Monday, September 24, 2007

நேர்காணல் - சித்திக் பார்மக்



ஒசாமா மிகவும் அழகானதும் உருக்கமானதுமான படம். ஆனால் துன்பகரமானதும் கூட...

ஓம், அதற்காக நான் வருத்தம் அடைகிறேன். என்னுடைய நண்பர்களும் அதைப்பற்றிக் கூறினார்கள். கட்டாயம் அடுத்த தடவை ஒரு நகைச்சுவையான படத்தை எடுப்பேன்.

ஒசாமாவிற்கு திரைக்கதை வசனம் கூட நீங்களே எழுதியுள்ளீர்கள். இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்ற யோசனை உங்களுக்கு எப்பொழுது வந்தது?

நான் பாகிஸ்தானில் இருந்த போது, ஆப்கானிஸ்தான் சமூகத்தைப் பற்றிய நல்ல கதை ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். அங்குள்ள சிறுவர்கள் றோட்டோரங்களில் வேலை பார்ப்பதைப் பற்றிய நிறையக் கதைகளையும் நான் கேள்விப்பட்டேன். ஆனால், இந்தப் படத்திற்கான கதை வந்தது “சகா” விலிருந்து, “சகா” பஸ்ரன் மொழியில், பாகிஸ்தானிலுள்ள பெஸவர் என்ற இடத்திலிருந்து வெளிவரும் ஒரு ஆப்கான் பத்திரிகை.

தலிபான்களின் ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு விரோதமற்ற ஆனால் தலிபான்களால் தடைவிதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் ஒரு சிறுமி பற்றி அந்தப் பத்திரிகையில் விபரிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிறுமி தனது அழகான கூந்தலை வெட்டி, ஒரு சிறுவனைப் போல் உடையணிந்து மறைவிடத்திலுள்ள ஒரு பாடசாலைக்குச் செல்கிறாள். ஆனால் இந்த மறைவிடத்திலுள்ள பாடசாலையின் இரகசியம் வெளியாகிறது, அந்தப் பாடசாலையின் அதிபரும் தலிபான்களின் கலாசாரக் காவலர்களான அமர் பில் - மாறுப்பினால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்படுகிறார். சிறுமியின் அடையாளமும் வெளிப்படுத்தப்படுகிறது.

அதுவொரு சின்னக் கதையாகத் தான் இருந்தது. ஆனால் நெருக்கடியினாலும், நிர்ப்பந்தங்களினாலும் அந்தச் சிறுமி, சிறுவனாக மாறியதையிட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அதுவும் ஒரு வித பாசிசம் தான். உண்மையாகவே இத்தகையதொரு கதை தான் என்னுடைய படத்திற்குத் தேவையாயிருந்தது. அதன் பிறகு நான் திரைக்தையை எழுத ஆரம்பித்தேன், அதற்காக வேறு சில கதைகளையும் திரட்ட ஆரம்பித்தேன். ஆனால் அது சின்ன விடயமாக இருக்கவில்லை.

இப்போது நீங்கள் காபூலிலா இருக்கிறீர்கள்?

ஓம். ஆறு வருடங்கள் பாகிஸ்தானிலிருந்ததன் பிறகு நான் என்னுடைய குடும்பத்துடன், என்னுடைய அம்மா, அப்பா, மனைவி, இரண்டு மகள்கள், மகனுடன் காபூலில் வசித்துக் கொண்டிருக்கிறேன்.

திரும்பவும் உங்களின் வீட்டிற்குப் போக அனுமதியளித்த போது எப்படி உணர்ந்தீர்கள்?

அது ஒரு சிறப்பான உணர்வாக இருந்தது. நான் மீள்பிறவி எடுத்த மாதிரி இருந்தது. என்னால் ஒருபோதும் பனிப்பொழிவை மறக்க முடியவில்லை. பனிப் பொழிவுடனான ஆப்கானிஸ்தானின் இந்தக் காட்சியை நான் விரும்புகிறேன். அது கடவுள் நல்வரவு கூறுவது போல் இருந்தது.

நீங்கள் பாகிஸ்தானில் இருந்தபோது உங்கள் படங்களிற் பலவற்றை தலிபான்கள் அழித்தனர். அவற்றை உங்களால் மீளவும் பெற முடிந்ததா? அவற்றுக்கு என்ன நடந்தது?

