப் போல வேடமிட்டுக் கொண்டு அந்தப் போட்டியைப் பார்க்க ஆண்கள் பயணிக்கும் பஸ்ஸில் அவர்களுடன் பயணிக்கும் ஒரு துணிவுள்ள இளம் பெண் காட்டப்படுகிறாள். தெஹ்ரானின் ஸ்ரேடியத்தைச் சென்றடையும் அவள் உதைபந்தாட்டப் போட்டிக்கான ரிக்கற்றை வழமையான அதன் விலையை விடக் கூடிய விலை கொடுத்துப் பெற்றுக் கொள்கிறாள்.

ரிக்கற்றுடன் நீண்ட வரிசையில் நின்று அரங்கத்துள் நுழைய முற்படும் வேளையில் அரங்கத்தின் காவற்படையால் கைது செய்யப்படுகிறாள். கைது செய்யப்படும் அவள், அவளைப் போன்று உதைபந்தாட்டத்தின் விசிறிகளாக இருந்து உதைபந்தாட்டம் பார்க்க வந்து தடுத்து வைக்கப்பட்ட ஏனைய ஐந்து பெண்களுடன் சேர்த்து தடுத்து வைக்கப்படுகிறாள்.

உதைபந்தாட்டப் போட்டி நடைபெறும் அந்த ஒரு மணித்தியாலத்துள் அரங்கின் முன்புறத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்த ஆறு பெண்களுக்கும் அவர்களைத் தடுத்து வைத்திருக்கும் படையினருக்கும் இடையேயான ஊடாட்டத்தின் ஊடாகவும் உரையாடல் ஊடாகவும் ஈரானிய சமூகத்தில் பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை எளிமையாகவும் இயல்பாகவும் தனக்கே உரிய பாணியிலும் ஜாபர் பனஹி வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை இந்த உரையாடல்களினூடு ஈரானிய சமூகத்தின் பல்வேறு வர்க்க அடுக்குகள் அவற்றின் விருப்புகள் தெரிவுகள் என்பவையும் அவற்றின் அடித்தளங்களையும் மிக எளிமையாக வெளிப்படுத்தி விடுகின்றார்.

தடுத்து வைத்திருக்கும் படையினரில் ஒருவன் சில மாதங்களுக்கு முன்னரேயே படையில் இணைந்து கொண்டவன். அவனால் பராமரிக்கப்பட வேண்டிய நோய் வாய்ப்பட்ட தாய் கிராமத்திலிருக்கிறாள். அவனிடம் பராமரிக்கப்பட வேண்டிய கால்நடைகள் இருக்கின்றன. அவனுடைய வயல்நிலத்தின் பயிர்களோ நீரின்றி வாடுகின்றன. அவனுக்குக் கிடைக்கும் விடுமுறையில் அவன் அவற்றைப் பராமரிக்கத் திட்மிட்டிருந்தான். நீர் பாய்ச்ச திட்டமிட்டிருந்தான். ஆனால் பாழாய்ப்போன இந்த உதைபந்தாட்டப் போட்டியால் அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. அது அவனை எரிச்சலடைய வைக்கிறது. இந்த உதைபந்தாட்டப் போட்டியால் அவனால் விடுமுறையில் போக முடியாமற் போய்விட்ட எரிச்சலை அவன் இந்தப் பெண்கள் மீது கொட்டுகிறான்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கிற பெண்ணொருத்தி தடுத்து வைத்துள்ள அந்தப் படையினனிடம் கேட்கிறாள்,

‘ஏன் நாங்கள் உள்ளே போக முடியாது?’

‘உங்களை அனுமதிக்கக் கூடாது என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.’

‘ஏன் நாங்கள் உள்ளே போனால் என்ன நடக்கும்?’

‘உள்ளே நிறைய ஆண்கள் இருக்கிறார்கள்.’

‘அதனால்? …’

‘அதனால் அது சாத்தியமில்லை. ஆண்கள் அங்கே தகாத வார்த்தைகளையும் இழிசொற்களையும் பயன்படுத்துவார்கள்.’

‘நாங்கள் அவற்றைக் கேட்க மாட்டோம் என்று சத்தியம் செய்கிறோம்.’

‘விளையாட்டு மைதானம் பெண்களுக்கான இடமில்லை.’

அது மட்டுமல்ல மேலதிகாரி எந்நேரமும் வரலாம். வந்தால் நான் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்றும் அவன் சொல்கிறான். அப் பெண்களிடம் திருப்பிக் கேட்கிறான்,

‘அப்படி என்ன இந்த உதைபந்தாட்டத்தில் இருக்கிறது பார்ப்பதற்கு, இது ஒன்றும் வாழ்வா சாவா பிரச்சினை அல்லவே?’

அவனால் அவர்களின் விளையாட்டு ஆர்வத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. பெண்களுக்கு இதெல்லாம் தேவையில்லாத ஒன்றென அவனின் ஆண் மனோபாவம் புறு புறுக்க வைக்கிறது.
அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்களில் ஒருத்தி தான் கழிவறைக்குப் போக வேண்டும் என்கிறாள். ஆனால், அந்த மைதானத்தில் பெண்களுக்கான கழிவறை இல்லாததால் அவள் போக முடியாது என்கிறான் படையினன். அவளோ இது அவசரம் ஆண்களுக்கான கழிவறை என்றாலும் போகத் தான் வேண்டும் என அடம் பிடிக்கிறாள்.

அவளை கழிவறைக்கு அழைத்துச் செல்லும் படையினன் இந்த தெஹ்ரான் பெண்களுக்கு என்ன பேய் பிடித்திருக்கிறதா? ஓருத்தி என்னவென்றால் இராணுவத்தில் சேரப் போகிறேன் என்கிறாள். மற்றொருத்தி ஆண்களின் கழிவறைக்குப் போக வேண்டுமென்கிறாள். ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் அல்ல என்று நீங்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்கிறான்.

அங்குள்ள சுவரொட்டி ஒன்றினால் அவளது முகத்தை மறைத்து அழைத்துச் செல்லும் படையினன் அவளிடம் கேட்கிறான் உனக்கு வாசிக்கத் தெரியுமா? என்று. அவள் ஆம் என்கிறாள். அவ்வாறானால் உன் கண்களை மறைத்துக் கொண்டு வா என்கிறான். எதற்கு என்று அவள் கேட்டதற்கு கழிவறைச் சுவர்களில் பெண்கள் வாசிக்கக் கூடாத வார்த்தைகள் எல்லாம் எழுதப்பட்டிருக்கும் அவற்றை வாசிக்காமலிருப்பதறகுத் தான் என்கிறான்.

இந்த கழிவறைக்கு அவளை அழைத்துச் செல்லும் காட்சி நம்மை சிரிப்பின் எல்லைக்கே கொண்டு சென்று விடுகிற அதேநேரத்தில் அவர்களிடையேயான உரையாடல் சமூகத்தின் போலி நிலைகளை அம்பலப்படுத்தி விடுகிறது.

இத்திரைப்படத்தின் முக்கியமான அம்சங்களிலொன்று மிகச்சாதாரணமான இலகுவான உரையாடல்களுடாக தனது சமூகம் நோக்கிய ஒரு கலாசார விமர்சனத்தை ஜாபர் பனஹி ஆழமாக முன்வைத்திருப்பது தான். அதேநேரம் உலகெங்கும் பெண்கள் அனுபவிக்கும் சமத்துவ உரிமைகளை ஈரானியப் பெண்கள் ஏன் அனுபவிக்ககூடாது என்கிற யதார்த்தமான கேள்வியையும் அவர் இந்தப் பெண்கள் ஊடாக எழுப்பி விடுகிறார்.

நாளாந்த வாழ்வில் பெண்கள் மீதான அசமத்துவம் எங்கெங்கு எவ் எவ் வழிகளில் தொழிற்படுகிறது என்பதையும் அதன் பிற்போக்கான தன்மையையும் அது சமூகவாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களையும் ஓவ் சைட் திரைப்படம் முன்வைத்துச் செல்கிறது.

ஒரு வகையான விவரணப்படத்தின் தன்மையோடு மிகச்சாதாரண கமெராக்களைக் கொண்டு அரங்கத்தின் முன்னால் உள்ள ஒரு சிறிய பகுதியிலேயே 39 நாட்களில் படத்தை முடித்திருக்கிறார் ஜாபர் பனஹி. பெருமளவான காட்சிகள் ஒரே இடத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானத்தை தான் எடுத்த விடயத்தை விவாதிக்க ஒரு தளமாக்கி விடுகிறார் அவர். விளையாட்டு மைதானம் ஆண்களுக்கானது. விளையாடுபவர்கள் ஆண்கள். ஆனால் பெண்களுக்கும் இதே விளையாட்டை விளையாட முடியும். அவரது பெண் பாத்திரங்கள் ஆண் பாத்திரங்களை விட அது பற்றி அறிவைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அந்த விளையாட்டைச் சரிசமமாக உட்கார்ந்து பார்க்க அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்களில்லை. பெண்களோ அசமத்துவமாக அந்த மைதானத்தின் ஒரு மூலையில் ஆண் காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்படுகிறார்கள். இது அவர்களுடைய அடிப்படை உரிமையை, சமத்துவ உரிமையை, தெரிவு செய்யும் உரிமையை எல்லாம் பறித்து விடுகிறது.

மொத்தப்பரப்பிலும் ஒரு மூலையில் மட்டுமே அவர்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஆண்களுக்கு சமத்துவமாக அல்ல.