என்னுடைய படங்கள் மட்டுமல்ல. மற்றைய இயக்குனர்களின் படங்களும் அழிக்கப்பட்டு விட்டன. தலிபான்கள் என்னுடைய வீட்டைச் சோதனையிட்ட போது என்னுடைய 8 மி.மீ கமெராக்கள், புகைப்படங்கள், புரஜெக்டர்கள், எல்லாவற்றையும் அழித்து விட்டனர். பர்மியனிலுள்ள புத்தர் சிலையை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாமல், தேசிய கலைக்கூடம், தேசிய திரைப்படச் சுவடிக்கூடம், வானொலி கலைக்கூடம் ஆகியவற்றையும் தலைவர் முல்லா ஒமரின் கட்டளைப்படி அவர்கள் அழித்தொழித்தனர்.

உண்மையில் அவர்கள் திரைப்படச் சுவடிக் கூடத்திலிருந்தே தாக்குதலை ஆரம்பித்தார்கள். அதிர்ஷ்டவசமாக ஆப்கான் திரைப்படக் கல்லூரியிலிருந்த நல்ல இதயம் கொண்ட நண்பர்கள் சிலர் முக்கிய கட்டிடத்தின் கதவைப் பூட்டி, மூலப் பிரதிகளைத் தரைச்சட்டங்களுக்குக் கீழும், இருட்டறைகளிலும், கூரையின் மேலும், திரைகளுக்குப் பின்னாலுமென எல்லா மறைவிடங்களிலும் ஒளித்து வைக்க ரம்பித்தனர். அவர்கள் மின்சாரத்தையும் துண்டித்து விட்டதால் அந்தத் திரைப்படக் கூடம் முழுவதும் இருட்டாக இருந்தது.

தலிபான்களுக்கு அந்தக் கட்டிடத்தின் அமைப்புத் தெரிந்திருக்கவில்லை. ஆகவே மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் கட்டிடத்திற்கு வெளியே இருந்த சில பிரதிகளை அவர்கள் கண்டு பிடித்து விட்டனர். அவற்றுள் ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்த பல சிறந்த திரைப்படங்களும் இருந்தன. இரண்டு அல்லது மூன்று பிரிட்டனிலிருந்து வந்தவை. அண்ணளவாக அங்கிருந்த 2600 திரைப்படங்களை தலிபான்கள் எரித்தனர். அந்த இடத்தில் தான் நாங்கள் சுவடிக் கூடத்திற்கான புதிய கட்டிடம் ஒன்றை அமைக்க இருந்தோம். உண்மையிலேயே அது ஒரு பெரிய அனர்த்தமாகும்.

ஆப்கானிஸ்தானில் திரைப்படங்களின் தற்போதைய நிலை என்ன?

பாகிஸ்தான், லாகூரைச் சுற்றி 134 தியேட்டர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் 1978 இற்குப் பிறகு எல்லாமாக 25 தியேட்டர்கள் இருந்தன. அதில் 18 காபூலில் இருந்தது. இதிற் பல யுத்தத்தில் அழிந்து விட்டன.

சினிமா குறித்து சொல்வதானால், நாங்கள் உண்மையாகவே ஆக்கநிலையில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, நான் அரசாங்கத்தின் எந்த விதமான உதவியும் இல்லாமல் ஒசாமாவை எடுத்துள்ளேன். ஆப்கான் சினிமா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டைப் பெற்று என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து செயற்பட்டது நல்ல அனுபவமாகவும் இருந்தது. ஆனால் எல்லா அரசாங்கங்களும் கட்டாயம் தங்களுடைய திரைப்பட நிறுவனங்களுக்கு உதவித்தொகையளித்து ஆதரவளிக்க வேண்டும். அவ்வகையான ஒரு சமூகம் உருவாகினால் திரைப்பட இயக்குனர்களுக்கும் சுதந்திரம் கிடைக்கும். நாங்கள் இப்போது அதனையே செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.

நீங்கள் ஆப்கான் சிறுவர்களின் கல்விச் செயற்பாட்டாளராகவும் இருக்கிறீர்களே...