இது உதைபந்தாட்டத்திலாக இருக்கலாம். அல்லது ஈரானிய சமூகத்திலாக இருக்கலாம். ஏன் உலகத்தின் எந்த மூலையிலாகவாவது இருக்கலாம். இது தான் பெண்களின் நிலைமை. பல தளங்களில் பயணிக்கக் கூடிய இந்தக் குறியீடு தான் அவரது பார்வை எனக் கொள்ளலாம்.

இத்திரைப்படங்களில் வரும் அந்தப் பெண்களுக்கோ அல்லது படையினருக்கோ பெயர்களில்லை. அந்தப் பெண்கள் எங்களுடைய பெண்களாகவும் இருக்கலாம். அல்லது உங்களுடையவர்களாக அல்லது எந்த ஒரு நாட்டினராகவேனும் இருக்கலாம். இது போல் தான் படையினரும். இந்த உலகம் முழுவதும் உள்ள ஒரு பிரச்சினையை ஒரு உதைபந்தாட்ட விளையாட்டினூடாக வெளிப்படுத்திய இயக்குனரின் எளிமை எம்மைத் திகைப்பிற்குள்ளாக்குகிறது.

ஓவ் சைட் என்பது விளையாட்டில் தடை செய்யப்பட்ட அல்லது தவறான இடத்தில் நிற்பது என்பது பொருள்படும். அது விளையாட்டின் வெற்றிக்குத் தடையாகிவிடும். ஓவ் சைட்டில் ஒரு தேசமோ நாடோ சமூகமோ நிற்பது அதன் முன்னேற்றத்தற்கு எப்போதும் தடையாகி விடும் என்பது இந்தத் திரைப்படத்தினுடாக எளிமையாகவும் இயல்பாகவும் விளங்க வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் பேர்ளின் சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கர விருதையும், ஜியோன் சர்வதேச படவிழாவில் சிறந்த நடிகைக்கான விருதையும் சர்வதேச மனித உரிமைச் சபையின் சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றிருக்கிறது.

தமிழ் திரைப்படத்தற்கு ஏன் இன்னமும் ஒஸ்கார் விருது கிடைக்கவில்லை என்று பட்டி மன்றம் நடாத்துவதை விடுத்து, ஹொட்டல்களில் றூம் போட்டு கதைவிவவாதம் நடாத்துவதை விடுத்து, லொகேசன் தேடி உலகம் பூராவும் அலைவதை விடுத்து மக்களிடம் சென்று மக்களை அவர்களது வாழ்க்கையைப் படிக்க எமது நெறியாளர்கள் எப்போது முனைகின்றனரோ அப்போது தான் தமிழில் சிறந்து படங்கள் வெளியாகும். விருதுகளும் தேடி வரும்.

அதுவரை தமிழ் சினிமா ரசிகர்களின் தலைவிதி ஏய்... என்ற காட்டுக்கத்தல்கள் மட்டும் தான்.

சினிமா மட்டுமல்ல, பெண்கள் தொடர்பான பார்வையும்தான். நாங்கள் நிற்பதோ ஓவ் சைட்டில், விளையாடுவதோ தப்பான ஆட்டம். பிறகு வெற்றி பெறுவது எவ்வாறு?




Born on the fourth of July: போரின் திறக்கப்படாத பக்கங்கள்


இயக்குனர்: ஒலிவர்ஸ்ரோன்
லங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட வீடியோ கிளிப் போர்க்குற்றங்கள் தொடர்பில் புதியதொரு சர்ச்சையை உருவாக்கி விட்டிருக்கிறது. அதனை அல்ஜசீரா, பிபிஸி, சனல் 4, சி.என்.என். எனப் பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியிருப்பினும் சனல் 4 க்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே ஏற்கெனவே இருந்த முறுகல் நிலைமை காரணமாக அதனை சனல் 4 வெளியிட்டதாக இலங்கை அரசால் கொள்ளப்பட்டு அதற்கெதிரான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் ஊடக அமைச்சு முதல் இராணுவப் பேச்சாளர் வரை உடனடியாகவே அவ்வீடியோவை நிராகரித்து மறுத்துரைத்திருந்த போதிலும் அது எந்த வகையில் போலியானது என்பதனை அவர்கள் இதுவரை நிரூபிக்கவில்லை.

இராணுவத்தினரால் எடுக்கப்பட்டிருந்த அவ்வீடியோ கைமாறி தமது கைகளுக்கு வந்து சேர்ந்ததாக இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனை வெளியில் உலாவவிட்ட இராணுவத்தினருக்கு இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் நோக்கம் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் இராணுவத்தினரிடையே அவ்வாறான எவரும் இல்லாதிருக்க முடியாது என்று சொல்வதற்கில்லை. உலகம் முழுவதும் நடைபெற்ற போர்களில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரில் போரின் கொடுரங்களையும் வலியையும் உணர்ந்த அதேவேளை மனச்சாட்சியுள்ள ஒரு சிலரால் போரின் மறைக்கப்பட்ட பகுதிகள் வெளிக்கொணரப்பட்டதும் வரலாற்றின் புதிய பக்கங்கள் திறக்கப்பட்டதும் நடந்தேறியிருக்கிறது.





அண்மையில் பார்க்கக் கிடைத்த Born on the fourth of July என்ற திரைப்படம் அத்தகையதொன்று. இந்தத் திரைப்படத்தின் நெறியாளரான ஒலிவர் ஸ்ரோன் வியட்னாமுக்கெதிராக அமெரிக்கா நடாத்திய யுத்தத்தில் பங்கேற்றவர் என்பது ஒரு விடயம். அதேவேளை அந்தத் திரைப்படத்திற்கு மூலமாக இருந்த Born on the fourth of July என்பது வியட்னாம் யுத்தத்தில் பங்கு பற்றி ஊனமுற்றுத் திரும்பிய அமெரிக்காவின் சுதந்திர தினமான யூலை மாதம் நான்காம் திகதி பிறந்த றொன் கொவிக் எனும் இராணு வீரனின் வாழக்கை வரலாற்று நூலாகும். வியட்னாம் யுத்தத்தில் தனது இடுப்புக்குக் கீழான பகுதி செயலற்றுப் போக சக்கர நாற்காலியிலிருந்தபடியே தன் வராலற்று நூலை எழுதி முடித்தார் என்பதும் இன்னொரு விடயம்.

அது மட்டுமன்றி அவர் இன்றுவரை யுத்தத்திற்கெதிரான முன்னணிப் போராளியாக இருந்து வருகிறார். தனது வாழ்க்கைக் காலத்தில் யுத்தத்திற்கு எதிராகப் போராடியதற்காகப் 12 முறை சிறை சென்றிருக்கிறார். அவருடைய Born on the fourth of July என்ற அந்நூல் வியட்னாமியப் போர் பற்றிய புதிய பார்வையை வழங்கியது. அது திரைப்படமாக வெளிவந்த போது ஓரு வகையில் அத்திரைப்படம் அமெரிக்கா வியட்னாமில் நடந்து கொண்ட முறைக்காக வியட்னாமியர்களிடம் மன்னிப்புக் கோரியதாக அமைந்தது என்கின்றனர் விமர்சகர்கள்.

இந்தத் திரைப்படத்திற்கான திரைக்கதையையும், றொன் ஹொவிக்கும் ஒலிவர் ஸ்ரோனும் இணைந்தே எழுதியிருக்கின்றனர்.
Born on the fourth of July திரைப்படம் அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ஜோன் எப். கென்னடியின் உரையுடன் ஆரம்பமாகின்றது. கென்னடி நாட்டு மக்களுக்கு அதுவும் இளைஞர்களுக்கு அறிவூட்டும் வகையில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேள்வி கேட்காதே? நாட்டிற்கு நீ என்ன செய்தாய் என்று கேள்?” என அவர் இளைஞர்களைப் பார்த்துச் சொல்கிறார்.

அப்போது சிறுவனாக இருந்த ஹொவிக் தாயாருடன் அமர்ந்து அந்த உரையை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது தாயார் ஹொவிக்கிடம் சொல்கிறார் 'நீயும் ஒருநாள் இவ்வாறு பெருங் கூட்டத்தின் முன் உரையாற்ற வேண்டும். அதுவும் அவரைப் போல் உரையாற்ற வேண்டும். அப்போது பல நல்ல விடயங்களைச் சொல்ல வேண்டும்”.

இதன் தாக்கமாக அவன் இளைஞனான போது படையினருக்கு ஆட்திரட்டுவதற்கு கடற்படை அதிகாரிகள் கல்லூரிக்கு வந்த போது உடனடியாகவே அதில் இணைந்து கொள்கிறான்.

இதற்கு ஹொவிக் மட்டும் காரணமல்ல. அவருடைய றோமன் கத்தோலிக்கப் பின்னணியைக் கொண்ட குடும்பச் சூழலும் காரணமாக இருக்கிறது. அந்தக் கிராமமோ ஏற்கெனவே தேசப்பற்றால் பீடிக்கப்பட்டிருந்த ஒரு கிராமம். அத்தோடு தாயின் கண்டிப்பு மிக்க வளர்ப்பு, சிறு வயதிலிருந்தே சுறுசுறுப்பும், திறமையும் மிகுந்த வீரனாக அவனை வளர்க்கிறது.

அவனுடைய கல்லூரியில் ஒரு ஹீரோவாகவும், விளையாட்டு வீரனாகவும் அவன் இருக்கிறான். கல்வியிலும் வாழ்விலும் உயர்நிலையாக்கம் பெற உழைக்க வேண்டும் என்ற உந்தித்தள்ளலும், கண்டிப்பும் நாட்டுப்பற்றும் கொண்ட அவனுடைய நடுத்தரவர்க்கக் குடும்பச் சூழல் அவனை இராணுவத்தில் இணைந்து கொள்ள வைத்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

1966 இல் படையில் பணியாற்றச் சென்ற ஹொவிக் 1968 இல் வியட்னாமில் நடந்த மோதலில் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகிறான். வலது காலிலும், பின்னர் தோளிலுமாக துப்பாக்கிச் சன்னங்கள் பாய்கின்றன. களத்திலிருந்து மிகுந்த இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் அங்கிருந்த இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறான்.

எலிகள் சாதாரணமாகவே ஓடிவிளையாடும் எவ்வித வசதிகளுமற்ற மிக மோசமான வைத்தியசாலை அது. போதிய வைத்தியர்களோ தாதிகளோ மருந்துகளோ இல்லை. அப்படி ஒரு வைத்தியசாலையை அவன் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. ஏற்கெனவே குண்டடிபட்டதில் உடல் முழுக்க வலியுடனும், குண்டடிபட்டதன் காரணமாக இடுப்புக்குக் கீழ் செயலிழந்தும் உள்ள நிலைமை அவனை எரிச்சலடைய வைக்கிறது. இது குறித்து வைத்தியரிடம் முறையிடுகிறபோது அவர் சொல்கிறார். அரசாங்கம் போதிய வசதிகளை எமக்கு ஒதுக்கவில்லை. இருப்பவற்றை வைத்துக் கொண்டு தான் நாம் எல்லோரையும் பராமரிக்க வேண்டியிருக்கிறது என்று.

அங்கிருந்து மீண்டு அமெரிக்கா வரும் ஹொவிக் அதன் பின்னர் எதிர்கொள்ளும் சமூக யதார்த்தம் உளவியல் நெருக்கடி, மனச்சாட்சியின் உலுப்பல், வாழ்வின் மீதான காதலும் கானலும் தான் மீதிக்கதை.

அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை நான்காம் திகதியன்று சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அன்று படைவீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் அவன் பேச அழைக்கப்படுகிறான். சக்கர நாற்காலியில் இருந்தபடி பேச ஆரம்பித்த அவன் சிறிது நேரத்தில் பேச முடியாமல் திணறுகிறான். மேடையில் இருந்தபடியே கூட்டத்தை உற்று நோக்குகிறான். இரண்டு செவ்விந்தியர்களை கமெரா காண்பிக்கிறது. அதேநேரம் அவனது காதுகளுள் ஒரு குழந்தையின் அழுகையொலி கேட்க ஆரம்பிக்கிறது. அவனுடைய நினைவுகள் பின்நோக்கிச் செல்கின்றன.

கெரில்லாக்கள் இருப்பதாகக் கருதி வியட்னாமில் ஒரு கிராமத்தைச் சுற்றிவளைத்து சுட்டுத் தள்ளுகின்றனர் ஹொவிக் தலைமையிலான படைப்பிரிவினர். ஓவ்வொரு குடிசையாக தேடுதல் நடாத்தும் போது தான் தாங்கள் சுட்டது கெரில்லாக்களை அல்ல. அப்பாவிச்சனங்களை அதுவும் பெண்களையும் சிறுவர்களையும் என்று தெரிய வருகிறது.

ஓரு குடிசையில் தாய் குழந்தை ஒன்றை அரவணைத்தபடி இறந்து கிடக்கிறாள். அவளது உடலில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்திருக்கின்றன. அவளது மடியில் கிடந்த குழந்தையோ வீரிட்டுக் கத்தியபடி இருக்கிறது. தாங்கள் சுட்டது அப்பாவிச் சனங்களை என்று நம்பியிருந்த ஹொவிக்குக்கு இது அதிர்ச்சியளிக்கிறது. அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முயற்சிக்கிறான். ஆனால் கெரில்லாக்களிடமிருந்து வரும் எதிர்த்தாக்குதலில் இருந்து தப்புவதற்காக மற்றவர்கள் இவனை இழுத்துக் கொண்டு ஓடுகின்றனர். அக்குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போனது அவனது மனச்சாட்சியை அழுத்துகிறது. அது அவன் மனதில் ஆழமாய் பதிந்தும் போய்விடுகிறது. அந்தக் குழந்தையின் அழுகுரல் இறுதி மட்டும் அவனுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாது எதிரியென நினைத்து தனது சக இராணுவ வீரனொருவனைச் சுட்டுக் கொன்ற தனது செயலையும் அவனால் ஜீரணிக்க முடியாமல் போகிறது. அவனை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் இச்செயல்கள் வியட்னாமில் அமெரிக்கப்படையினரின் வீரத்தைப் பற்றி, தாய் நாட்டுக்கான அர்ப்பணிப்புப் பற்றி பேச முயன்றும் பேச விடாது அவனைத் தடுத்து விடுகிறது. அவன் பேசவில்லை. அவனால் பேச முடியவில்லை.