பிரபல ஈரான் திரைப்பட நெறியாளரான மொக்சென் மக்மல்பவ் கூட ஆப்கானின் நல்ல நண்பனாக இருக்கிறார். அவர் தன்னுடைய கந்தகார் படத்தை உருவாக்கிய பிறகு செப்ரெம்பர் 11 க்கு முன்னர், ஈரானிய எல்லையிலுள்ள அகதிச் சிறுவர்களுக்கு ஆப்கானிய சிறுவர் கல்வி இயக்கத்தினூடாக கல்வி புகட்ட வேண்டுமென்று தீர்மானித்தார். ஆப்கானியச் சிறுவர்கள் கல்வி கற்க அனுமதிக்கக் கூடியவாறு ஈரானிய அரசாங்கம் ஒரு விசேட சட்டத்தை அமுலாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிறுமிகள் உட்பட, நடிப்பாற்றலுள்ள பல சிறுவர்களை பாடசாலைகளிலிருந்தும், சிறுவர் இல்லங்களிலிருந்தும், தெருவோரங்களில் இருந்தும் நாங்கள் கண்டு பிடித்தோம். ஒசாமாவில் நடித்த பல நடிகர்கள் நிஜவாழ்க்கையில் தெருவோரச் சிறுவர்களாக இருந்தவர்கள். இந்த தெருவோரச் சிறுவர்களிலிருந்து சிறந்த திரைப்பட இயக்குனர்களை உருவாக்க முடியுமென்ற நம்பிக்கையும் எனக்கிருந்தது. அவர்களுடைய எண்ணப்படி விவரணப் படங்களையும், குறுந்திரைப் படங்களையும் தயாரிப்பதற்கு நாங்கள் அவர்களுக்குக் கற்பிக்க முயன்றோம். அதற்கான வேறு சில வசதிகளையும் செய்து கொடுத்தோம்.

தொலைக்காட்சியோ, திரைப்படங்களோ இல்லாத நாடொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுவர்கள் ஒசாமாவில் தங்களை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளது ஒரு வித்தியாசமான அனுபவமல்லவா?

மக்கள் தாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில் தங்களுக்குள்ளே வைத்திருக்கும் வலிகளையும், ஞாபகங்களையும், அனுபவங்களையும் இப்பொழுது வெளிப்படுத்த விரும்புகிறார்கள். இந்த அழிவுகளின் உண்மையின் பெரும் பகுதியாக சிறுவர்கள்தான் இருக்கிறார்களென நான் அபிப்பிராயப்படுகிறேன். அவர்களுக்கு அவர்களுடைய அனுபவங்களும் இருக்கின்றன. ஒசாமாவில் அவர்கள் அவற்றை வெளிப்படுத்தியிருப்பதைப் பாருங்கள். அவர்கள் தங்களுக்குள் பெருமளவு விவாதங்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஆப்கானிய மக்கள் இசை, ஆடுதல், பாடுதல் போன்ற களியாட்டங்களில் விருப்பமானவர்களாக இருக்கிறார்கள். இது எங்களுடைய கலாசாரத்தின் ஒரு பகுதி.

என்னுடைய புரிதல் என்னவென்றால் இவையெல்லாம் இஸ்லாமுக்கு எதிரானவை அல்ல என்பது தான். மேற்கத்தைய ஊடகங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற சொற் பிரயோகத்தைப் பயன்படுத்துவதையிட்டு நான் வருத்தமடைகிறேன். மூடநம்பிக்கை மூடநம்பிக்கை தான். ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு கலாசாரத்திலும், ஜனநாயக கலாசாரத்திலும் கூட இந்த மாதிரியான பிரச்சினைகளை நீங்கள் காண்பீர்கள்.

அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் எண்ணம் உள்ளதா?

அரபி, துருக்கி, பார்ஸி போன்ற மிகப்பெரிய இலக்கியச் செழுமை மிக்க மொழிகள் உள்ள நாடுகள் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளாக உள்ளன. ஆனால் உண்மையாகவே உருது மொழி கவித்துமானது. ஆப்கானிஸ்தானுக்கு மொஹமட் இக்பால் முன்னுதாரணம் கொண்ட கவிஞர். சந்தர்ப்பம் வாய்த்தால் ஒருநாள் அவருடைய நல்ல கவிதையில் ஒன்றைத் திரைப் படமாக்குவேன்.