இன்னொருமுறை தனது நண்பர்களைச் சந்திக்க இரவு விடுதி ஒன்றுக்கு தனது சக்கர நாற்காலியிலேயே செல்கிறான். விடுதி இளைஞர்களாலும் யுவதிகளாலும் நிரம்பி வழிகிறது. இசையும் நடனமும் மதுவும் வழிந்தோடுகிறது. ஓரு யுவதி இவனை ஆட வருமாறு கேட்கிறாள். இவன் சொல்கிறான் என்னால் முடியாது. இடுப்புக்குக் கீழே எனது உடல்செயலிழந்து விட்டது என்று. ஆனாலும் அவனால் ஆடாமல் இருக்க முடியவில்லை. இளமையும் மதுவும் அவனை ஆட்டிப்படைக்கின்றன. அவன் சக்கரநாற்காலியில் இருந்தடியே அதனை உலுப்பியபடி ஆடுகிறான். ஆடலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவனது ஆசையும் மோகமும் அதனை தான் ஒரு போதும் அனுபவிக்க முடியாது என்கிற கோபமும் விரக்தியும் அதிகரித்து அவனை ஆட்கொள்ளும் போது அவன் சக்கர நாற்காலியுடன் தடாலடியாக வீழ்ந்து விடுகிறான்.

வீட்டுக்கு வரும் அவனிடம் தாயார் கேட்கிறார் மீண்டும் குடித்திருக்கிறாயா என்று. இந்த வீட்டில் யாரும் குடிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறேனல்லவா என்கிறார். ஏற்கெனவே எரிச்சலும் கோபமுற்றிருந்த அவனுக்கு இது இன்னும் சினத்தை ஏற்படுத்துகிறது. அவனது இயலாமை ஆத்திரமாகிறது. அவன் சொல்கிறான் “எனக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. இந்த விதமாய் எனது மீதி வாழ்க்கையை என்னால் கழிக்க முடியாது. நான் இறந்து போய் விட விரும்புகிறேன் என்கிறான்.

எனக்கு வியட்னாமை மறக்க முடியாதிருக்கிறது. நீங்கள் அதைப் பற்றி அறிய விரும்பவில்லை. நீங்கள் அதனைப் பார்க்க விரும்பவில்லை. நீங்கள் அதனை மறைக்க விரும்புகிறீர்கள். ஆனால் என்னாலோ இப்படி ஒரு உதவாக்கரை மனிதனாக வாழ முடியாது என்று கதறும் அவன் கொம்யூ
னிசம் அழிக்கப்பட வேண்டும். போய்ச் சண்டையிடுங்கள். போய்க் கொல்லுங்கள் என்று நீங்கள் தானே எங்களை அனுப்பினீர்கள் என்று தாயைப் பார்த்துக் குற்றம் சாட்டும் அவன் 'நீ எனது அவமானம்' என்றதோடு தூஸண வார்த்தைகளாலும் ஏசுகிறான்.

‘அம்மா நாங்கள் வியட்னாமில் சிறுவர்களையும் பெண்களையும் சுட்டுத் தள்ளினோம். கொம்யூனிசம் ஒரு பேய். போய் அதனை ஒழிக்கப் போரிடு’ என்று எனக்குச் சொல்லித் தந்தீர்கள். கென்னடி சொன்னதென்று சொல்லி போரிடப் போகச் சொன்னீர்கள். நீங்கள் சொல்லித் தந்த எல்லாமே பொய். நாடும் இல்லை. கடவுளும் இல்லை எஞ்சியிருப்பதெல்லாம் நானும் இந்த சக்கர நாற்காலியும் மட்டும் தான்.

எனது எஞ்சிய வாழ்க்கைக்கு எதுவுமே மிஞ்சவில்லை என்று சொல்லிக் கொண்டே தனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாதவனாக காற்சட்டை பட்டினைக் கழட்டி சிறுநீர் கழிப்பதற்காக தனக்குப் பொருத்தப்பட்டிருக்கும் ரியூப்பை வெளியில் எடுத்து இப்போது இது தான் எனது ஆண்குறி என்று கதறுகிறான். ஆண்குறி இருந்த போது அதனை எப்படிப் பாவிப்பது என அறியக் கூட எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்கிறான்.

ஐந்து நிமிடங்கள் திரையில் ஓடம் இந்தக் காட்சி ஊடாக ஒரு சாதாரண அமெரிக்கக் கத்தோலிக்கக் குடும்பத்தின் வாழ்முறை, நம்பிக்கைகள். உலகம் பற்றிய பார்வைகள், அதன் முரண்கள் அமெரிக்க அதிகார அரசியலுக்காகப் பலியிடப்படும் இளைஞர்கள், அதற்கு அவர்களை உந்தித்தள்ளும் ஊடகங்கள் என்று எல்லாவற்றையும் ஒரு சேரக் கொணர்ந்து விடுகிறார் ஒலிவர் ஸ்ரோன்.


இது இலங்கையில் யுத்தம் தொடங்கியது முதல் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சம்பவங்களை எம் கண் முன் கொண்டு வருகிறது.

மறுநாள் வீட்டிலிருந்து புறப்பட்டு மெக்ஸிக்கோ செல்கிறான். மெக்ஸிக்கோ விடுதிகள் பெருமளவுக்கு அமெரிக்க இராணுவத்தனரால் தான் நிரம்பியிருக்கின்றன. அங்குள்ள விபசார விடுதிகள் இந்த இராணுவத்தினருடைய ஒரே உலகம். இது கிட்டத்தட்ட இலங்கையின் அநுராதபுரத்தை ஞாபகப்படுத்துகிறது. மெக்ஸிக்கோ விடுதியும் விபச்சாரிகளும் அங்கு சந்திக்கும் நபர்களுமாக அது வேறொரு உலகமாக இருக்கிறது. ஆனால் அங்கு அவன் சந்திக்கும் இவனைப் போன்ற கால்களை இழந்த இன்னொரு இராணுவ வீரனுடைய நட்பு அவனுடனான உரையாடல், அவர்கள் இதுகாலவரை யுத்தம் என்று நம்பிய எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. தங்களை அந்நிலைமைக்கு ஆளாக்கிய பேராசைக்கார யுத்தத்திலிருந்து, அமெரிக்கா, அமெரிக்க ஜனாதிபதி என்று எல்லோரும் அவர்களின் வசவுக்கு ஆளாகிறார்கள். மெக்ஸிக்கோ அவனது வாழ்க்கையில் திருப்பு முனையாகிறது.

யுத்த எதிர்ப்பு இயக்கங்களில் ஈடுபட்டு வரும் தனது முன்னைய பெண் நண்பியைச் சந்திக்கிறான். அவளுடன் இணைந்து அதில் பங்கேற்கும் போது அமெரிக்கப்படையினரால் தாக்குதலுக்குள்ளாகிறான். அது இன்னும் அவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. யுத்தம் தொடர்பான உண்மைகள் மூடி மறைக்கப்பட்டு பேச விடப்படாது மௌனமாக்கப்படுவதை அவன் உணர்ந்து கொள்கிறான். பதிலாக முழுமையாக அவன் அதில் ஈடுபட ஆரம்பிக்கிறான்.

‘இந்தப் போர் தவறானது. 13ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள அப்பாவி மக்களுக்கு எதிராகப் போரிட நாங்கள் அனுப்பப்பட்டோம். எதிர்த்தலுக்கான பெருமைப்படத்தக்க வரலாறு ஒன்று எங்களுக்கிருக்கிறது. எங்களுடைய சுதந்திரத்திற்காக நாங்கள் நீண்ட மிக நீண்ட போராட்டம் நடாத்தியிருக்கிறோம். ஆனால் எங்களுடைய அரச தலைமை எங்களைத் தவறாக வழிநடாத்தியுள்ளது.

அமெரிக்காவை நேசிக்காத எவரும் யுத்தத்திற்கு ஆதரவாகப் பேசமுடியும். ஆனால் நான் அமெரிக்காவை நேசிக்கிறேன். ஆனால் இந்த அரசாங்கமோ ஊழல் செய்பவர்களையும் திருடர்களையும் கொள்ளைக்காரர்களையும் பாலியல் வன்புணர்வாளர்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் இப்போது உண்மையைச் சொல்லப் போகிறோம். நாங்கள் எங்களுடைய சகோதரர்களைக் கொல்கிறோம். நாங்கள் பேசுவது தான் உண்மை என்பதால் அவர்கள் எங்களைப் பேச விடுகிறார்களில்லை. ஆனால் நாங்கள் பேசுவோம்’ என்கிறான்.

போருக்கெதிரான அவது போர் இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

ஹொவிக் களத்தில் காயமடைந்த போது அவனை உடனடியாகத் தூக்கிச் சென்று காப்பாற்றுவது ஒரு கறுப்பின இளைஞன்.

வியட்னாமில் நடைபெறுவது ஒரு புரட்சி என்றும் அமெரிக்கா அதில் தலையிட்டது தவறு என்றும் முதன்முதலில் ஹொவிக்குக்குச் சொல்வது ஒரு கறுப்பின இளைஞன் தான். இது ஹொவிக் படுகாயமடைந்து வைத்தியசாலையில் இருக்கும் போது நடைபெறுகிறது.

பின்னர் போருக்கெதிரான ஆர்ப்பாட்டத்தின் போது அமெரிக்கப் படையினர் ஹொவிக்கை தாக்கும் போதும் அத்தாக்குதலிலிருந்து ஹொவிக்கைக் காப்பாற்றி தூக்கிச் செல்வதும் ஒரு கறுப்பின இளைஞன் தான்.

இவ்வாறு அமெரிக்க வரலாற்றில் கறுப்பினத்தவர்களுடைய பாத்திரத்ததை மிக அழகாக சித்திரித்து விடுகிறார் ஓலிவர் ஸ்ரோன்.

அதேபோல் போர் வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் அவன் பேச முயன்று பேச முடியாமல் போகும் காட்சியில் அவனது பார்வையில் இரண்டு செவ்விந்தியர்களை கொண்டு வருவதனூடாக அமெரிக்க வரலாறு மற்றும் வீரம் குறித்து எள்ளலான ஒரு பார்வையை அவர் நம்முன் வைக்கிறார்.

திரைப்படம் ஒரு காட்சி ஊடகம். ஓலிவர் ஸ்ரோன் காட்சிக்குறிப்புக்களால் பல விடயங்களைக் குறிப்புணர்த்தி விடுகிறார்.

இத்திரைப்படத்தைப் பார்த்து முடிக்கின்ற போது வன்னியில் போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினரில் எவரோ ஒருவர் முழு உண்மையைப் பேசத் தான் போகிறார். அந்த உண்மைகள் இன்னொரு வரலாற்றை எழுதும் என்ற நம்பிக்கை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதன் முதற் கட்டம்தான் இலங்கையில் இடம்பெற்றுள்ள போர்க் குற்றங்கள் தொடர்பாக, இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட வீடியோ கிளிப்.

000

சர்ச்சைக்குரிய அரசியல் திரைப்படங்களுக்காகப் போற்றப்படும் ஒலிவர் ஸ்ரோன் அமெரிக்காவின் ஹொலிவூட் திரைப்படத்துறையில் ஒரு கிளர்ச்சிக்காரராக இருந்து வருகிறார். சமகாலப் பிரச்சினைகளை எவ்வித சமரசங்களுமின்றி பிரதான மையநீரோட்ட அரசியலுக்கு எதிராக கலாநேர்த்தியுடன் திரைப்படங்களில் கொண்டு வருபவர்களில் ஒலிவர் ஸ்ரோனுக்கு மிக முக்கிய பங்குண்டு.

1971இல் Last Year in VietNam என்ற வியட்னாம் போர் பற்றிய குறுந்திரைப்படத்துடன் தனது திரைப்பட வாழ்வை ஆரம்பித்த ஒலிவர் ஸ்ரோன் 20க்கு மேற்பட்ட படங்களை நெறியாள்கை செய்துள்ளார்.

வியட்னாம் யுத்தத்தில் நேரடியாக பங்கு பற்றிய அனுபவம் அவரை யுத்த எதிர்ப்புத் திரைப்படங்களை எடுக்க உந்தித் தள்ளியிருக்கிறது. அவருடைய பிளட்டுன் (Platoon - 1986), போன் ஒன்த போர்த் ஒவ் ஜுலை (Born on the Fourth of July - 1989). ஹெவன் அன்ட் ஏர்த் (Heaven & Earth) ஆகிய திரைப்படங்கள் வியட்னாமுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட யுத்தத்தை எதிர்த்த திரைப்படங்களாக அமைந்தன.

இது தவிர கென்னடியின் படுகொலையை மையமாக வைத்து ஜே.எப்.கே. (JFK - 1991) மற்றும் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்சன் குறித்த நிக்சன் (Nixon - 1995) என்ற திரைப்படம் மற்றும் உலக வர்த்தக மைய தாக்குதலை மையமாக வைத்து வேல்ட் ரேட் சென்ரர் (World Trade Center - 2006) போன்ற பல சர்ச்சைக்குரிய திரைப்படங்களை நெறியாள்கை செய்துள்ளார்.

அலெக்ஸாண்டர் (Alexander - 2004) என்கிற திரைப்படத்தை நெறியாள்கை செய்ததனூடக அவர் வரலாற்றுத் திரைப்படங்களிலும் தனக்கான முத்திரையைப் பதித்துள்ளார்.

Platoon மற்றும் Born on the Fourth of July திரைப்படங்களுக்கான நெறியாள்கைக்காக அவர் ஒஸ்கார் விருதுகைளைப் பெற்றிருந்தார். Midnight Express க்காக சிறந்த திரைக்கதைக்கான ஒஸ்கார் விருதினையும் பெற்றுள்ளார்.

2003இல் கியூபாவுக்கு விஜயம் செய்த ஒலிவர் ஸ்ரோன் பிடல் காஸ்ரோவை மூன்று நாட்கள் நேர்கண்டு Comandante என்ற விவரணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளார். அதன் பின்னர் மீளவும் ஒருதடவை கியூபாவுக்கு விஜயம் செய்த அவர் லுக்கிங் ஃபோ பிடல் (Looking for Fidel) என்ற விவரணப்படத்தைத் தயாரித்துள்ளார்.