ஒசாமாவில், அதிகளவு நம்பிக்கையின்மையையும், அதிகளவு சந்தோசமின்மையையும் காட்ட வேண்டுமென்ற தேவை எனக்கிருந்தது. அடுத்த தடவை, இன்னொரு விதமான உண்மை நிலையினைப் படமாக்க வேண்டும், அதுவொரு துன்பம் கலந்த நகைச்சுவையாகவும் இருக்கலாம். திரும்பவும் நான் சிறுவர்களுடன் வேலை செய்வேன், ஆனாலும் அடுத்த தடவை வயதானவர்களுடன் எனக்கு வேலை செய்ய வேண்டி இருக்கிறது. ஏனெனில் அவர்கள் பல தவறுகளை மேற்கொள்கிறார்கள். அவற்றுட் சிலவற்றை நான் சொல்ல வேண்டியிருக்கிறது.

படத்தின் கடைசியில் பெண்கள் எல்லோரும் ஏதோவொரு பெரிய சிறைக்குள் இருப்பது போன்ற குறியீடு காட்டப்படுகிறது. அவை வரலாற்று ரீதியாக ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையிலான ஏற்றத்தாழ்வையே காட்டுகிறது... ...

ஜனநாயக சமூதாயத்தில் கூட, மக்கள் ஆண், பெண் என்று இரு பிரிவாகவே சிந்திக்கின்றனர். அது இன்னதென்று இனம் புரியாத ஆணுக்கும் பெண்ணுக்குமான உள்ளுறைந்த பிரச்சினை. கீழைத்தேச சமுதாயத்தில் அது கூடுதலாகத் தெரிகிறது, ஆனால் எல்லா இடங்களிலும் அது இருக்கிறது. ஆண்கள் அதிகளவில் ஆணவம் கொண்டவர்கள். சமுதாயத்தில் தங்களுக்கு இருக்கும் இடத்தைப் பெண்கள் பறித்து விடுவார்களோ என்று ஆண்கள் பயப்படுகிறார்கள்.
இன்று காபூ
லிலும், பெண்களுடைய சொந்த பெண்ணிய நிறுவனங்கள், காரியாலயங்கள், அவர்களுடைய சொந்த அரசியற்கட்சி, பெண்களுக்கு மட்டுமேயான வானொலி நிலையம் போன்றவற்றை நீங்கள் பார்க்கலாம். ஆண்களுக்கு அந்தக் கதவு மூடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இது ஒருவித சிக்கலாகவும் இருக்கலாம்.

இந்த அபிவிருத்திகள் கூட ஒரு சாதகமான முன்னேற்றமே. ஆனால் கட்டாயம் காபூல் மட்டுமே ஆப்கானிஸ்தான் அல்ல என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். கீழுள்ள சின்னக் கிராமங்கள் உட்பட எல்லா இடங்களிலும் பெண்களுக்கான செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். ஆயினும் அவர்கள் இன்னமும் பல பிரச்சினைகளை எதிர் கொண்டாவாறே இருக்கிறார்கள்.

அங்கேயுள்ளவர்கள் விதவைகள், தங்களுடைய சகோதரர்களை, கணவன்மாரை, தந்தைமாரை இழந்தவர்கள். அவர்கள் எல்லோரும் அனாதைகள். ஒரு வேலையோ, வசதி வாய்ப்புக்களோ, அடிப்படையான பொருட்களோ கூட அவர்களிடம் இல்லை. அவர்கள் வசிப்பிடங்கள் இல்லாமையால் தெருவோரங்களில் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளவர்கள். ஆனால் அது கூடப் போதுமானதல்ல. மனித ஆன்மாவைத் திருப்பிக் கட்டியெழுப்புவது மிகவும் கடினமானது. அதற்காக நாங்கள் எதனை உருவாக்கிக் கொண்டிருக்கிறோமென நான் யோசிக்கிறேன், இதன் பலன்களை அடுத்த தலைமுறையில் மட்டும் தான் நாங்கள் பார்க்கலாம். அது அடுத்த தலைமுறைக்குப் பின்பாகவும் இருக்கலாம்.

சரிநிகர்

மார்ச் - ஏப்ரல், 2007







No comments: